ஆளுமை:சின்னப்பர், அவுராம்பிள்ளை

From நூலகம்
Name சின்னப்பர்
Pages அவுராம்பிள்ளை
Pages எலிசபெத்
Birth 18.11.1950
Place குமுழமுனை
Category அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னப்பர், அவுராம்பிள்ளை (18.11.1950 -) கிளிநொச்சி, குமுழமுனையை பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாவி. இவரது தந்தை அவுராம்பிள்ளை; தாய் எலிசபெத் ஆவார். சிறுவயதிலிருந்து நாடகத்தில் இவருக்கு ஈடுபாடு அதிகமாக காணப்பட்டதால், பத்து பன்னிரண்டு வயதுமுதல் தகப்பனாருடனும் மூத்த சகோதரனுடனும் சைக்கிளில் பயணம் செய்து விடத்தல்தீவு, பூநகரி, வாடியடி, வன்னேரி போன்ற இடங்களில் நாடகங்களைப் பார்த்து இரசித்தார்கள்.

இவர் செட்டியார் குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை அண்ணாவிடம் காத்தான் கூத்தினை பழகி செல்லியாதீவு அம்மன் கோயிலில் மேடையேற்றினார். யாழ்ப்பாணம் வி.வி வைரமுத்து வாடியடியில் மேடையேற்றிய அரிச்சந்திரா மற்றும் சத்தியவான், சாவித்திரி போன்ற நாடகங்களில் நடித்திருந்தார். தனது 16,17 வயதுகளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிளில் தேவன்பிட்டி, வலைப்பாடு போன்ற இடங்களுக்கு சென்று பல நாடகங்களை பார்த்து இரசித்தார். அதில் வலைப்பாடு சீமான் அண்ணாவி பழக்கிய புனித அன்னம்மாள் நாடகம் இன்றும் இவர் நினைவில் நிற்பவை. 1968 ஆம் ஆண்டு தகப்பனார் தலைமையேற்று மேடையேற்றிய செபஸ்தியார் நாடகத்திலும் மந்திரி பாத்திரமேற்று நடித்தார். 1970ஆம் ஆண்டு மேடையேற்றிய எஸ்தாக்கியார் நாடகத்தில் எஸ்தாக்கியாருடைய மக்களுக்கு நடித்தார்.

தனது கூத்துக்கலை பயணத்தின் அடுத்த முயற்சியாக சாந்தி திருமணம், புதிய வாழ்வு என்று இரு சமூக நாடகங்களை எழுதி சென் அன்ரனிஸ் நாடக கலைஞர்களை கொண்டு பழக்கி குமுழமுனை, நாச்சிக்குடா, பூநகரி போன்ற இடங்களில் மேடையேற்றி தனக்கென ஒரு கலை உலகத்தை படைத்தும் கொண்டார். இவருடைய நாடகம் சாந்தி திருமணம் 1971,1973 காலப்பகுதியில் குமுழமுனை அந்தோனியார் கோயிலடியில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டது.2014ஆம் ஆண்டு அந்தோனியார் நாடகத்தினை சுருக்கமாக 3 தொடக்கம் 4 மணித்தியாலத்துக்குள் சுருக்கி மக்களுக்கு பழக்கி ஆனிமாத வருடாந்த திருவிழாவிற்கு மேடையேற்றினார். இவ்வாறான கலைப்பணியினாலும் நெறியாள்கையினாலும் இவருடைய கிராமத்து மக்கள் இவரை அண்ணாவி என்று அழைக்கிறார்கள்.