ஆளுமை:நவநீதகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவநீதகிருஷ்ண பாரதியார், சுப்பிரமணிய பாரதியார்
தந்தை சுப்பிரமணிய பாரதியார்
தாய் தையலம்மை
பிறப்பு 1889
இறப்பு 1952
ஊர் தஞ்சாவூர்
வகை கல்வியியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு. நவநீதகிருஷ்ண பாரதியார் (1889 - 1952) இந்தியா, தஞ்சாவூரைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய பாரதியார்; தாய் தையலம்மை. இவர் தனது இளமைக் காலத்தில் சர்க்கரை இராமசாமிப் புலவரிடம் தமிழையும், நாராயணசாமி ஐயரிடம் சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம் பொருளதிகாரத்தையும், அரசன் சண்முகனாரிடம் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், சொல்லதிகாரத்தையும் கற்று வந்தார். தமது பதினெட்டாவது வயதில் பாலைக்காடு விக்றோறியாக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக பணியாற்றத் தொடங்கிய இவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானம் திருப்பெருந்திரு அம்பலவாணதேசிக சுவாமிகளுக்கு திருமுறை ஆராய்ச்சி துணைவராக விளங்கியதோடு மூன்று ஆண்டுகள் வரை திருவாரூர்க் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றினார்.

1917ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்து சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்டதும் சுன்னாகம் மருதனார் மடத்தில் அமைந்துள்ளதுமான இராமநாதன் மகளிர் கல்லூரியில் தலமைத் தமிழாசிரியராக கடமையேற்றார். திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தலமைத் தமிழ் பண்டிதராகவும், 1936ஆம் ஆண்டிலே பரமேஸ்வரா பண்டித ஆசிரிய கலாசாலையில் தலமைத் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

1912ஆம் ஆண்டிலே உலகியல் விளக்கம் என்னும் நூலினையும் 1929ஆம் ஆண்டில் புத்திளஞ் செங்கதிர் என்னும் செய்யுள் நூலையும், 1934ஆம் ஆண்டிலே பறம்பு மலைப் பாரி என்னும் நாடக நூலையும் பாரதியம் என்னும் பெயருடன் மூன்று பகுதிகளாகச் சிறுவர்களுக்கான இலக்கண நூலினையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 163-165