ஆளுமை:பரமேஸ்வரி, இளங்கோ

From நூலகம்
Name பரமேஸ்வரி
Pages சண்முகம்
Pages சௌந்தரம்மா
Birth 1957.08.07
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரி, இளங்கோ (1957.08.07) மட்டக்களப்பு, ஏறாவூரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சௌந்தரம்மா. ஆரம்ப கல்வியை விபுலானந்தா வித்தியாலயம், ஏறாவூர் தமிழ்கலவன் பாடசாலை ஆகியவற்றிலும், இடைநிலைக் கல்வி உயர்கல்வியை வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் கல்வி கற்றார். பரமா சண்முகம், மதுபாரதி ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராக நியமனம் பெற்ற பரமேஸ்வரி 1979-2006ஆம் ஆண்டு வரை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கல்விமாணிப்பட்டம், பட்ட மேற்கல்வி முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பட்டங்களை தேசிய கல்வி நிறுவனத்தில் பெற்றார். 2007ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கல்வி வெளியீ்ட்டுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகப் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக் கல்வி பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழத்தில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றுள்ள பரமேஸ்வரி 2016ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்றார். பாடசாலை காலத்தில்லேயே எழுத்துத்துறையில் பிரவேசித்ததாகத் தெரிவிக்கிறார். எழுத்தாளரின் முதலாவது ஆக்கம் 1976ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையின் ஊடாக இசையும் கதையும் நிகழ்ச்சியில் ஒரு புயல் ஓய்கிறது என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. இந்த ஆக்கம் பரமா சண்முகம் என்ற பெயரிலேயே ஒலிபரப்பப்பட்டது. சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், உரைச்சித்திரம், போச்சாளர் என தனது திறமைகளை பல்வேறு தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். ஈழத்து பாடல்கள் இரண்டையும் எழுதியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அவை ஒலிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். என் காதில் ஒரு பாடல் கேட்கிறது… இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரி பரமா சண்முகம். எழுத்தாளரின் ”சுவடுகள்” சிறுகதைத் தொகுப்பு கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டது. இவரின் முதலாவது சிறுகதை சிந்தாமணி நாளிதழில் வெளிவந்ததென தெரிவிக்கிறார் பரமா. சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன், தமிழ் மிரர் ஆகிய நாளிதழ்களில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. நாட்டின் போர்ச் சூழல் காரணமாக மதுபாரதி என்ற புனைபெயரிலும் இவர் எழுதி வந்துள்ளார். பின்னர் சிறிது காலம் தனது பேனா முனைக்கு ஓய்வு கொடுத்திருந்ததாகவும் தெரிவிக்கிறார். அன்பெனும் மழையில் என்ற தலைப்பில் நாவல் எழுதியுள்ளார். திசைமாறிய உறவுகள் என்னும் இவரின் முதலாவது நாவலின் கையெழுத்துப் பிரதியைத் தவறவிட்டுவிட்டதாக கவலையுடன் நினைவுகூருகிறார் எழுத்தாளர். தமிழ்நாடு இனிய நந்தவனம் பதிப்பகம் இவரின் சிறுகதையான என்னைச் சுற்றி ஒரு உலகம் சிறுகதை தொகுப்பை வெளியிட தயாராகவுள்ளது. எழுத்தாளர், பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் சிறுகதைகளுக்கு பரிசில்களைப் பெற்றுள்ளார். 1981ஆம் ஆண்டு மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதையான காலம் கற்றுத்தந்த பாடம் சிறுகதைக்கு முதலாம் இடம் கிடைத்ததுள்ளது. இதே போட்டியில் போட்டியிட்ட மூத்த எழுத்தாளர்களான மண்டூர் அசோகா, செ.குணரத்தினம் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர். ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் ஆசிரியர்களுக்கு இடையிலான சிறுகதைப் போட்டியில் இவரின் கதை சிறப்பு சிறுகதைக்கான பரிசை பெற்றுள்ளது.

விருதுகள்

ஆக்க இலங்கியத்துறைக்கு ஆற்றிய பரமேஸ்வரி இளங்கோவின் சேவையை கௌரவித்து கலாசார பேரவை ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் செங்கலடி விருது வழங்கியது.

குறிப்பு : மேற்படி பதிவு பரமேஸ்வரி, இளங்கோ அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.