ஆளுமை:சோமசுந்தரம், வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 30 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வல்லிபுரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வல்லிபுரம் சோமசுந்தரம்
தந்தை வல்லிபுரம்
தாய் இராசாத்தி
பிறப்பு 1928.02.17
இறப்பு 1968.04.02
ஊர் தம்பலகாமம்
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பலகாமத்தில் 'கூட்டாம்புளி' என்னும் திடல் பிரசித்தமானது. 'கூட்டம் கூட்டமாக புளி வளர்த்த கூட்டாம்புளி' என கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் இதனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டாம்புளியில் வல்லிபுரம், இராசாத்தி தம்பதிகளுக்கு 1928ஆம் ஆண்டு மாசி மாதம் 17ஆந் திகதி மகனாகப் பிறந்தவர் தான் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் அவர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் சிறிய தந்தையாரான வேலுப்பிள்ளை, சிறிய தாயாரான துளசியம்மாள் என்போரின் ஆதரவிலும் அரவணைப்பிலும் வாழ்ந்து வந்தார்.

சோமசுந்தரம் தனது ஆரம்பக் கல்வியை யாழ் கொழும்புத்துறையிலும், பின்னர் திருக்கோணமலை விபுலானந்தா கல்லூரியிலும், தம்பலகாமம் மகா வித்தியாலத்திலும் கற்று எஸ்.எஸ்.ஸி. பரீட்சையிலும் சித்தி பெற்றார்.1952 இல் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் இணைந்து சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, பேராசிரியர் கும்பகோணம் இராசமாணிக்கம் போன்றோர்களின் மேற்பார்வையில் வயலின் இசைப்பயிற்சியை மேற்கொண்டார். 1955 ஆம் ஆண்டுவரை மூன்று வருடங்கள் தொடர்ந்து கற்று சங்கீதபூசணம் பட்டத்தோடு தாய்நாடு திரும்பினார்.

1957 தை முதலாந் திகதியிலிருந்து தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் தற்காலிக ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் 1958இல் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டு உதவி ஆசிரியராக பதுளையிலும், பசறை மத்திய கல்லூரியிலும், பின்பு தம்பலகாமம் புதுக்குடியிருப்பு தமிழ் கலவன் பாடசாலையிலும் திருகோணமலை இராமகிருஷ்ண மிசன் இந்துக் கல்லூரியிலும் கற்பித்தார்.

இவர் வயலின் கலைஞராக திருகோணமலையில் கால் பதிக்கும் முன்னர் இங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்துதான் பக்கவாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள். வயலின் இசைக்கலைஞர் திரு. சோமசுந்தரத்தின் வருகைக்குப்பின் இந்தக் குறைபாடு திருக்கோணமலை மாவட்டத்தில் முற்றாக நீங்கியது. இவர் திருக்கோணமலை இசைப் பாரம்பரியத்திற்கு ஆற்றிய சேவை அளப்பரியது. இக்காலப் பகுதியில் இவர் தட்சிணகான சபையில் வயலின் இசையாசிரியராக இணைந்துகொண்டு மாவட்டத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்குகொண்டு உழைத்ததை அனைவரும் நன்கு அறிவர்.

கலைஞர் சோமசுந்தரம் அவர்கள் தனது தாய்மாமன் மாரிமுத்துவின் மகள் விஜயலட்சுமியை 01.09.1958இல் திருமணம் செய்துகொண்டார். தனது மனைவியின் குரலினிமையைக் கண்ட கலைஞராகிய இவர் மனைவிக்கும் இசையைக் கற்றுக்கொடுக்கத் தவறவில்லை. இவர்களுக்கு நித்தியலட்சுமி, பங்கயலட்சுமி, திவ்ஜலட்சுமி, நிமலேந்திரன், விமலேந்திரன் ஆகிய ஐந்து பிள்ளைகள்.

தம்பலகாமத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த இவர் சிறந்த வேட்டைக்காரராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இரண்டாம் நாள் தன் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற இவரை காலன் இரத்தப்புடையன் ரூபத்தில் வேட்டையாடி விட்டது. ஒரு சிறந்த கலைஞனை திருக்கோணமலை மாவட்டத்திலேயே புகழ்பெற்ற வயலின் கலைஞனை இழந்தது எமது பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.