ஆளுமை:சிவதாசன், சிவநாமம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவதாசன், சிவநாமம்
தந்தை சிவநாமம்
பிறப்பு 1948.11.04
ஊர் அரியாலை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சிவதாசன் (1948.11.04 - ) யழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தையாரின் பெயர் சிவநாமம். பரம்பரை வழியாக நாடகக் கலையை வளர்த்துவரும் குடும்பவாசியான இவர் ஆரம்பக் கல்வியை யாழ். ஆனந்தா வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். கனகரத்தினம் (ஸ்ரான்லி கல்லூரியிலும்) மத்திய மகா வித்தியாலயத்திலும் நிறைவு செய்து கொண்டார்.

பாடசாலை காலத்திலிருந்தே எழுத்துத்துறையிலும், நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் தன் இலக்கியச் செயற்பாடுகளை இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வந்தார். சிறுவர்களுக்கான ஆக்கங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவரின் “வேப்ப மரத்தடிப் பேய்” என்னும் சிறுவர் நவீனம் வரதர் வெளியீடாக நூலுருவில் வெளிவந்ததோடு “தங்கமலர் சிறுவர் பாடல்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வீரகேசரி வாரவெளியீட்டில் இருபத்தைந்து வாரங்கள் வெளிவந்த “அதிசயப்பறவை” என்னும் சிறுவர் நவீனமும் “விஜய்” சிறுவர் வாரப் பத்திரிகையில் “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் பெயரில் வெளிவந்த சிறுவர் இலக்கியமும் இவரால் எழுதப் பெற்றவையாகும். அரியாலை மேற்கு அண்ணமார் ஆலய வரலாறு, அந்தாதி, திருப்பொன்னூஞ்சல் அடங்கிய நூலினையும், இசை நாடக உலகில் வி.வி வைரமுத்து அவர்களோடு பலகாலம் பெண் பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்ற கலாபூஷணம், சோகச் சோபித சொர்ணக் கவிக்குயில் வி. கே. இரத்தினம் அவர்களின் அரங்க செயற்பாடு பற்றி “இசைநாடகக் கவிக்குயில்” என்ற நூலினையும் எழுதியுள்ள இவரின் “தென் யாழ்ப்பாணம் என்ற நாடக வரலாறும், நாடகக் கலைஞர்கள் பற்றிய ஆய்வும் கொண்ட நூல் கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றது.

காலத்திற்கு காலம் உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பண்பாட்டுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், எழுதி வந்துள்ள இக்கவிஞர் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். கலாபூஷணம் அமரர் வி.கே. இரத்தினம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் போது இவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவரின் கலை இலக்கியப் பணியை பாராட்டி நல்லூர்ப் பிரதேச கலாச்சாரப் பேரவை இவருக்கு 2008 ம் ஆண்டு “கலைஞானச்சுடர்” பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 28


வெளி இணைப்புக்கள்