ஆளுமை:ஜெயநாதன், கதிரவேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலுப்பிள்ளை ஜெயநாதன்
தந்தை கதிரவேலுப்பிள்ளை
தாய் பாக்கியம்
பிறப்பு 1950.12.10
ஊர் திருகோணமலை
வகை கவிஞர்
புனை பெயர் காசியப்பித்தன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் சமாதான நீதிவான், இலக்கிய வித்தகர், கவிஞர், நாடக நடிகர், எழுத்தாளர் என பல துறை ஆளுமை ஆவார். கலைகளை இரசிக்கும் திறன் கொண்டவர்கள் கலைஞராவார்கள். அந்த வகையில் சம்பூரில் 1950.12.10 தலைமை ஆசிரியர் கதிரவேலுப்பிள்ளை அவர்களின் மகனாகப் பிறந்தவர்.

ஜெயநாதன் அவர்கள் இளமையிலே கலைமீது ஆர்வம் கொண்டு விளங்கினார். பின்னர் சேனையூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற "கலைவிழா"வில் கலந்திருந்த நேரம் சம்பூரில் இருந்து "தண்ணீர் பந்தல்" என்ற நாடகத்தில் 14வது வயதில் சிறுவனாக இருந்த ஜெயநாதன் சின்னக்குட்டி பாத்திரமேற்று நடித்தார். இது இவரின் கலைப்பிரவேசமாக அமைந்திருந்தது. 1966களில் "சிலம்பொலி"நாடகமன்ற உறுப்பினராகி நாடகங்களில் நடித்தார். பின்னர் 1968இல் சம்பூர் தமிழ் கலாமன்றத்தில் இணைந்து "ஆப்பரேஷன்,போடியார் மாப்பிள்ளை, தங்கையின் பாசம்" போன்ற நாடகங்கள் இவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது.

நகைச்சுவைப் பாத்திரமேற்று மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார். 16 வயதில் கவிதை, பாடல் இயற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்தி ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 1971இல் கவிஞர் தாமரைத்தீவான் அவர்களின் கவியரங்கில் 'காசியப்பித்தன்' எனும் பெயரில் களமிறங்கி கவிதை பாடினார். 1974இல் வவுனியா விவசாயக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் நகரசபை மண்டபத்தில் கவியரங்கு நடாத்தினார்.

1976இல் ஆசிரியர் நியமனம் பெற்று குச்சவெளி விவேகானந்தாவில் கற்பித்தல் பணியை மேற்கொண்டார். "சுந்தரத்தார் வீடு" என்ற தாளலய நாடகத்தை பயிற்றுவித்து மேடை ஏற்றினார். 1977களில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து, தமிழ் மன்றச் செயலாளராகி கலைப்பணி புரிந்தார்.1980,1982களில் தென்னைமரவாடி மற்றும் பட்டித்திடல் மகா வித்தியாலயம் போன்றவற்றில் கடமையாற்றி கலைகள் மீது மாணவர்களை ஆர்வம் கொள்ள வைத்தார்.

இவருடைய துணைவியார் கிளிவெட்டியை சேர்ந்த புகழ் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரும் ஆசிரியர் பணி செய்தவர். பண்பான நான்கு பிள்ளைகளைத் கொண்டவர். கிளிவெட்டியில் வாழ்ந்து வந்த வேளை 1985இல் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம் பெயர்ந்து திருமலை வந்து சிறிகோணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இக்காலத்தில் மாணவர்களை கவிதை, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொள்ள வைத்தார்.

1992இல் இலிங்க நகர் சிறிகோணலிங்க மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்றார். 2007இல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று பாராட்டுப் பத்திரம் பெற்றுக் கொண்டார். 2016இல் "அற்றைத் திங்கள்" என்ற கவிதை நூலை வெளியிட்டார். 2017 இல் நாடக இலக்கியத்திற்காக இலங்கை அரசின் உயர் விருதான "கலாபூஷணம்"விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

நீதிச் சேவை ஆணைக்குவின் மத்தியஸ்தராகவும், சமாதான நீதிவானாகவும் கடந்த நான்கு வருடங்களாக கடமையாற்றி சமூகப்பணி ஆற்றி வருகிறார். இன்றுவரை திருகோணமலை உவர்மலை சனசமூக நிலையத்தில் தலைவராக இருந்து வருகிறார். 2010இல் சிறிகோணலிங்க மகா வித்தியாலயத்தில் கல்விப் பணியும், கலைப்பணியும் ஆற்றி மக்கள் மனங்களில் இடம்பிடித்ததோடு, 17 வருடகால அதிபர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

2020இல் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கலை, இலக்கியப் பணிக்காக "வித்தகர்" விருது வழங்கிக் கெளரவித்தமை சிறப்பிற்குரியதாகும்.