நிறுவனம்:மட்/ கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மட்/ கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் கொக்கட்டிச்சோலை
முகவரி கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரின் தெற்குத் திசையில் சுமார் பதின் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையை அடுத்து கொக்கட்டிச் சோலை என்னும் பழம்பதியுள்ளது. இது மட்டக்களப்பு மாநகருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இவ்வாலயம் கோபுர தரிசனம் உயர்வுற்று அமைந்துள்ளது. கொக்கட்டி மரங்கள் செறிந்த சோலையாக இருந்த இடமாதலால் கொக்கட்டிச் சோலை எனும் பெயர் தோன்றலாயிற்று. கொக்கட்டி மரத்தின் கீழ் சுயம்பு வடிவமாக சிவன் எழுந்தருளியிருந்த மையினாலும், கொக்கட்டிச் சோலையில் தலம் அமைந்தமையினாலும் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் எனப் பெயர் கொள்ளலாயிற்று. இவ்வாலயம் மட்டுமே சிவன் கோயிலாக தனியிடச் சிறப்பை பெறுகின்றது.

கலிங்க (ஓரிசா) தேசத்திலிருந்து வந்து மண்முனைப் பிரதேசத்தை அரசு ஆட்சி செய்து வந்தவளான கலிங்க தேசத்தரசன் குகசேனனுடைய புத்திரி உலக நாச்சியின் ஆட்சிக்காலத்தில் காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது. காடுகளை அழித்து கொண்டிருக்கும் அவ்வேளையில் வேடர்குல திடகன் என்பவன் கொக்கட்டி மரப்பொந்தொன்றில் தேன் இருப்பதைக் கண்டு கொக்கட்டி மரத்தை வெட்டினான். கொக்கட்டி மரத்தின் வெட்டுவாயில் இருந்து குருதி “குபீர் குபீர்” எனப் பாய்ந்தது. அதைக் கண்ட அவன் தனது உடையினால் வெட்டு வாயைக் கட்டிவிட்டு உலக நாச்சியிடம் செய்தியைக் கூறினான். உலக நாச்சியும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது மரத்தடியில் ஒரு இலிங்கம் இருந்தது. உலக நாச்சியார் அதனை சிவலிங்கம் என உணர்ந்து ஆலயம் அமைத்து வட நாட்டு கொல்லடத்திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்து பூசை பண்ணுவித்தாள்.

இச்சிவலிங்கம் பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே வழிபட்டு வந்த இலிங்கம் எனவும் அது கால ஓட்டத்தினால் மண்ணால் மூடப்பட்டதாகவும், தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாலயம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்றே நாம் அதன் காலத்தை நிர்ணயம் செய்யலாம். மேலும் இவ்வாலயம் குளக்கோட்டன், கலிங்கமாகோன், விமலதர்மசூரியன், விக்கிரம இராஜசிங்கன் முதலிய மன்னர் களால் பரிபாலிக்கப்பெற்ற ஆலயமாக திகழ்கின்றது.

இத்திருத்தலபதி தொன்று தொட்டு சைவமும், தமிழும் வீற்றிருந்த புண்ணிய பூமியாகும். சைவத்தையும் தமிழையும் வளர்த்த மேன்மை கொள்பதி. மிகு சைவத்துறை விளங்கும் புண்ணியத் தலமாகும். இத்தலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரேயொரு சிவன் கோயிலாகவும், தேரோடும் திருத்தலமாகவும் விளங்குகின்றது.

இவ்வாலய வரலாற்றுச் சிறப்பினை கல்வெட்டுக்கள், புராண வரலாற்று ஏடுகள், வரலாற்று நூல்கள், கர்ண பரம்பரைக் கதைகள், ஆகியன சிறப்புற எடுத்தியம்புகின்றன.

இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆவணி மாதத்தில் வருகின்ற வளர் பிரதமையும், உத்தர நட்சத்திரமும் கூடிய திருநாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் வழமையான உபயகாரர்களினால் நடத்தப்பட்டு இறுதி ஞாயிறு தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவடையும்.


வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 10015 பக்கங்கள் 20-30