ஆளுமை:லத்தீப், எஸ். எல். ஏ.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 24 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எஸ். எல். ஏ. லத்தீப்
தந்தை சாலிகு லெப்பை
தாய் சரிபா உம்மா
பிறப்பு 1939.08.24
இறப்பு 2009.05.08
ஊர் மருதமுனை, அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் குட்டிப்புலவன், இசைவாணர், ஈழபாரதி, மருதூர்வாணர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எஸ். எல். ஏ. லத்தீப் அவர்கள் அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சாலிகு லெப்பை, சரிபா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக 1939.08.24 இல் பிறந்தார் . இவர் மருதமுனை அல் மனார் தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் குட்டிப்புலவன், இசைவாணர், ஈழபாரதி, மருதூர்வாணர் ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவருடைய மனைவி றகுமத்துநாச்சி. இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பகாலங்களில் நெசவு, கைத்தறி போன்ற தொழில் துறையில் ஈடுபட்டார்.

1951ம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகை (பாலர்பகுதி) மூலமாக எழுத்துலகில் பிரவேசித்தார். இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவரது முதல் கவிதையின் தலைப்பு ‘என்தம்பி’ ஆகும். அன்றிலிருந்து 2009 வரை சுமார் 150 சிறுகதைகளையும், 250 கவிதைகளையும், 500க்கு மேற்பட்ட கட்டுரைகளையும், பல குறுநாவல்களையும் எழுதியுள்ள இவர் தேன்மதி, சமாதானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

எஸ். எல். ஏ. லத்தீப் அவர்களினால் நபி ஜனன பா(1953), முஸ்லிம் முரசொலி இசை(1959), இசைவிருந்து(1961), முதலிரவு(1971), பெருநாள் பரிசு(1970), சூறாவளி(1979), மத்திய கிழக்கிலே (1997) போன்ற நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இவரது பெருநாள் பரிசு எனும் குறுநாவல் அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

1988ம் ஆண்டு ‘சமாதானம்’ எனும் சஞ்சிகையை வெளியிட்டார். “எல்லா இனங்களும் இணைந்தன்பு கொள்வோம்” என்ற அடிப்படையைக் கொண்டு சமாதானம் வெளிவருவது இனங்களுக்கிடையே புரிந்துணர்வுப் பாலமாக அமைகின்றது எனக் குறிப்பிடலாம். 1988 ஜூலை மாதம் முதலாவது 'சமாதானம்' சஞ்சிகை இதழை வெளியிட்டு மரணிக்கும் வரை 16 இதழ்களை வெளியிட்டுள்ளார்.

17வது சமாதானம் இதழை வெளியிட இருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார். 1954 ஆம் ஆண்டிலிருந்து பல இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு எண்ணற்ற பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ள இவர் தனது சஞ்சிகைகள் மூலமாக பல போட்டிகளை நடாத்தி வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பல பரிசில்களை வழங்கியுள்ளார். இலக்கியத்துக்குப் புறம்பாக இவரை ஒரு சிறந்த கலைஞராகவும் நோக்கலாம். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே இவர் நாடகங்களில் நடிக்கலானார். 1944 இல் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்களால் எழுதப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட "அல்பாதுஷா” நாடகத்தில் குழந்தையாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அக்பர் சக்கரவர்த்தி, மதுரைவீரன் போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளார். அறுபது லட்சம் கொலைகள் நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் திருச்செல்வம் கெளரவித்துள்ளார்.

மருதூர்வாணர் லத்தீப் அவர்கள் பஜனை, ஊஞ்சல் பாட்டு, பொல்லடி விருத்தம், நாட்டுக்குத்து போன்ற துறைகளிலும் அதிக ஈடுபாடு காட்டி சேவையாற்றியுள்ளார். உமர் ஷாப்பாகவதர், ஞானரத்தினம் போன்றவர்கள் வயலின், தப்லா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களின் சீடனாக இருந்து பல கச்சேரிகளைச் செய்துள்ளார். அத்துடன் யூரீ எதிர்ப்புப் போராட்டத்தின் போது மேடைகள் தோறும் பாட்டுக் கச்சேரி மூலம் தமிழ் முழக்கம் செய்துள்ளார்.

அத்துடன் கதிர்காமத்தில் மொஹிதீன் பேக் தாவுத்ஷா, நிஷாம்ஹீம், பதுறுத்தின் பாவா ஆகியோருடனும் பாட்டுக்கச்சேரிகள் செய்துள்ளார். அத்துடன் வானொலியிலும் கணிசமான பங்களிப்பினை வழங்கி யுள்ளார். இவரின் கலைச் சேவையைக் கெளரவித்து 1960இல் புலவர்மணி ஆ. மு. சரிபுத்தீன் அவர்கள் “இசைவாணர்” பட்டம் வழங்கி கெளரவித்துள்ளார். அத்துடன் "ஈழபராதி'’ எனும் பட்டம் பெற்ற இவரை ஶ்ரீலங்கா அரசு 2001 ஆம் ஆண்டில் கலைஞர்களுக்கு வழங்கும் அதி உயர்விருதான ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

இவரது பணியைப் பாராட்டி யாழ் தந்தை செல்வா நினைவு மன்றத்தால் 2004.04.26ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் 'தந்தை செல்வா விருது' வழங்கப்பட்டது. தினச்சுடர் விருதும் சிரேஷ்ட கவிஞருக்கான சான்றிதழும் கடந்த 2004.06.06 ஆம் திகதி கல்முனையில் முன்னாள் ஊடகப் பிரதி அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீனால் வழங்கப்பட்டன. மேலும் தென்கிழக்குப் பல்கலைக் கழக அப்போதய பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச். காலிதீன், செழியன் பேரின்பநாயகம் உட்பட பலர் இவருக்குப் பொன்னாடை போர்த்தி இவரது இலக்கியப் பணியைப் பாராட்டியுள்ளனர்.

இவரது இலக்கியப் படைப்புகளின் பிரசவத்திற்கு சட்டத்தரணியும், பதில் நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். பதுறுத்தீன் அவ்வப்போது நிதியுதவி வழங்கி மருதூர் வாணரை உற்சாகப்படுத்தினார். அவர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையான நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மருதமுனை பொது நூலகம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி நூலகம் ஆகியவற்றுக்கு தனது அந்திமக் காலத்தில் வழங்கினார். இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நூல்கள், ஏனைய இலக்கியப் படைப்புக்கள் அனைத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கலாபூசணம் எஸ். எல். ஏ. லத்தீப் என்ற மருதூர்வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் அகப்பட்டு உயிரிழந்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 133-136


வெளி இணைப்புக்கள்