ஆளுமை:உமாச்சந்திரா, பிரகாஷ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உமாச்சந்திரா, பிரகாஷ்
தந்தை செல்வநாயகம்
தாய் புனிதவதி
பிறப்பு 1977
ஊர் சாவகச்சேரி
வகை வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமாச்சந்திரா, பிரகாஷ் (1977 - ) யாழ்ப்பாணம், மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் புனிதவதி. இவர் மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் உயர்தரக் கல்வியும் கற்றவர். ஊடகத்துறையில் டிப்ளோமாக் கற்கை நெறியைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர்.

2001 ஜூன் 11 ஆம் திகதி கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வானொலி சேவைகளில் ஒன்றான சக்தி எப்.எம் இல் அறிவிப்பாளராக இணைந்து 2009 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான தனது சேவைக்காலத்தில் பல வானொலி நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றி, சிரேஷ்ட நிறைவேற்று அறிவிப்பாளராகத் தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் 2009 டிசம்பர் 8 ஆம் திகதி முதல் உதவி ஊடக முகாமையாளராக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் (வீரகேசரியில்) இணைந்தார். யாழ் மண் இணையத்தளத்தின் ஆசிரியராகவும் கலைக்கேசரி மாதாந்தச் சஞ்சிகையின் இணைப்பாளராகவும் பணியாற்றினார். பல தனியார் விளம்பர நிறுவனங்களுக்காக வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களின் விளம்பரப் பிரதிகளை உருவாக்கிய இவர், 2013 ஜீலை 09 ஆம் திகதி வரை வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றினார். மீண்டும் 2013 ஜீலை 10 ஆம் திகதி தொடக்கம் 2014 நவம்பர் 13 ஆம் திகதி வரை சக்தி தொலைக்காட்சிச் செய்தி முகாமையாளராகக் கடமையாற்றியவர். மேலும் பெண்களை வலுப்படுத்தும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் சக்தி தொலைக்காட்சி சார்பாகப் பங்குபற்றி வருகின்றார். தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்ற இவர், தனது ஆளுமையால் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கும் ஆற்றல் கொண்டவர்.

2010 இல் இந்தியாவின் கோவை நகரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டில் வீரசேகரி சார்பாகக் கலந்து கொண்டவர். மேலும் 2010 ஆம் ஆண்டில் வீரகேசரிப் பத்திரிகைக்காகக் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையமைப்பில் செந்தமிழ்ப் பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். வீரகேசரிப் பத்திரிகை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'யாழ்ப்பாண வாழ்வியல்'; கண்காட்சியில் பங்காற்றியவர். இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக ‘பெட்டகம்’ நூல் வீரகேசரி வெளியீடாக 2015 ஏப்ரலில் வெளியானது. அந்நூல் யாழ்ப்பாண மக்களின் வரலாறு, கலை, கலாசாரம் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியலைக் கருப்பொருளாகக் கொண்டது. மேலும் யாழ்ப்பாண வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நல்லூர் இராச்சியத்தில் அமைந்திருந்த கோயில் தொடக்கம் இன்றுள்ள பெருங்கோயில் வரையான வரலாற்று அத்தியாயங்களில் முக்கிய விடயங்களைப் பதிவு செய்யும் வகையில் 'நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயில்' என்னும் நூலை 2016 ஆகஸ்ட் 8 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

இலங்கை மொரட்டுவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆட்களப் பதிவகம் (LK Domain Regestry) இணைந்து நடத்திய இணையத்தளங்களுக்கான போட்டியில் இரண்டு தடவைகள் வெற்றி (வெண்கலப் பதக்கம் மற்றும் தேர்ச்சி) பெற்றவர். இவரது சேவைக் காலப் பகுதியில் சக்தி தொலைக்காட்சி செய்திச் சேவையானது, மக்கள் விருதான நெல்சன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.