ஆளுமை:சற்சொரூபவதி, நாதன்

From நூலகம்
Name சற்சொரூபவதி
Birth 1937.03.06
Pages 2017.05.04
Place உடுப்பிட்டி
Category ஊடகவியலாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சற்சொரூபவதி, நாதன் (1937.03.06 – 2017.05.04 ) ஊடகவியலாளர், கலைஞர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் மேற்படிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கற்று விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றினார். 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியதோடு நாடகம், பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, "கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் ஓர் சிறந்த மேடைப் பேச்சாளரும் இலக்கிய எழுத்தாளரும் ஆவார். வீரகேசரி, சுதந்திரன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் தமது படைப்புக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவர் கலை ஆர்வம் கொண்டு நாடகங்களில் நடித்துள்ளதுடன், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்தி வரும் ஊடகவியலாளர் டிப்ளோமாப் பாடநெறிக்கு வருகைதரு விரிவுரையாளராகவும் செயலூக்கக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் 40 ஆண்டு ஒலிபரப்புச் சேவையை முன்னிட்டு எமது பழைய மாணவிகள் சங்கம் “சகலகலா வித்தகி" என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிக் கௌரவித்ததமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் எப்போதும் எமது முன்னேற்திற்கு ஊக்கம் அளிப்பதோடு எமது முன்னேற்றங்களையும் கேட்டு அறிந்து மகிழ்வார். அவருக்கு மிகவும் பிடித்த வாக்கு "எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை" என்பதாகும். பெண் எப்போதும் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்து முன்னேற்றத்துக்காக அதை நோக்கி செயற்பட வேண்டும் என்று கூறுவார். இவர் பதவி வகித்த ஏனைய சங்கங்கள் கொழும்பு மகளிர் இந்து மன்றம் - தலைவி அகில இலங்கை இந்து மகளிர் இந்து மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினர் தமிழ்ச் சங்கம் உபதலைவி தேசிய இலக்கிய கலாச்சாரக் குழு உறுப்பினர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கை சபை உறுப்பினர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இருந்தார். இவர் தனது பல்துறை ஆற்றலால் ஜவகர்லால் நேரு விருது, சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, ஒலிபரப்பாளருக்கான 'உண்டா' விருது, இந்து கலாச்சார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது, வானொலி பவள விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருது, யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருது, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார்.



வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 10858 பக்கங்கள் 10-12
  • நூலக எண்: 394 பக்கங்கள் 56