ஆளுமை:கணபதிப்பிள்ளை, நாகலிங்கம் (சின்னமணி)

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages நாகலிங்கம்
Pages இராசம்மா
Birth 30.03.1936
Pages 04.02.2015
Place பருத்தித்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, நாகலிங்கம் (1936.03.30 - 2015.04.02) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர். இவர் சின்னமணி என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் இராசம்மா. சின்னமணி தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகவும், 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியவர்.

தனது 9 வயதில் 'குறவன் குறத்தி' என்ற நாடகத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திரா நாட்டியக் கல்லூரியில் வி.கே.செல்லையா அவர்களிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட இவர், அவரின் வழிகாட்டலுடன் 1949 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி, பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும், 'துப்பதாகே துக்க' என்ற சிங்களத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர், சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார். இப்பெயரிலேயே வில்லிசைக் குழு ஒன்றை அமைத்து நாட்டின் பல பாகங்களிலும், கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் பல வில்லிசைகளை நிகழ்த்தியுள்ளார். வில்லிசையில் இவரது ஆளுமையைக் கெளரவித்து வில்லிசைக் கலைஞான சோதி, வில்லிசை வித்தகன், வில்லிசைவாணன், வில்லிசை மாமணி ஆகிய பட்டங்களும் கலாபூசணம், ஆளுனர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 601-602
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 81-82