நிறுவனம்:அம்/ ஶ்ரீ முருகன் தேவஸ்தான கண்ணகி அம்மன் ஆலயம்

From நூலகம்
Name ஶ்ரீ முருகன் தேவஸ்தான கண்ணகி அம்மன் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address ஶ்ரீமுருகன் தேவஸ்தான கண்ணகி அம்மன் ஆலயம், அம்பாறை
Telephone -
Email -
Website -


ஶ்ரீ முருகன் தேவஸ்தான கண்ணகி அம்மன் ஆலயமானது அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் முருகன் கோயில் வீதியில் அமைந்துள்ளது. இகோயிலானது கி.பி. 1075ம் ஆண்டு அமைக்கப்பட்டு கல்முனையின் மூன்று குறிச்சி மக்களும் ஒற்றுமையாக இவ்வாலயத்தை வணங்கி வந்துள்ளனர்.

இதனால் இக்கோயில் மூன்று பாகக் கோயில் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பூசகராக இருந்த நாகமணி என்பவர் உடன் செய்யப்பட்ட பச்சைக்களிமண்ணினால் ஆன பானையை அடுப்பில் வைத்து பொங்கல் செய்வது அதிசய நிகழ்வாக கருதப்பட்டு வந்தது. கல்முனை மூன்று குறிச்சி மக்களும் ஒற்றுமையாக இக்கோவிலை நிர்வகித்து வந்தனர்.

இவ்வேளையில் 1947ம் ஆண்டு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஆலய நிர்வாகம் பிரிவுற்றது. இருந்தும் இவ்வாலயத்தின் பூசைகள் நடந்து கொண்டேதான் இருந்தன. வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியை அண்மித்துள்ள திங்கட்கிழமைகளில் குளிர்த்தி பாடுவது வருடாந்த விசேட உற்சவமாகும். இதனை விட உற்சவ காலத்தில் கடற்கரையில் மண் எடுத்தல், கல்யாணக்கால் என்பன குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

குளிர்த்தி பாடி செவ்வாய்க்கிழமை காலையில் கதவடைப்பு நடைபெறும். இதன் பின்னர் முன்றாம் நாள் இடம்பெறும் வயிரவர் பூசையில் நூற்றுக்கு மேற்பட்ட றொட்டிகள் தயாரிக்கப்பட்டு வயிரவருக்கு படையில் செய்யப்பட்டு விசேட பூசை இடைபெறும். பூட்டப்பட்ட ஆலயம் மீண்டும் எட்டாம் நாள் திறக்கப்பட்டு அன்றையை தினம் மட்டும் விசேட பூசை நடைபெறும்.

இப்பூசை எட்டாம் நாள் சடங்கு அல்லது தெளிவு சடங்கு என அழைக்கப்படும். ஆலய உற்சவத்தின் போது துடக்கு போன்ற தவிர்க்க முடியதா காரணங்களால் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியாத பக்தர்களுக்காக இவ்விதம் செய்யப்படும். இச்சடங்கின் போது சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தமது பாதுகாப்பிற்காக நூல் கட்டும் வைபவமும் இடம்பெறும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் ஆலயக் கதவு மூடப்படும்.