ஆளுமை:நீ. பி. அருளானந்தம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளானந்தம்
தந்தை நீக்கிலாம்பிள்ளை பிலிப்பையா
தாய் சுவாம்பிள்ளை லூர்தம்மா
பிறப்பு 1947.11.12
இறப்பு -
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலங்கையின் இலக்கிய இயங்கு தளத்தில் மிகப் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்டவரானவர் நீ. பி. அருளானந்தம் என்பவராவார். இவர் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார் குளம் என்னும் இடத்தினைப் பிறப்பிடமாக கொண்டவர். நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையாவினதும் சுவாம்பிள்ளை லூர்தம்மா என்பவர்களின் மகனாகப் பிறந்தவர். இவர் நாவல், சிறுகதை, கவிதை என பல்துறை சார்ந்த இலக்கிய தளத்திலும் பிரவேசித்ததாகி அவை சம்பந்தமான இருபத்து நான்கு நூல்கள் வரையாக இற்றைவரை வெளியிட்டிருக்கிறார்.

இவரது தந்தையாரான பிலிப்பையா என்பவர் நாட்டுக்கூத்து அண்ணாவியாரும் எழுத்தாளருமானவர். இவர் கலைத்துறையினை சார்ந்தவராவார். நீ. பி. அருளானந்தத்தின் துணைவியாரான, அச்சுவேலி தென்மூலையை பிறப்பிடமாகக் கொண்ட பெற்றோனிலா தம்பி முத்து எனப்படுபவரும் இலங்கையின் மிகப் பிரபலமான புகழ் பூத்த கலைப் பாரம்பரியம் மிக்கதான குடும்பத்தினை சேர்ந்தவராகும். பெற்றோனிலா தம்பி முத்துவின் பேரனானவர் புலவர் ச.தம்பிமுத்துப் பிள்ளையாவார். யாழ்ப்பாண சரித்திர வரலாற்று நூல்களை எழுதியவரும், பன்மொழி அறிஞரும் சொற்பிறப்பியல் அகராதியை உருவாக்கியவருமான சுவாமி ஞானப்பிரகாசியாரது வளர்ப்புத் தந்தையானவர் தான் புலவர் ச.தம்பிமுத்துப் பிள்ளையாகும். தம்பிமுத்துப் பிள்ளையின் பேரனும் பெற்றோனிலா தம்பிமுத்துவின் சகோதரருமானவரே பொயற் தம்பிமுத்து எனப்படுபவர். இருபதாம் நூற்றாண்டிலே, ஆங்கில இலக்கிய கதிக்கு ஏதாவது காத்திரமான பங்களிப்புச் செய்த ஆங்கிலேயர் அல்லாதவர், மியேறி ஜேம்ஸ் துரைராசா தம்பிமுத்து எனப்படுகின்றவர். இவர் நவீன ஆங்கில இலக்கிய வரலாற்றிலே புகழாரம் சூட்டப்பட்ட ஆங்கில மொழி புலவராகும். தம்பிமுத்து குடும்பத்தினருக்கும் பிலிப்பையா குடும்பத்தினருக்கும் இரத்த உறவு முறையான சொந்தமுண்டு. இதன் பொருட்டே நீ.பி.அருளானந்தம் பெற்றோனிலாவை திருமணம் செய்தார். நீ. பி. அருளானந்தத்தின் தடையற்ற எழுத்துப் பயணத்திற்கு ஊக்குவிப்பாக திருமண வாழ்வும் அவருக்கு பெரும் பேறாகவே அமைந்ததாக இருந்தது.

இவர் இதுவரை ஆறு நாவல்களை எழுதியுள்ளார் அவற்றில் மூன்று நாவல்கள் இலங்கையின் அரச சாஹித்திய விருது பெற்றவையாகும். இவரின் “கறுப்பு ஞாயிறு” என்கின்ற சிறுகதை தொகுதி நூலும் அரச சாஹித்திய விருது பெற்ற நூலாகும். இவரது கவிதைத் தொகுதி நூல், வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சாஹித்திய விருதைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய சிலநூல்களானவை, அரச இலக்கிய விருதுக்கான இறுதிச் சுற்றிலே தெரிவாகி விதந்துரைக்கப்பட்டதாகி சான்றிதழ்களும் பெற்றிருக்கின்றன. அத்துடன் கொடகே சாஹித்திய விருது, இலங்கை இலக்கிய பேரவையின் விருது, எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் விருது, ஞானம் சஞ்சிகை வழங்கிய பரிசு, ஆகியவற்றினையும் பெற்றுள்ளார். தமிழ் நாட்டில் அன்புப்பாலம் சஞ்சிகை நடத்திய வல்லிக் கண்ணன் ஞாபகார்த்த சர்வதேச சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதையான “இரத்தம் கிளர்த்தும் முள் முடி” முதற்பரிசினை பெற்றுள்ளது. (2008 இல் போட்டிக்காக உலகெங்கிலும் இருந்து அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் தெரிவான கதை இதுவாகும்). இதற்கான பரிசினை, பாலம் மாத சஞ்சிகை இதழின் சிறப்பசிரியரான ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் திரு.த.ஜெயகாந்தனே இவருக்கு அதனை வழங்கி கௌரவித்திருந்தார்.

நீ. பி. அருளானந்தம் இதுவரை 6 சமூக மேடை நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவைகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் இவரே நடித்தும் இருக்கிறார் அந்நாடகங்களை இவரே இயக்கியுள்ளார். பல சரித்திர வரலாற்று நாடகங்களிலும் இவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அந்நாடகங்களையும் இவரே இயக்கியுள்ளார். இவர் கலையுலகிற்கு கலைச்சேவையை வழங்கி வருவதை கௌரவித்து, 2019 இல் அரச விருது வழங்கும் வைபவத்தில் அரசின் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது. நாடகம் இலக்கியம் சார்ந்த துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 2015 ஆம் ஆண்டு “கலாபூஷணம்” அரச விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

நீ. பி. அருளானந்தம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட அளவிலாக, இலங்கையின் முக்கிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரை ஆக்கங்களையும் எழுதி வந்தவண்ணம் இருக்கிறார். இவர் வெளியிட்ட “துயரம் சுமப்பவர்கள்” எனும் நாவல் நூலானது உயர் பட்டப் படிப்பிற்கும் உதவியாக அமைந்துள்ளது. கலை முதுமாணி பட்டத்திற்கான பகுதித் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு உயர் பட்டப்படிப்புகள் பிடத்திற்கு துயரம் சுமப்பவர்கள் எனும் நாவல் - திருமதி.கலையரசி திருமாவளவன் (ஆசிரியை) என்பவரால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இது குறித்த இவரது ஆய்வு சம்பந்தமான நிறைவில் பேராசிரியர்களால் பாராட்டப்பட்டு உயர் பேறான சித்தியடைந்த நிலையில் ஏ(A) தகுதியினை திருமதி.கலையரசி திருமாவளவன் பெற்றார். இந்த வித ஆய்வின் பெறுபேறாக அவருக்கு “முது கலைமாமணி” எனும் உயரிய பட்டம், உயர் பட்டப்படிப்புக்கள் பீடம், யாழ் பல்கலைக்களகமானது (தமிழ்த்துறை) வழங்கி கௌரவித்திருக்கிறது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8 மாணவர்களுக்கான பாடநூலில் “ஆசிரியரின் நாணயம்” என்னும் சிறுகதையும் உள்வாங்கப்பட்டதாய் அமைந்து இருக்கிறது. நீ. பி. அருளானந்தத்தின் மூத்த மகனான சுரேஸ் ஜோக்கிம் என்பவர், பல கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்தவர். கனடாவில் வசிக்கின்ற இவர் இதுவரை 68 கின்னஸ் சாதனைகளை புரிந்து உலகிலேயே அதிகூடிய எண்ணிக்கையான கின்னஸ் சாதனையாளர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை வகிப்பவராக கணக்கிடப்பட்டவராகி கின்னஸ் சாதனை உலகின் பெருமைக்குரியவராகவும் உள்ளார். இவர் அண்மையில் புரிந்த கின்னஸ் சாதனையான உலக சமாதான ஓட்டம் (7 கண்டங்கள் அதன் 123 நகரங்கள் ) என்பது மிகப் பிரபலமானதாக உலகெங்கிலுமாக கவனிக்கப்பட்டதாகினது. கையில் சமாதான ஒளியினை ஏந்தியபடி குறிக்கப்பட்ட நகரங்களிலெல்லாம் 20 கிலோ மீட்டர்கள்வரை ஓடியதாக வலம் வந்தமை உலக சாதனை ஏடான கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதியப்பட்டதாக இருக்கிறது.