ஆளுமை:விபுலாநந்தர், சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விபுலானந்தர், சாமித்தம்பி
தந்தை சாமித்தம்பி
தாய் கண்ணம்மா
பிறப்பு 1892.03.27
இறப்பு 1947.07.19
ஊர் காரைதீவு
வகை கல்வியியலாளர், இசை ஆய்வாளர், எழுத்தாளர்,
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மயில்வாகனன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சா. விபுலானந்தர் (1892.03.27 - 1947.07.19) மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த இசை ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் கண்ணம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்தார்.

புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்ற இவர் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் தோன்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

1817ஆம் ஆண்டில் கல்முனை அரசினர் நுண்தொழிற்கல்லூரியில் இரசாயன உதவி ஆசிரியராக பணியாற்றியதோடு யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் இரசாயன சாத்திர விரிவுரையாளராக கடமையாற்றினார். இக்காலத்தில் லண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.சி பரீட்சையில் சித்தியெய்தினார். 1920ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கத்தின் மீளெழுச்சிக்காக பங்காற்றியதோடு நாளடைவில் சங்கத்தின் பண்டிதர் பரீட்சையின் பரீட்சகராகவும், கெளரவ உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

1922ஆம் ஆண்டு இவர் சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்துகொண்டதோடு 'இராமகிருஷ்ண விஜயம்' என்னும் தமிழ் மாதாந்த வெளியீட்டுக்கும் 'வேதாந்த கேசரி' என்னும் ஆங்கில மாத வெளியீட்டுக்கும் ஆசிரியராக விளங்கினார். செந்தமிழ், தமிப்பொழில் ஆகிய வெளியீடுகளில் கட்டுரைகளையும் எழுதிவந்தார். 1924ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி தினத்தில் இராமகிருஷ்ண மடாலயங்களின் தலைவர் சர்வானந்தர் அவர்களால் பண்டிதர் மயில்வாகனன், சுவாமி விபுலானந்தர் என நாமம் சூட்டப்பட்டார். 14ஆண்டுகளாக இசைத்துறையில் இவர் செய்துவந்த ஆய்வின் பயனாக 'யாழ் நூல்' எனும் இசை ஆய்வு நூலைனை ஆக்கி 1947.6.5 இல் இந்தியா, திருக்கொள்ளம்பூதூர் திருக்கோயிலில் ஆளுடையபிள்ளை முன்னிலையில் அரங்கேற்றினார். இவற்றுடன் நாடகத் தமிழிற்காய் 'மதங்க சூளாமணி' என்னும் நூலையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 209 பக்கங்கள் 65-67
  • நூலக எண்: 226 பக்கங்கள் 01-119
  • நூலக எண்: 336 பக்கங்கள் ii-xxiii
  • நூலக எண்: 3979 பக்கங்கள் 01-18
  • நூலக எண்: 5159 பக்கங்கள் 01-02
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 03-08
  • நூலக எண்: 963 பக்கங்கள் 198-205


வெளி இணைப்புக்கள்