ஆளுமை:உமாச்சந்திரா, பிரகாஷ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உமாச்சந்திரா, பிரகாஷ்
தந்தை செல்வநாயகம்
தாய் புனிதவதி
பிறப்பு 1977
ஊர் சாவகச்சேரி
வகை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமாச்சந்திரா, பிரகாஷ் (1977 - ) யாழ்ப்பாணம், மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் புனிதவதி. இவர் மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் உயர்தரக் கல்வியும் கற்றவர். ஊடகத்துறையில் டிப்ளோமாக் கற்கை நெறியைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர்.

2001 ஜூன் 11 ஆம் திகதி கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வானொலி சேவைகளில் ஒன்றான சக்தி எப்.எம் இல் அறிவிப்பாளராக இணைந்து 2009 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான தனது சேவைக்காலத்தில் பல வானொலி நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், சக்தி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றி, சிரேஷ்ட நிறைவேற்று அறிவிப்பாளராக தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் 2009 டிசம்பர் 8 ஆம் திகதி முதல் உதவி ஊடக முகாமையாளராக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் (வீரகேசரியில்) இணைந்து கொண்டார். யாழ் மண் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் கலைக்கேசரி மாதாந்த சஞ்சிகையின் இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

2010 இல் இந்தியாவின் கோவை மாநகரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டில் வீரசேகரி சார்பாகக் கலந்து கொண்டவர். மேலும் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வீரகேசரி பத்திரிகைக்காக கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையமைப்பில் செந்தமிழ்ப் பாடலை உருவாக்கும்

முயற்சியில் ஈடுபட்டவர். இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஆட்களப் பதிவகம் (LK Domain Regestry) இணைந்து நடத்திய இணையத்தளங்களுக்கான போட்டியில் இரண்டு தடவைகள் வெற்றி (வெண்கலப் பதக்கம் மற்றும் தேர்ச்சி) பெற்றவர்.


வீரகேசரிப் பத்திரிகை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'யாழ்ப்பாண வாழ்வியல்'; கண்காட்சியின் பொருட்டு முக்கிய பங்காற்றியவர். வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றும் காலத்தில்

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரையின் வழிகாட்டலில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி எழுத்துத் துறையில் தன்னை வளர்த்துக் கொண்டவர். அதுமாத்திரமல்லாமல் அக்காலப் பகுதியில் பல தனியார் விளம்பர நிறுவனங்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சி
விளம்பரங்களின் விளம்பரப் பிரதிகளை உருவாக்கி, விளம்பரத்துறையிலும் தன்னை வளர்த்துக் கொண்ட இவர், 2013 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 09 ஆம் திகதி வரை வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றினார்.

மீண்டும் 2013 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சக்தி தொலைக்காட்சி செய்தி முகாமையாளராகக்

கடமையாற்றியவர். இவரது சேவைக் காலப் பகுதியில் சக்தி தொலைக்காட்சி செய்தி சேவையானது, மக்கள் விருதான நெல்சன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சக்தி தொலைக்காட்சியின் முகாமையாளராகக் கடமையாற்றி வரும் இவர், தற்போது எழுத்துத்துறையிலும்

பிரவேசித்துள்ளார். மேலும் பெண்களை வலுப்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் சக்தி தொலைக்காட்சி சார்பாகப் பங்குபற்றி வருகிறார். தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்ற இவர் தனது ஆளுமையால் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கும் ஆற்றல் கொண்டவர்.


வீரகேசரியில் பணியாற்றிய வேளையில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக ‘பெட்டகம்’ என்னும் நூல் வீரகேசரி வெளியீடாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. யாழ்ப்பாண மக்களின் வரலாறு, கலை, கலாசாரம்,

பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியலை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு அந்நூல் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் யாழ்ப்பாண வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நல்லூர் இராச்சியத்தில் அமைந்திருந்த கோயில் தொடக்கம் இன்றுள்ள பெருங்கோயில் வரையான வரலாற்று அத்தியாயங்களில் எதிர்கால சந்ததிக்கு தேவையாக முக்கிய விடயங்களைப்

பதிவு செய்யும் வகையில் 'நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயில்' என்னும் நூலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் மற்றும் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அடுத்த அதிகாரி சயந்தன
மாப்பாண முதலியார் ஆகியோரின் வழிகாட்டலில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.