ஆளுமை:சுப்பிரமணியம் சுவாமி, தூயமனுவேற்பிள்ளை

From நூலகம்
Name சுப்பிரமணியம் சுவாமி
Pages தூயமனுவேற்பிள்ளை
Pages பொன்னம்மா
Birth 1934.11.08
Pages 1998.04.15
Place திருக்கோணமலை
Category இறை அன்பர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



சுப்பிரமணியம் சுவாமி தூயமனுவேற்பிள்ளை திருக்கோணமலையில் பிறந்தார். (1934.11.08) . இவருடைய தந்தை தூயமனுவேற்பிள்ளை, தாய் பொன்னம்மா என்பவர்களாவார்.இவர் வில்லூன்றி பகுதியில் அதிக காலம் வசித்துள்ளார். சிறுவயதில் தாயை இழந்த காரணத்தினால் கிருஸ்தவர்களான தம்பிராசா குடும்பத்தினர் இவருக்கு ஞானஸ்நானம் செய்வித்து செபஸ்தியாம்பிள்ளை என்று பெயருமிட்டு தமது ஆறாவது பிள்ளையாகத் தத்தெடுத்தனர்.

பாடசாலைக் கல்வியில் நாட்டங் குறைந்த காரணத்தினால் பிரித்தானிய கடற்படைத் தளத்தில் வேலை பார்த்து குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டுவரும் வேளை ஒருநாள் அவரது வீட்டில் அலறல் சத்தம் ஒன்று பெரிதாகக் கேட்டது. தொட்டம்மா குடும்பத்தினர் ஒடிச்சென்று பார்த்த போது இவர் பிரம்மை பிடித்தவாறு காணப்பட்டார். அவர்கள் அவரை அமைதிப்படுத்திய பின் விசாரித்த போது ஒரு பெரிய ஒளியினுள் காளியின் வடிவம் தோன்றியது என்றும், அதன் கையில் இருந்த சூலாயுதத்தால் தன்னுடைய நாக்கில் குத்தியதாகவும் கூறினார். அவர் பின்னாளில் அவ்வுருவத்தை சம்பூர் பத்திரகாளியினுடைய உருவம் தான் அது என்று கூறியிருந்தார். அன்று தொடக்கம் காளியின் அருள்கடாட்சம் கொண்டவராக மாறினார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நோய் துன்பம் பற்றியும். நடக்கப்போகும் காரியங்களையும் கூறத் தொடங்கினார்.

அம்பாளின் அருட்சக்தியின் காரணமாக முழுநேர இறை தொண்டில் ஈடுபட்டார். திருமணம் செய்யாது பிரமச்சாரிய வாழ்க்கையையே வாழ்ந்து வாழ்ந்தார். இவருடைய வாழ்விடம் பள்ளிக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், சுதுமலை, திருக்கோணமலை மாறிக்கொண்டேயிருந்தது. திவ்விய ஜீவன சங்கத்தில் மாதாஜியுடன் சேர்ந்து சிவானந்த தபோவன ஆச்சிரமம் தழைத்தோங்க தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றினார். மாதாஜியின் மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றார். பின்னர் வில்லூன்றி வந்து ஸ்ரீமுருகன் தொண்டராக பத்து வருடங்களாக இறை தொண்டாற்றினார். தேவார திருப்பதிகங்கள் ஓதினார். ஒதுவித்தார். தன்னை தாடியும். கோயிலுக்கும் தொண்டர் சபைக்கும் வந்த மக்களுடன் அன்பாகவும் ஆதரவாகவும் பழகினார். வன்செயல் காலத்தில் தபோவன பிள்ளைகள் தமது இருப்பிடத்தை இழந்து ஸ்ரீமுருகன் தொண்டர் சபை மண்டபத்தை அடைந்த போது அவர்களை அன்போடு ஆதரித்தார். அப்பிள்ளைகளுடன் தானும் ஒன்றாகிய தன்மையுடையதாகிக் காணப்பட்டார்.

மூதூர், வெருகல், குச்சவெளி பகுதிகளில் இருந்து திருமலை நகரத்துக்கு வந்து இரவாகியதன் காரணமாகவோ அல்லது போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாகவோ வீடு செல்லமுடியாது அவதியுற்ற மக்களுக்கு தொண்டர் சபையில் தேனீர், உணவு வழங்கி ஆதரவளித்தார். "என் கடன் பணி செய்து கிடப்பதே." என வாழ்ந்த சாமியார் அவர்கள் சக்தி உபாசகராக அம்பாளின் துணையுடன் மனதாலும் உடலாலும் பாதிப்புற்றவர்களுக்கு திருநீறு இட்டு அல்லது நூல்கட்டி அல்லது பார்வை பார்த்து குணப்படுத்தியதால் இவரை நாடும் கூட்டமும் கூடிக்கொண்டே சென்றது. மண்டபத்துக்கு வருகின்ற சுவாமிகள், துறவிகளுக்கு முறைப்படி பாதபூசை செய்து வரவேற்று உபசரிப்பது அவரது வழமையான செயலாகும்.

பேயனாகவும், பித்தனாகவும், சித்தனாகவும் நடமாடித் திரிந்த சாமியார் அவர்கள் அம்பாளுடன் மட்டுமல்லாது முருகப் பெருமானுடனும் உறவாடி வருகின்றவர் எனக் கூறுகின்ற ஸ்ரீமுருகள் தொண்டர் சபைத் தலைவராயிருந்த டாக்டர். க. மகாலிங்கம் அவர்கள் சாமியாரின் அற்புதச் செயல்களுள் ஒன்றை இவ்வாறு கூறுகின்றார். "ஒருநாள் சாமியார் கிழிந்த வேட்டியுடன் இருந்து கொண்டு வேடப்பயலே/ ரெண்டு பொண்டாட்டிக்காரா! எனக்கு உடுக்க வேட்டி இல்லை. என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? ஏன்று ஏசினார். அடுத்த நாள் கோயிலுக்கு வந்த ஒரு அன்பர் இரவு தன்னுடைய கனவில் ஒரு கிழவன் வந்து வேட்டி வாங்கி சாமியாருக்குக் கொடுக்கக் கூறியதாகக் கூறி வேட்டியையும் கொடுத்து விட்டுச் சென்றார். சாமியார் அதை எடுத்து சாமிப்படத்துக்குப் பட்டாகச் சாத்திவிட்டார்.

சாமியார் மனையாவெளி வல்லபசக்தி கோயில், திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில், சுதுமலை வைரவர் கோயில், சுதுமலை அம்மன் கோயில் போன்ற கோயில்களில் சில காலங்கள் பூசகராகவும் விளங்கினார். எப்பேர்ப்பட்ட தொண்டாக விளங்கினாலும் வில்லூண்டிக் கந்தசுவாமி கோயிலில் எண்ணெய் சேகரித்து விளக்கேற்றுவது இவருக்குப் பிடித்தமான தொண்டு எனலாம். அதற்காக அவர் பட்ட சிரமங்கள், கவலைகள் ஏராளம்.

நீண்ட தாடி, சடைமுடி, காவியுடை, நெற்றியில் திருநீறு, சந்தன குங்குமப் பொட்டு எனக் காணப்பட்ட சுப்பிரமணியம் சாமியார் அவர்கள், தனது சகோதரியைக் காண்பதற்கு மன்னார் மடு அகதிகள் முகாமுக்குச் சென்றிருந்த போது, திடீரென ஏற்பட்ட மூச்சுக் கஷ்டம் காரணமாக 1998.04.15 அன்று அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.