நிறுவனம்:தி/ கலைமகள் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/கலைமகள் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் அன்புவழிபுரம்
முகவரி தி/கலைமகள் மகா வித்தியாலயம், திருகோணமலை
தொலைபேசி 0262222426
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருக்கோணமலையின் மேற்க்கே, குன்றக்குடி அடிகளாரால் நாமமிடப்பட்ட "அன்புவழிபுரம்" எனும் கிராமத்தில் எமது தி/கலைமகள் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் நடுவே 05.01.1971 இல் திரு. மு. மகாதேவன் அதிபருடன் இரண்டு ஆசிரியர்களும், 27 மாணவர்களுடனும் தற்காலிகக் கொட்டில் ஒன்றில் ஆரம்பப் பாடசாலையாக உருவாக்கப்பட்டது. மாலை வேளையில் பொழுதுபோக்கிற்காக பலர் ஒன்றுகூடும் நோக்கத்தில் கட்டப்பட்ட தற்காலிகக் கொட்டிலிலேயே, கதிரை மேசைகளைப் பெற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதென்றும் கூறுவர். இதன் பின்பு அரசு நிரந்தரக் கட்டிடமொன்றை அமைத்துக் கொடுத்தது.

தொடர்ந்து அதிபர் திரு. இ. தேவநாயகம் அவர்கள் 01.08.1971 இல் கடமையேற்றார். தொடர்ந்து அதிபர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்கள் 30.05.1978 இல் கடமையேற்றார். தொடர்ந்து அதிபர் திரு. தேவதாசன் அவர்கள் 22.11.1985 இல் கடமையேற்றார். தொடர்ந்து அதிபர் திரு. மா. கந்தையா அவர்கள் 15.05.1987 இல் கடமையேற்றார். இவ்வாறாக 1991 வரை இருபது வருட காலங்கள் முப்பது பேர்ச்சஸ் சுற்றுவட்டத்திற்குள் எமது பாடசாலை இயங்கி வந்தது. படிப்படியாக நான்கு சிறிய கட்டிடங்களுடன் தரம் ஐந்து வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இவ்வித்தியாலயத்திற்கென ஒரு கிணறு கட்டப்பட்டிருந்தது. இதன் விசேடம் என்னவென்றால் அயல் வீடுகளுக்கான கிணறுகளில் நன்னீர் சுவை குன்றிக் காணப்பட இவ்வித்தியாலய கிணற்றின் நீர் நன்னீர் ஊற்றும் சுவையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. 1990களில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இப் பாடசாலையில் முகாமிட்டுத் தங்கியிருந்தனர். இதன்பின் அரசு இவ் வித்தியாலயத்திற்கென அலுவலகம் ஒன்றையும், சிறிதான வகுப்பறைகளுடன் மின்சார வசதியையும் அமைத்துக் கொடுத்திருந்தது. தொடர்ந்து 18.04.1991 இல் கடமையேற்ற அதிபர் அமரர் திருமதி. அன்னலஷ்மி சண்முகநாதன் அவர்களால் தரம் 6 பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இரண்டு ஆசிரிய விடுதிகளையும் ஏற்படுத்தியிருந்தார். ஆளுநரால் வித்தியாலயத்தின் அருகிலிருந்த நெசவுநிலையக் காணி பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து 19.08.1992 இல் அதிபராக இருந்த திரு. என். இராஜநாதன் அவர்கள் பாடசாலையின் நாற்புற எல்லைகளுக்கும் சுற்று மதிலை அமைத்துக் கொடுத்தார். அத்துடன் இரண்டு ஆசிரிய விடுதிகளையும், மனையியல், விஞ்ஞான ஆய்வு கூடங்களுடன், இரு மாடிக்கட்டிடங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் பாடசாலைக் காணி சமநிலமாக அமையாது மேடுபள்ளமாக காணப்பட்டது. பாடசாலை முற்றத்தில் மழைக்காலங்களில் குளம் போன்று நீர் நிறைந்திருக்கும். மாணவர்கள் இடைவேளை நேரங்களில் கால்களை நனைத்து விளையாட ஓடுவதும், அதை ஆசிரியர்கள் கண்டிப்பதுமாக தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சிலவேளைகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் சேற்றில் சறுக்கி விழுவதுமுண்டு, இதைக் கண்ணுற்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள் கழகங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவை கிரவெல் மண் கொடுத்தும், பெக்கோ மெசின் கொடுத்து உதவியும் நிலத்தைச் சமப்படுத்துவதற்கு உதவி செய்தமை இன்னும் நினைவு கூரவேண்டிய நிகழ்வாகும். தொடர்ந்து 06.01.1997 இல் அதிபராக கடமையேற்ற திரு. கோ. ஸ்ரீஸ்கந்தா அவர்கள் நூலக வசதியுடன் வகுப்பறைகள் கொண்ட இருமாடிக்கட்டிடம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தார். தொடர்ந்து பழைய மாணவர்கள் அரச உதவியுடன் நீர்த்தாங்கி ஒன்றினை ஆக்கினர். மலசலகூடங்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்படுத்தப்பட்டன.

2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட நாட்கள் இப் பாடசாலையில் முகாமிட்டிருக்க நேர்ந்தது. இவ்வேளை இவ்வூர் மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். பாடசாலை காலை மாலை வேளையாக நடாத்த வேண்டிய நிலைமை காணப்பட்டது. இதன் பின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (Save the Children) கணினி அலகு, நுண்கலை அலகு, விஞ்ஞான அலகு, அலுவலகம் போன்றவற்றுடன் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றைத் தந்து கணினிகளையும் கொடுத்தது. 2007இல் LCORC நிறுவன அனுசரணையுடன் திரு. ஜெரால்ட் கணபதிப்பிள்ளை அவர்களது ஆலோசனையுடன் வலயக்கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் விசேட கல்வி அலத ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் காலங்களில் JAICA செயற்றிட்டத்தினூடாக விருதினைப் பெற்றது.

தொடர்ந்து 12.11.2007 இல் கடமையேற்ற திரு. வே. ஸ்ரீஸ்கந்தராஜா அதிபர் அவர்கள் பாடசாலையின் கவின் நிலையைப் பெருக்குவதற்காக உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிழல் தருமரங்கள், பூமரங்கள், காட்சிப்பலகைகள், சுவரோவியங்கள், சிந்தனைக்கு சில வாக்கியங்கள், மதில் உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளில் வளப்படுத்தியிருந்தார். அத்துடன் கற்பித்த ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் சரஸ்வதி சிலையொன்றையும் நிர்மாணித்திருந்தார். பாடசாலையைக் கையேற்ற திருமதி. ச. இராமநாதன் அவர்கள் காலத்தில் JAICA செயற்திட்டத்தின் மூலம் நடாத்திய போட்டியில் முதலிடத்தைப் இந்த பாடசாலை பெற்றது. பாடசாலைக்கென தனியான விளையாட்டு மைதானம் பெறப்பட்டு விளையாட்டுப்போட்டியும் நடாத்தப்பட்டது. அத்துடன் க.பொ.த.(உ/த) வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 06.07.2010 இல் இவ்வித்தியாலயத்தைப் பொறுப்பேற்ற அதிபர் திரு. க. ரவிதாஸ் அவர்கள் இவ்வித்தியாலயத்தை மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தினார். அத்துடன் Internet, Email. Multimedia போன்ற நவீன தொடர்பாடல் தொழிநுட்பத் திறனை விருத்தி செய்யும் செயற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றுகூடல் மண்டபத்தின் கீழ் மேல் தள வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு மின் இணைப்பும் பெறப்பட்டு 400 கதிரைகளும் பெறப்பட்டுள்ளன.

மாணவர் ஒன்று கூடும் இடம் கற்கள் பதிக்கப்பட்டு, ஒலி பெருக்கி வசதியுடன் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அழகிய முகப்பு வாயில் அமைக்கப்பட்டு பாடசாலை அழகிய கவின் நிலையுடன் காணப்படுகிறது. மேலும் மலசல கூட வசதிகள், சிற்றுண்டிச்சாலை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மதில் கட்டுமாணப் பணிகளும் நடைபெற்றுள்ளன. மாணவர்கள் உண்பதற்கு இருப்பிடவசதியும், குடிநீர்வசதியும். நவீன முறையில் அமைக்கப்பட்ட மசைலகூடமும் மற்றும் கட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு சீருடையும், மாணவர் தலைவர் சீருடையும் புதிய இலச்சினை, கழுத்துப்பட்டி என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1971 இல் ஒரு கொட்டினுடன் பிறந்த வித்தியாலயம் இன்று 3ஏக்கர் 3ரூட் 12 பேச்சர்ஸ் காணியில் கம்பிரமாகக் காட்சியளிக்கிறது. கல்வித் துறையில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று வலய, மாவட்ட, மாகாண, தேசிய விருதுகளையும் பெற்று முன்னணிப் பாடசாலையாக இப் பாடசாலை வளர்சிசி பெற்று வருகிறது.