நிறுவனம்:அம்/ கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் அட்டாளச்சேனை
முகவரி அட்டாளச்சேனை, அம்பாறை
தொலைபேசி 0672 277 285
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


அட்டாளச்சேனை அறபுக் கல்லூரியானது கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம் அட்டாளச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது 1954.11.08 அன்று ஏ. பி. அப்துல்லாஹ் ஆலிம் அவர்களால் இக் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அமைக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் இங்கு பயிலும் மாணவர்கள் சிறந்த தகமைகளையும் ஆற்றல்களையும் உடையவர்களாக வெளியேறுகின்றனர். ஆறாம் வருடத்தில் அல் - ஆலிம் ஆரம்பப் பரீட்சைக்கும் ஏழாம் வருடத்தில் இறுதிப்பரிட்சைக்கு தோற்றுவர். இது வரையில் இக் கலாபீடம் 800 ற்கும் அதிகமான உலமாப் பெருமக்களை உருவாக்கியுள்ளது.

இவர்களில் கலாநிதிகள், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், பயிற்சிபெற்ற ஆசிரியர்கள், பள்ளிவாசல் இமாம்கள் எனப் பல்வேறு கல்விமான்களும் அடங்குவர். மேலும் உலகின் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழங்களான கெய்ரோ அல் - அஸ்ஹர், மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம், பாகிஸ்தான் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்பவற்றில் இக்கல்லூரியின் மாணவர்கள் முத்திரை பதித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இக்கல்லூரி ஈன்றெடுத்த குழந்தைகளில் கலாநிதி எம்.என். தீன் முகம்மது அவர்கள் கட்டார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் சவூதி அப்ஹா, கலாநிதி ஏ.பீ. மஹ்றூப், பீ.எம். ஹம்தூன் போன்றோர் விரிவுரையாளர்களாகவும் உள்ளனர். சகல மாணவர்களுக்கும் தங்கிக் கற்பதற்கான வசதியும் உள்ளன. கல்லூரிப் பரிபாலனம் 25 உறுப்பினர்களைக் கொண்ட ஆளுநர் சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

ஆரம்பகாலத் தவிசாளராக பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அல் - ஹாஜ் எம். எம். இப்றாஹீம் முதலியார் அவர்களும் தொடர்ந்து அல் - ஹாஜ் மர்ஹூம் பஸீல் ஏ. மஜீத் அவர்களும் அல் - ஹாஜ் கலாநிதி அச்சி எம். இஷ்ஹாக் அவர்களும் ஆற்றியுள்ள சேவைகள் அளப்பெரியது. ஆரம்பகால உறுப்பினர்களான மெளலான அல்ஹாஜ் ஜே.எம். ஷம்சுதீன், அல் - ஹாஜ் ஏ.எல். இப்றாலெவ்வை, ஜனாப் ஏ. எல். ஆதம்லெவ்வை, மெளலவி எம். எஸ். சுலைமாலெவ்வை ஆகியோரும் சிறப்பான சேவைகளை ஆற்றியுள்ளனர்.

கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் நிலவிய இஸ்லாமிய சமயக் கலாச்சார சமூகத் தேவைகளை கருத்தில் வைத்து நன்நோக்கு கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அக்காலத்தில் மிகக் குறைந்த பெளதீக வளங்களையும் ஆளணிகளையும் கொண்டு அமைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் தேசியரீதியில் ஒரு முதிர்ச்சி பெற்ற கல்லூரியாக உருவாகியது. எகிப்தில் உள்ள அல்-அஷ்ஹர் சர்வ கலாசாலை இக் கல்லூரியின் பட்டச்சான்றிதழ்களை ஒரு உயர்தரத்திற்கு சமமாக கருதுகின்றது. 1954.11.07 இல் கிழக்கிலங்கை உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், புரவலர்கள் எனப் பலர் கொண்ட மாபெரும் மாநாடு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் கூட்டப்படது.

அதன் பின் கிழக்கிலங்கை இஸ்லாமியக் கலாவிருத்திச் சங்கம் அங்குராப்பணம் செய்யப்படது. அதனை தொடர்ந்து கல்லூரிக்கான இடம் மர்ஹூம்களான அல் - ஹாஜ் என். எம். ஜமாலுதீன் மெளலானா, எஸ். ரீ. அகமது லெப்பை கிராம விதானையார் ஆகியோரால் அன்பளிப்பு செய்யப்பட்டு சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் எம். எம். மீராலெப்பை அவர்களின் பிரேரணைப்படி தற்காலிகக் கட்டிடத்திற்கு அத்திவாரமிட தீர்மானிக்கப்பட்டது. அடுத்த நாள் நிரந்தர கட்டிடத்திற்கான அத்திவாரம் மர்ஹூம் அல் - ஹாஜ் எம். எம். இப்றாஹீம் அவர்களது தலைமையில் டாக்டர் எம். எம். மீராலெப்பை அவர்களால் இடப்பட்டது.

அதன் பிற்பாடு தற்காலிக கற்பித்தல் செயற்பாடு ஆரம்பமானது. 1955ம் ஆண்டு தற்காலிக அதிபராக மெளலவி அல் - ஹாஜ் மர்ஹூம் ஏ. அப்துர்ரஹ்மான் நியமனம் பெற்றார். ஸ்தாபகத் தலைவர் அல் - ஹாஜ் எம். எம். இப்றாஹீம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஜனாப் எம். எஸ். எம். முஸ்தபா உடையார் ஆளுநர் சபைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதிராம்பட்டினம் மர்ஹூம் அல் - ஹாஜ் கே. கே. அபூபக்கர் ஆலிம் ஹஸரத் அவர்கள் நிரந்தர அதிபரானார்.

1956இல் அகில இலங்கை சோனகர் சங்க ஆயுட்காலத் தலைவர் அல்ஹாஜ் மர்ஹூம் ஏ. ஆர். அப்துர்ராஸிக் பரீத் அவர்களால் நிரந்தரக் கட்டிடம் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. 1957இல் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறபுக் கல்லூரியாகப் பதியப்பட்டது. 1959, 1960களில் எகிப்து நாட்டு தூதுவர், அறபுநாட்டு பிரமுகர் போன்றோர் விஜயம் செய்தனர். கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 1963.11.10 அன்று நடைபெற்றது. 1980இல் றாபிதுல் ஆலமுல் இஸ்லாமி மக்கா மூலம் U.S. 15,151.51 க்கான காசோலை இரு மாடிக் கட்டட வேலைகளுக்காக பெறப்பட்டது.

முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம். ஏ. பாக்கீர் மக்கார் விடுத்த வேண்டுகோளின் பேரில் இக்கல்லூரியைப் பாராளுமன்றத்தில் கூட்டிணைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் பாராளுமன்றம் கலைந்தது. பின்னர் அன்னாரின் புதல்வரும் அப்போதைய வீடமைப்பு ராஜாங்க அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் இக்கல்லூரி கூட்டிணைப்புச் செய்யப்பட்டது. 1995இல் கல்லூரியின் 40ம் ஆண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டு 5வது பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.

2003இல் இக்கல்லூரியின் மூன்று மாடிக் கட்டடத்திற்கான அத்திவாரம் அதிபர் அல் - ஹாஜ் மெளலவி ஏ. முஹம்மது அவர்களாலும் கல்லூரிப் பரிபாலன சபையினராலும் இடப்பட்டது. 2006இல் கல்லூரிக்கான பொன்விழா கொண்டாடப்பட்டு பொன்விழா மலரும் வெளிடப்பட்டது. காலம் செல்ல செல்ல மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. 2006ம் ஆண்டு 60ம் ஆண்டுக்கான வைர விழா கொண்டாடப்பட்டு வைரவிழா மலரும் வெளியிடப்பட்டது.

கல்லூரியின் பழைய கட்டிடங்கள் சுமார் அறுபது வருடங்கள் பழைமையானதால் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஸாமில் குழுமத்தின் உதவியால் புதிய நான்கு மாடிக் கட்டிடப்பணி ஆரம்பிக்கப்பட்டது. அல்-குர் ஆன் மனனப் பிரிவு, கணனிப் பிரிவு, சிரேஷ்ட மாணவர் விடுதி, காரியாலயம், நூலகம் என்பன நவீனமுறையில் அமைக்கப்பட்டது.