ஆளுமை:சைமன் காசிச்செட்டி, கவிரியேல் காசிச்செட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சைமன் காசிச்செட்டி
தந்தை கவிரியேல் காசிச்செட்டி
பிறப்பு 1807.03.21
இறப்பு 1860.11.05
ஊர் திருநெல்வேலி
வகை புலவர், எழுத்தாளர், அரச பணியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. சைமன் காசிச்செட்டி (1807.03.21 - 1860.11.05) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர், அரச பணியாளர். இவரது தந்தை கவிரியேல் காசிச்செட்டி. இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்திய இவர் இவை தவிர சமஸ்கிருதம், போத்துக்கீசம், டச்சு, லத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் ஏற்கனவே இருந்த மணியகாரர் பதவியிலும் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்ட சபை உறுப்பினராகவும் நியமனம் பெற்றார். 1848ஆம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.

தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி, தமிழ் புளூட்டாக் போன்றன இவரால் எழுதப்பட்டன. மேலும் இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டை இவர் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றை 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராண பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 73-75

வெளி இணைப்புக்கள்