ஆளுமை:நவநீதகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார்
பெயர் | நவநீதகிருஷ்ண பாரதியார் |
தந்தை | சுப்பிரமணிய பாரதியார் |
தாய் | தையலம்மை |
பிறப்பு | 1889 |
இறப்பு | 1952 |
ஊர் | தஞ்சாவூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நவநீதகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார் (1889 - 1952) இந்தியா, தஞ்சாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய பாரதியார்; தாய் தையலம்மை. இவர் தனது இளமைக் காலத்தில் சர்க்கரை இராமசாமிப் புலவரிடம் தமிழையும் நாராயணசாமி ஐயரிடம் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்- பொருளதிகாரத்தையும் அரசன் சண்முகனாரிடம் தொல்காப்பியம்- எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்தையும் கற்று வந்தார். தமது பதினெட்டாவது வயதில் பாலைக்காடு விக்றோறியாக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானம் திருப்பெருந்திரு அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத் திருமுறை ஆராய்ச்சித் துணைவராக விளங்கியதோடு மூன்று ஆண்டுகள் வரை திருவாரூர்க் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
இவர் 1917 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து சேர்.பொன்னம்பலம் இராமநாதனால் நிறுவப்பட்டதும் சுன்னாகம் மருதனார் மடத்தில் அமைந்துள்ளதுமான இராமநாதன் மகளிர் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையேற்றார். பின்னர் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகவும் 1936 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பண்டித ஆசிரியர் கலாசாலையில் தலைமைத் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
இவர் 1912 ஆம் ஆண்டு உலகியல் விளக்கம் என்னும் நூலையும் 1929 ஆம் ஆண்டு புத்திளஞ் செங்கதிர் என்னும் செய்யுள் நூலையும் 1934 ஆம் ஆண்டு பறம்பு மலைப் பாரி என்னும் நாடக நூலையும் பாரதியம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட சிறுவர்களுக்கான இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 163-165