நிறுவனம்:திரு/ செம்பிமலை சிவன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:40, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செம்பிமலை சிவன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் குச்சவெளி
முகவரி செம்பிமலை, குச்சவெளி, திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


மட்டக்களப்பைச் சேர்ந்த சோமேஸ்வரானந்தகிரி என்ற செம்பிமலை சுவாமி அவரது கனவில் இறைவன் தோன்றி கூறிய படி, இவ்வாலயம் 1926 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு 1938.08.29 அன்று புனருத்தானம் செய்து மூலமூர்த்தியாக செம்பீஸ்வரரர் எனும் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அவ்விடமே இன்று செம்பிமலை சிவன் ஆலயமாக உள்ளது. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல ஆண்டுகளாக குறித்த இடத்திற்கு மக்கள் செல்ல முடியாமல் ஆலய வழிபாடு இன்றி காணப்பட்ட போதிலும், தற்பொழுது ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குச்சவெளி, கும்புறுபிட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னைய காலத்தில் நாகராஜன் என்னும் மன்னனது ஆட்சிக்காலத்தில் இவ் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டதாகவும் அக்கோயிலுக்கென மலையினைச் சூழவுள்ள வயல் நிலங்களையும் உரித்தாக்கினார் எனவும் அறியமுடிகின்றது.

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட கட்டுக்குளப்பற்று கிராம மக்களினால் இவ்வரலாற்று புனித ஸ்தலத்தை பராமரித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அந்த வகையில் ஆலயத்திற்கு செல்லும் வழியில்,கரைச்சிவெளி என்னும் பகுதியில் தானாகத் தோன்றிய மூலாதார மூர்த்தி விநாயகர் ஆலயம் ஒன்று காணப்படுகிறது. இம்மக்கள் மத்தியில் கோயிலின் வரலாற்றை பற்றிய ஐதீக கதை ஒன்று பேசு பொருளாக உள்ளது. இக்கோயிலின் தோற்றம் பற்றி அறிய முடியாத போதும் குடிமக்களிடையே ஆரம்பகால மக்கள் பஞ்சம் காரணமாக அள்ளக்கிழங்கு தோண்டுவதற்காக காட்டுக்குச் சென்றபோது அங்கு கிழங்கில் இருந்து இரத்தம் வந்ததாகவும் அக்கிழங்கு அங்கு விநாயகர் பெருமானாக வந்ததாகவும் புராணக்கதைகளில் கூறப்படுகின்றது. இதற்குரிய ஆதாரமாக, அக் கோயிலின் தென்மேற்கு மூலையில் காணப்படும் கோபுரத்தின் ஒரு சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செல்லும் வழியில் வழிப்பிள்ளையார் என குடிகளால் கூறப்படும் சிவலிங்கத்தை உடைய கோயிலும் உள்ளது. அவ்வழியே செல்லும் அனைத்து மக்களும் அக்கோயிலை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அக்கோயிலை வழிபடாமல் சென்றால் தமக்கு ஏதும் நேர்ந்திடுமோ அல்லது தீங்கு ஏற்படுமோ என்று குடிக்களிடையே நம்பிக்கை காணப்படுகின்றது. அதனை சுற்றியுள்ள பிரதேசங்கள் 1984 ஆம் ஆண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சில பிரதேசங்கள் கைவிடப்பட்டும் சில பிரதேசங்கள் காடுகளாகவும் காணப்படுகிறது. இப்பிரதேச உரிமையாளர்கள் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்கள் வேறு நாடுகளுக்கும் சென்று விட்டனர். இதனால் நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் தரிசு நிலங்களாக அப்பகுதி காட்சி அளிக்கின்றன. மக்களின்களின் நேர்காணலுக்கிணங்க 1990ல் கரைச்சவளி கிராமத்தில் 30-50 குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தசூழ்நிலைகள் காரணமாக வழிபாடுகளைத் தொடரமுயாத நிலை ஏற்பட்டிருந்தது. 2013-ஆம் ஆண்டில் மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீகிருஸ்ணன் ஆலயத்தை அடியொற்றி சுவாமி அவர்களின் வழியினைப் பின்பற்றி வாழ்ந்த குடும்பத்திலிருந்து திரு. நே. பிருந்தாபன் (இந்து கலாசார அலுவலர்) அவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக, பக்தர்களின் கூட்டு முயற்சியுடன் 2014.02.14 ஆந் திகதி முதல் மாதா மாதம் வருகின்ற பூரணை தினத்தில் மலையடிவாரத்தில் உள்ள இராணுவ படையினரின் அனுமதியுடன் உழவு இயந்திரத்தில் காட்டுப் பாதை வழியாக சுவாமி அவர்களின் வழிமுறையில் மக்கள் சென்று சிறப்பு பூசை வழிபாடுகஸை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடங்களை தாண்டியே செம்பிமலை சிவன் ஆலயத்திற்கு செல்ல முடிகின்றது. இதனைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகள் காணப்படுவதோடு அங்கு ஒரு விகாரை ஒன்று காணப்படுகின்றது. கோயிலானது மலையடிவாரத்திலிருந்து அதாவது ராணுவ முகாமில் இருந்து சுமார் 0.5 Km மேல் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயில் மண்டபத்துடன் வீடு போன்ற அமைப்பில் கதவுகள் சீர் இல்லாத நிலையில் ஓடுகள் உடைந்த நிலையில் பாழடைந்தும் காணப்படுகின்றது.

இக்கோயிலின் இடப் பக்கம் சோமேஸ்வரானந்தகிரி சுவாமி அவர்களின் சமாதியும் காணப்படுகிறது. இது செம்பிமலைச் சுவாமியின் கட்டளைப்படி கட்டப்பட்டதாகும். ஒரு காலத்தில் சுவாமி அவர்கள் தான் தியானத்தில் இருக்கப்போவதாக கூறி, தன்னைச் சுற்றிலும் முற்றாக சீமெந்துக் கட்டடத்தினால் மூடிக் கட்டி விடுமாறும் கூறினார். அதன்படி அமைக்கப்பட்ட கட்டடமே இதுவாகும். கோயிலின் மேற்குப் புறத்தில் படிக்கட்டுகளும், தெற்கு புறத்தில் இடிந்த வரலாற்று எச்சங்களும், இரண்டு தூண்களும், கேணிகள், கல்வெட்டுகள் என்பன காணப்படுகின்றன. 7 கேணிகளில் 2 கேணிகள் கோயிலின் ஆரம்பத்தில் உள்ளன. முதலாவது கேணியில் மக்கள் நீராடி கோயிலிற்கு செல்வார்கள். ஆனால் இரண்டாவது கேணியில் இருந்தே கோயிலுக்கு தேவையான தீர்த்தங்கள், அபிசேகங்கள், நெய்வைத்தியம் போன்றவற்றுக்கான நீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது.

கோயிலில் தீர்த்தக் கிணற்றில் இருந்து பாவனைக்காக காலம் காலமாக தண்ணீரை எடுத்தாலும் அது வற்றாமலே காணப்படுவதோடு இது ஒரு நன்னீர் ஊற்றாகும். மகாசிவராத்திரி அன்று அக்கோயிலில் விழித்து இருப்பவர்களுக்கு 07 நட்சத்திரங்கள் காட்சியளிக்கும் என்ற ஐதீகமும் உண்டு .

ஆரம்பகாலத்தில் நித்திய பூசை நடைபெற்று அன்னதானம் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் போரின் பின்னர் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் மக்கள் பூசை செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெறவில்லை. தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி பூசைகள் இடம்பெற்று வந்த போதிலும் தற்போதைய காலத்தில் பூசாரி பற்றாக் குறையினால் பௌர்ணமி பூசைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் நிர்வாகத்தினரால் ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு பௌர்ணமி தினமும் பூசைகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அதற்குரிய பொருளாதார செலவுகளும் அவ்வூர் மக்களே ஏற்றுக் கொள்கின்றனர். ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும் நிர்வாகம் மாற்றப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது முதலாவது பூசை குச்சவெளி நிர்வாகசபை பொறுப்பெடுத்து செய்கின்றது. மகாசிவராத்திரி அன்று அனைத்து மக்களுக்கும் பொது பூசையாக அமைகின்றது.

இக்கோயிலுக்கு மட்டகளப்பு செட்டிபாளையம், குருக்கள்மடம், களுதாவளை போன்ற கோயில்களுடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அக்கோயில்களை அமைத்த ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி என்பவரே இக் கோயிலையும் அமைத்தார் என வரலாறு கூறுகின்றது. இக்கோயிலில் நடைபெறும் பூஜைகளுக்கு மட்டக்களப்பில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். தீர்த்தக் கிணற்றில் அதாவது இரண்டாவது கேணியில் பெண்கள் தீர்த்தமாட கூடாது தீண்ட கூடாது என ஐதீகம் உண்டு.