நிறுவனம்:கிளி/ கனகபுரம் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ கனகபுரம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் -
முகவரி கனகபுரம், கிளிநொச்சி
தொலைபேசி 021-320-8214
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருமூலரால் சிவபூமி எனப்போற்றப்படும் ஈழமணித் திருநாட்டின் வளம் கொழிக்கும் வன்னி மாநிலத்தில் முல்லையும், மருதமும், நெய்தலும் இலங்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கே கரைச்சிப் பிரதேசத்தில் கனகம் (பொன் ) விளையும் பூமியாக 1958 ஆம் ஆண்டு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கனகபுரம் கிராமத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்விக்கூடம் ஒன்று அமைப்பதற்காக 1967 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டு, கட்டிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு இக் கிராமக் குடியேற்றத்திற்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தின் அன்நாளுக்கான அரச அதிபர் திரு.மு. ஸ்ரீகாந்தா அவர்களால் 1969.11.11 அன்று யாழ்/கனகபுரம் அ. த. க. பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலையின் முதல் அதிபராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு க.பொன்னையா அவர்கள் (1969-1980) கடமையாற்றினர். இப் பாடசாலையின் முதல் மாணவியாக இரண்டாம் பண்ணையைச் சேர்ந்த செல்வி விநாயகமூர்த்தி லட்சுமி சேர்க்கப்பட்டு தொடர்ந்து ஆறு மாணவர்களுடன் பாடசாலை செயற்படத் தொடங்கியது.1972 இல் ஐந்து ஆசிரியர்கள் 260 மாணவர்கள் என வளர்ச்சியடையத் தொடங்கியது. அக்காலப் பகுதியில் கடமையாற்றிய ஆசிரியர்களான திருமதி. மேரி ஜோசப்பின்அமிர்தரத்தினம்,திரு.க.அந்தோனிப்பிள்ளை, திரு. தோமஸ், திருமதி. தி.தங்கம்மா, திருமதி நாகம்மா போன்றோர் பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் பங்காற்றினர்.

விஜயதசமியன்று மாணவச் செல்வங்களுக்கு அதிபர் ஏடு தொடக்கி வைத்ததும் ஏனைய ஆசிரியர்கள் பாலை மர நிழலின் கீழ் பாடல் ஆடல்களை நிகழ்த்திக் கல்வி கற்பித்தமையும் ஆரம்பக்கல்வி கற்ற மாணவர்களின் மனங்களில் இன்று வரை அழியாத நினைவுகளாக உள்ளது.1970 இல் இப்பாடசாலைக்கான பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செயலாளராக திருமதி. எம். ஜே. அமிர்தரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.1972 ஆம் ஆண்டு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் இப் பாடசாலையின் வகுப்பறைக்கு சீமெந்தினாலான அலமாரிகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.1973 இல் கனகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கமமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து சேகரித்து தற்காலிக மண்டபம் ஒன்றினை அமைத்தனர்.

1977-1980 ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளில் இலங்கையில் ஏற்பட்ட இனப் பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கனகபுரம் கிராமத்தைச் சூழ எழுந்த புதிய கிராமங்களான அம்பாள் குளம், உதயநகர், விநாயகபுரம், செல்வா நகர் உட்பட பல கிராமங்களில் இருந்து பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இதனால் மாணவர்களின் தொகை 565 ஆக அதிகரித்தவுடன் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் பத்தாகியது. பாடசாலைக் கட்டிடமும் மூன்றாக அதிகரித்தது. பின்பு திரு.பொன்னையா அவர்கள் ஓய்வு பெற்று செல்ல அதிபர் திரு. பொன். தில்லை நாயகம் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்று அப்போதிருந்த வளங்களைப் பயன்படுத்தி பாடசாலையை நன்னிலைப்படுத்தினார்.

1981 ஆம் ஆண்டு கடைசிப் பகுதியில் திரு.க.சிங்காரவேலு அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்று பாடசாலை பற்றிய சகல விடயங்களையும் பதிவேட்டில் குறிப்பெடுக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். காலப்பகுதியில் தான் திரு.கே.க. சிவகுமாரன் அவர்கள் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தை விருப்புடன் கற்பித்தார். இவர் சிறிது காலம் அதிபராகக் கடமையாற்றினார். பின்பு திரு. எஸ். கே. கந்தையா அதிபரானார். மாணவர் தொகை 834 ஆகவும் ஆசிரியர் தொகை 12 ஆகவும் இருந்தது.அவரைத் தொடர்ந்து திரு. எஸ்.அழகரத்தினம் சிறிது காலம் அதிபர்களாகக் கடமையாற்றினர்.1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் செல்வி இ.சின்னத்தம்பி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். அவர் மாணவர்கள் கழுத்துப்பட்டி அணியும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்தினார்.1983 ஆம் ஆண்டு விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு இப் பாடசாலையின் முதலாவது கன்னி விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டது. திரு. கே. சாம்பசிவம் அவர்கள் 1984.03.15 அன்று அதிபராக பதவி ஏற்றார். இவ் வேளையில் இப் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய காலமாகும். மாணவர் தொகைக்கு (933) ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் தான் திரு.கே. சாம்பசிவம் அதிபர் அவர்கள் கூடுதலான பட்டதாரி ஆசிரியர்களைப் பெற்றுக் கொடுத்தார். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமும் விளையாட்டு, கலைத் திறன் போட்டிகள் போன்றவற்றில் பங்கு கொண்டு மாவட்ட மட்டப் பரிசில்களைப் பெற்றனர்.

1986 ஆம் ஆண்டு திரு.க ஆறுமுகதாஸ் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். அந்நேரம் மாணவர் வருகை அதிகரித்ததுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதன் முதலில் செல்வன் இ. அமல்ராஜ் அவர்கள் சித்தி பெற்று சாதனை நிலைநாட்டினார்.1987 கட்டடம், ஆசிரியவளம், தளபாடம் போன்ற வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் அதிபர் ஆசிரியர்களின் ஆளுமையாலும், நிர்வாகத் திறந்தினாலும், விடாமுயற்சியாலும் தமிழ்த்தினப் போட்டிகள், கலைத்திறன் போட்டிகள்,மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆண்டவத்தில் மாணவர்கள் முதலாம், இரண்டாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டனர். 1991 பாடசாலையில் கல்வி பயின்று அயல் பாடசாலைகளில் உயர்தர கல்வியினை முடித்துக்கொண்ட மாணவர்களால் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு திரு. அ.றெஜி அலோசியஸ் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1998 இல் தரம் 5 பரிசில் பரீட்சையில் 07 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை நிலைநாட்டினர்.1994 ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஆனது கிளி/கனகபுரம் மகா வித்யாலயம் என்ற பெயரில் 1C தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.1994 இல் கா. பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதோடு வெள்ளி விழா நிகழ்வானது மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.1994 ஆம் ஆண்டு கா. பொ.த சாதாரண பரீட்சையில் பெருந்தொகையான மாணவர்கள் கணித, விஞ்ஞான வர்த்தகம்,கலைப் பிரிவுகளுக்கு தெரிவானார்கள்.

1995 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட இடப் பெயர்வினால் மாணவர் தொகை 2000 ஆக அதிகரித்தது. இவ்வேளை பாடசாலையில் இடவசதியின்மை ஏற்பட திரு. வி. இராஜசுந்தரம் அவர்களின் காணியில் மர நிழலின் கீழ் வகுப்புகள் நடாத்தப்பட்டது. 1996 ஆம் ஆண்டு போர் எனும் கொடிய அரக்கனின் பார்வை பள்ளி மீதும் பட்டதைத் தொடர்ந்து கிளி /ஸ்கந்தபுரம் இல 2 அ. த. க பள்ளி வளாகத்தில் தஞ்சம் புகுந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியினால் வகைகள் அமைத்து பல இன்னல்களும், சவால்களுக்கும் மத்தியில் பாடசாலையின் செயற்பாடுகள் நடைபெறத் தொடங்கியது. அதிபர் அவர்களின் அயராத முயற்சியினால் மாணவர்கள் போட்டி மனப்பாங்கு அதிகரித்ததோடு க. பொ.த உயர்தர பரிட்சையில் முதன் முதலாக திரு.செ. துரைரட்ணம் பல்கலைக்கழகம் கலைப் பிரிவுக்குத் தெரிவாகியதோடு நான்கு மாணவர்கள் சித்தியும் பெற்றனர்.

போர்க்காலச் சூழலில் இவ்வதிபரின் சேவையானது பாடசாலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதிபர் திரு.க ஆறுமுகதாஸ் அவர்கள் 1999 ஆம் ஆண்டு கோட்டக்கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதன் பின் திரு.சி. சந்திர ராசா அவர்கள் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட வேளையில் போர்க்கால மேகங்கள் சற்றே விலகி சமாதான ஒளிக்கற்றைகளின் கீற்றுக்கள் தெரியத் தொடங்கியவுடன் பள்ளி மீண்டும் தனது சொந்த இடத்தில் செயற்படத் தொடங்குவதற்கு போரினால் பாதிப்படைந்த பாடசாலை வளாகத்தினைப் பழைய மாணவரும், பெற்றோரும் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டு பாடசாலை செயற்படத் தொடங்கியது.

2002 ஆண்டு திருமதி. பிரபாலினி திலகநாதன் அதிபராகப் பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தார்.2006 ஆண்டு விளையாட்டு மைதானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டுவதற்கு வருகை தந்து வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. அரியரத்தினம், கிராம அலுவலகர் திரு. க.பசுபதிப்பிள்ளை ஆகியோர் அடிக்கல் நாட்டினர். பழைய மாணவர்களான திரு.பி. யூடி ரமேஸ் ஜெயக்குமார், திரு.சி கலைவாணன், திரு. ரெஜி. அலோசியஸ் ஆகியோர் முனைப்புடன் செயற்பட்டனர். ஆனால் அரசியல் சூழ்நிலையால் மைதான வேலை இடம்பெறவில்லை.

2007-2009 காலப்பகுதியில் திருமதி.தேவகி புவனேஸ்வரன் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்று சீரிய முறையில் பாடசாலையை வழி நடத்திக் கொண்டிருந்த வேளையில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர்க்காலச் சூழ்நிலையால், பாடசாலை ரெட்பானாவை நோக்கி நகர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. விற்றல் கற்பித்தல் செயற்பாட்டை தொடர்பாக பாடசாலையின் ஆவணங்கள்,தளபாடங்கள், ஏனைய பொருட்களையும் ரெட்பானாவை நோக்கி நகர்த்துவதில் முன்னின்று உழைத்த அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களான திரு.பொ. அருள் நேசன்,திரு. த.சேதுபதி, திரு. க.வரதராஜா, திரு.பா. ஸ்ரீஸ்குமார், திரு க. யுவராஜா, இளங்குமார் ஆகியோரின் அர்பணிப்பான சேவையும், ஒத்துழைப்பையும் எம்மால் இன்றும் நினைவு கூறக்கூடியதாக உள்ளது.2009 ஆம் ஆண்டு நலன்புரி நிலையத்திலிருந்தபோது எங்கள் பாடசாலையைச் சேர்ந்த 12 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததும் வர்த்தகப் பிரிவில் செல்வன் மே. அன்ரனி நிதர்சன், கோ. கௌசிகன் ஆகிய மாணவர்கள் இருவர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானதும் பெருமைக்குரிய விடயமே.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக எமது பாடசாலையின் ஆசிரியரான தேவேந்திரன் ஞான சோபனா அவர்களையும், சில மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்களையும்,நலன் விரும்பிகளையும், இழந்து கதி கலங்கி நின்ற வேளையில் போக்குவரத்து வசதிகளோ, வர்த்தகநிலையங்களோ, மருத்துவ வசதிகளோ எதுவுமற்ற நிலையில் எமது பாடசாலைச் சூழல் முப்புதர்கள் நிறைந்ததாகவும்,100'*20" அடி கொண்ட 5 வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகள், குழாய்க் கிணறு, கூட்டுறவு விற்பனை நிலையம், சிற்றுண்டிச்சாலை, சிறுவர் பூங்கா, சமையற்கூடம் ஆகியன முற்றாக அழிவடைந்து வளப்பற்றாக் குறையோடு 2010.01.04 ஆம் திகதி மீளவும் சொந்த இடத்தில் அதிபர் தி. க தர்மரத்தினம் அவர்கள் தலைமையில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது.

மீள்குடியேற்றத்தின் பின் எமது பாடசாலையே முதன்முதலாக கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பித்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எமது பாடசாலையின் ஆசிரியர்களையும், ஏனைய பாடசாலைகளின் மாணவர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும், அதிபர்களையும் தாங்கி கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது.

மேலும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள்,ஊர் மக்கள் ஆகியோரின் அயராத முயற்சியால் படிப்படியாக பாடசாலை நல்லதோர் நிலையை அடைந்தது. பெருந்தொகையான மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர்களை உள்ளடக்கி 2010 இல் முதன்முதலாக இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டமையும் மறக்க முடியாதவையாகும்

இக் காலகட்டத்தில் அதிபர் திரு.க. தர்மரத்தினம் அவர்கள் பாடசாலையின் சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்து உறவுப் பாலமாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை இணைத்து தென்பகுதிக்கு கல்வி சுற்றுலாவை மேற்கொண்டமையும் பாராட்டத்தக்க விடயமாகும். குறுகிய காலப்பகுதியாக இருந்தாலும் அயராது உழைத்த இவ் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் என்றும் நன்றிக்கும், மரியாதைக்கும் உரியவர்களே.

இக் காலகட்டத்தில் அதிபர் க.தர்மரத்தினம் அவர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் மாவட்டத்தின் பல பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதால் இணைப்பிலுள்ள மாணவர்கள்,ஆசிரியர்கள் தமது பாடசாலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் ஏறக்குறைய 700க்கு மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கியதாக எமது பாடசாலை காணப்பட்டது.2010.10.06 பிரதி அதிபர் திரு. த.சேதுபதி அவர்கள் பாடசாலைக் கடமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்தினர்.2010.12.15 இல் திரு. ஐ. குகானந்தராசா அதிபர் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் பாடசாலையி ன் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்த வேளையில் 2010-2011 ஆண்டுகளில் எமது பாடசாலையின் சமாதானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் பொதுச் சந்தையினை அமைக்க நடவடிக்கை எடுத்த போது பாடசாலைச் சமூகமும், கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய போதும் அரசியல் சூழ்நிலையால் மைதானக் காணியை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால் எமது மாணவர்களின் விளையாட்டுத் தொடர்பான செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இது பாடசாலைக்கு ஒரு பின்னடைவாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

மேலும் எமது பாடசாலைக்கு யுனிசெப் நிதி உதவியிலான 20'*60' அரை நிரந்தர கட்டிடம் ஒன்று கிடைத்தது.2011.02.28 இல் அது திறந்து வைக்கப்பட்டது. இதனால் ஒரு சில வகுப்பறைகளை உள்ளடக்கி பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

2011.06.30 இல் பீப்பிள் வீசிங் நிறுவனத்தினரால் (People Leasing ) எமது பாடசாலைக்கு ஒரு தொகுதி நூலகப் புத்தகங்களையும், நூலக றாக்கைகளையும் அன்பளிப்புச் செய்தனர். அதனைக் கொண்டு தற்காலிக நூலக அறையொன்றை மெருகூட்டி மாணவர்கள் நூல்களைப் பயன்படுத்தவும், நூலகப் பாடத்தில் பயனடையும் வகையில் தற்காலிக நூலக அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. அதுவே இன்று வரை எமது மாணவர்களுக்கு வளமூட்டுகின்றது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும் 2012.08.31 அன்று நெக்கோட் திட்டத்திலான கட்டிடம் ஒன்றிற்கான அடிக்கல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் 110'*27' அடி அளவிலான மேடையிலான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு 2012.10.19 அன்று திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டத்தினால் இன்று வரை எமது பாடசாலை மாணவர்கள் அடைந்த பயனுக்கு அளவே இல்லை என்று கூறினால் அது மிகையாகாது. இது மட்டுமன்றி கட்டடத்தைச் சூழ உள்ள பகுதி சமதரை அற்றதாகக் காணப்பட்டதால் அதை ஓரளவிற்கேனும் சீரமைப்பதற்கான வேலைத்திட்டச் செயற்பாடு நடைபெற்றதை நன்றியுடன் கூறுவது சாலச் சிறந்தது.

இப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் பௌதீக வளத் தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டதோடு மாணவரின் கல்வி மேம்பாட்டு விருத்திச் செயற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமாகும். இப்பாடசாலை ஆரம்பித்தது முதல் இதுவரை பெற்றிராத வரலாற்றுச் சாதனையாக 2012 ஆண்டு கா. பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறாகச் செல்வி யோசப் தர்ஷிகா 6A, 2B, S என்ற பெறுபேற்றையும் 19 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றனர். அதே ஆண்டு கா. பொ. த உயர்தரப் பரீட்சையில் வணிக பிரிவில் செல்வன் ப.பவிதரன் ( மாவட்ட நிலை 07), செல்வன் டி. நிரோஷன் ( மாவட்ட நிலை 09) ஆகியோர் 3A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமை இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

2013-2014 காலப்பகுதியில் பாடசாலை வளாகத்திற்கு 1500 அடி நீளமான சுற்று பதிலினை புலம்பெயர் நாடுகளிலுள்ள பழைய மாணவர்களினதும் தாயகத்திலுள்ள பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. க. கடம்பசோதி அவர்களினதும் திரு. க.மயூரன் ஆகியோரின் அயராத முயற்சியினாலும் அர்ப்பணிப்பான சேவையினாலும் சுற்றுமதில் அமைக்கப்பட்டு எமது பாடசாலை அழகு பெற்று நிற்கின்றது. மேலும் 2013 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் சித்தி வீதமும் அதிகரித்தமையும் பாராட்ட வேண்டியதாகும். இவ்வாண்டில் கொழும்பு தெற்கு றோட்டறிக் கழகத்தின் அனுசரணையுடன் எமது பாடசாலைக்கு கணினி அறை ஒன்றும் குடிநீர் விநியோக வேலை திட்டமும் இரண்டு கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி விசேட தேவையுடைய மாணவர்களின் நலன் கருதி " மகிழ்ச்சி இல்லம்" ஒன்று அமைக்கப்பட்டு வைத்திய கலாநிதி ஜெயராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் திருமதி.கௌரி பொன்னையா அவர்களால் தேட கல்வி மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்காக தேட கல்வி அளவுக்கான கட்டிட தொகுதிக்கான அடிக்கல் 2013.07.11 இல் இடப்பட்டது. இது 1.9 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2013.09.30 அன்று திறந்து வைக்கப்பட்டது. இம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனால் எமது பாடசாலையின் விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களின் கல்விச் செயற்பாடு தனி ஒரு அலகாகப் பரிணமித்து இன்று வரை அதில் கல்வி கற்கும் மாணவர்கள் மாவட்டம், மட்டங்களில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருவது தனிச்சிறப்பாகும்.2014.03.31 எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் கிளி/ பாரதி வித்யாலயத்தின் அதிபரம் திரு.க. இராசேந்திரம் அவர்களால் பழைய மாணவர் அனுசரணையுடன் எலெக்ரோனிக் மணி அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதுவே இன்று வரை பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது பாடசாலையில் 2014.09.14 அன்று திருமதி இராஜரஞ்சிதம் ரவீந்திரநாதன் அவர்கள் பிரதி அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றார். இவ்வருடத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 6 மாணவர்கள் சித்தியடைந்ததும், சித்திவீதம் 91.4 ஆகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.2015.06.20 ஆந் திகதி அதிபர் திரு.ஜ. குகானந்தராசா அவர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்ல திருமதி இராஜ ரஞ்சிதம் ரவீந்திரநாதன் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் பிரதி அதிபராக திரு. அ. பங்கையற் செல்வன் கடமையை ஏற்றுக்கொண்டார். இவ் வருடத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 06 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர். இதைவிட மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும், கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளும் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண பரீட்சையில் 24 மாணவர்கள் உயர்தரம் கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கா.பொ.த உயர்தரப் பெறுபேறுகளுக்கமைய 03 மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் 96.2 வீதச் சித்தியின்மை பெற்றுள்ளமையும் பாராட்ட வேண்டிய தொன்றாகும்.அதிபரின் அயராத உழைப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையும், பழைய மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பாடசாலையின் சகல துறை வளர்ச்சிக்கும் படிக்கற்களாக அமைந்துள்ளமை என்றால் மிகையாகாது.

நூற்கல்வியில் மட்டும் மாணவர்கள் அனைவரும் சாதனைகள் படைப்பது சாத்தியமற்றது. இக் குறைபாடுகளை நீக்கி ஒரு மாணவன் முழு மனிதனாக வளர இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் தேவை என்பதற்கமைய எமது பாடசாலை மாணவர்கள், கல்வியிலும், விளையாட்டிலும் கலைகளிலும் களங்காண வேண்டும்.

அதற்கமைய எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு படிக்கற்களாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில் எமது பாடசாலையின் வளர்ச்சிப் போக்கை நோக்குமிடத்து "Band வாத்திய "அணி ஒன்றை உருவாக்குவதில் எமது அதிபர், ஆசிரியர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்ட போது World Vision நிறுவனத்தால் அதற்குரிய வாத்திய தொகுதிக் கருவி உபகரணங்களை வழங்கி எமது பாடசாலை மாணவரின் செயற்படுதன்மையை வெளிக்கொணர சந்தர்ப்பமளித்தமை நன்றியோடு இவ் வரலாற்றில் பதிக்கின்றோம்.

வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் 2017.01.11 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.இக் கட்டடம் 18,701.942 ரூபா செலவில் அமைக்கப்பட்டு பூர்த்தியடைந்திருக்கும் இக்கட்டத் தொகுதி எமது மாணவர்களின் வினைத்திறனான கற்றலுக்கு முக்கிய வளமாக சான்று பகரும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமன்றி இக் காலப்பகுதியில் 68,24,580.00 ரூபா செலவில் ஆரம்பப் பிரிவுக்கான கல்விவள நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை. ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்பாடடையச் செய்வதற்கான ஒரு வரப்பிரசாதமாகும்.இக் கட்டடமானது 2019.03.01 இல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் திறன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

நீண்ட காலமாக மாணவரது உடல், உளசீர் நிலைக்குதவும், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான களங்களை வழங்குவதற்கு இடர்பட்டுக் கொண்டிருந்தவேளை 2017.10.15 ஆம் திகதி அன்று எமது மைதானத்தில் கட்டி எழுப்பப்பட்ட புதிய சந்தைத் தொகுதியினைத் திறந்து வைப்பதற்கு வருகை தந்த மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தினத்தில் அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோரான திரு.க.திருவரசு, திருமதி தி.மகேந்திரம் அவர்களும், ஏனைய பெற்றோரும், திரு. பா.தேவகுமார், ஏனைய பழைய மாணவர்களின் அயராத முயற்சியினாலும் ஒத்துழைப்போடு அனைவரும் இணைந்து செயற்பட்டு மகஜர் ஒன்றைக் கையளித்த போது ஜனாதிபதி அவர்களால் மிக விரைவில் எமக்கு ஒரு மைதானம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியொன்றைப் பெற்றுக் கொண்டோம். மேலும் இதே ஆண்டில் நீண்ட காலமாக எமது வரலாற்றுப் பாதையில் கல்வி பெறுபேறுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. விசேட திறமைச் சித்திகளைப் பெற்று ஒரு மாணவி பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றமையும் 05 மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றமையும் கா.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றமையும் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் செல்வி. திருவரசு கம்சாயினி 09 படங்களிலும் A சித்தி பெற்றதுடன் 25 மாணவர்கள் உயர்தரம் கற்கும் வாய்ப்பினைப் பெற்றமையும் எமது பாடசாலையில் கல்விச் செயற்பாட்டில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

அதைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பாடசாலைக்கான மைதானம் ஒன்றை அமைப்பதற்கான காணியைப் பெறுவதற்கு நாம் பல சிரமங்களைச் சந்தித்தோம். அவரது அயராத முயற்சியின் பயனாகக் காணிக்கான உரித்துடமையைப் பெற்று ஜனாதிபதி செயலக நிதியுதவியுடன் பாடசாலை மைதானத்தின் சுற்று மதிலுக்கான அத்திவாரம் இடப்பட்டு சுற்றுமதில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை 2018.03.13 ஆம் திகதி அன்று இனந்தெரியாதோரால் 110 அடி வரையிலான சுற்று மதில் சேதமாக்கப்பட்ட கொடூரமான செயல் கனகபுரம் மகாவித்தியாலயத்தை நேசித்த அனைவரின் மனங்களையும் பாதித்தது." மன்னிப்போம் மறப்போம்" என்பதற்கமைய நல்லுள்ளம் கொண்டவர்களால் மீளவும் சுற்று மதில் அமைக்கப்பட்டு 2018.06.18 ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாடசாலை நிர்வாகத்திடம் மைதானம் கையளிக்கப்பட்ட உன்னதமான நிகழ்வு பாடசாலையின் வரலாற்றுப் பதிவிலே பொறிக்கப்பட வேண்டிய தொன்றாகும்.

எமது பாடசாலையின் நீர் விநியோக முறையிலிருந்த குறைபாட்டை இனங்கண்டு 1991 ஆண்டு கா.பொ.த சாதாரணதர மாணவர்கள் தாமாக முன்வந்து " நிரந்தர நீர்த்தாங்கியொன்றை துரிதமாக அமைத்து மாணவர்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையை சீராக்குவதற்கும்,ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்து 2018.08.31 அன்று பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தமை பெருமைக்குரிய விடயம். இவர்களை நாம் பாராட்டுவதும் நன்றியோடு நினைவு கூறுவதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

கடந்த காலங்களை விஞ்சி அண்மைக் காலங்களிலே பாடசாலையின் சகல துறை வளர்ச்சிப் போக்கும் மிக உயர்வடைந்து வருவது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். எமது பாடசாலை அருகிலுள்ள பாடசாலை அது சிறந்த பாடசாலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு 13 வருடம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டம் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருவதும்,நவீனவசதிகளுடனான தேர்ச்சிக் கூடங்கள் அமைத்து கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனுடன் கூடிய தொழில் வழிகாட்டல் மூலம் அவர்களின் திறன்களை விருத்தி செய்யும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பரீட்சைப் பெறுபேறுகளில் மட்டுமின்றி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியவர்களின் நிலை வரவேற்கதக்க தொன்றாகும். இப் பாடசாலையானது வருடம் தோறும் ஆண்டு விழாவினை நடாத்தி அதில் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், அமரத்துவமடைந்த ஆசிரியர்களின் நினைவாக நினைவுப் பரிசில்களையும் வருடம் தோறும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 13 வருடக் கல்வித் திட்டமும், விசேட கல்வி அலகும் உள்ளடங்கலாக 516 மாணவர்களையும் 47 ஆசிரியர்களையும் கொண்டமைந்துள்ளது.

பாடசாலையில் ஆரம்பம் முதல் இன்று வரை கற்றவர்கள் வைத்தியர்களாகவும், பொறியிலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் பல தொழில்சார் உயர் பதவிகளிலும் இருந்து இம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் சேவையாற்றி வருகின்றமையானது. இது ஒரு தனிச்சிறப்பாகும். எமது பாடசாலையின் சகல துறை மேம்பாட்டிற்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், அபிவிருத்திக் குழு என்பன பாடசாலையின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஒத்துழைப்பு நல்கி எமக்கு உந்து சக்தியாக இருந்து வருகிறது. இதைவிட பாடசாலைக்கு ஆதரவு மிக்க ஓர் அமைப்பாக ( உள் நாட்டிலும், வெளிநாட்டிலும்) இருப்பது பாராட்டத்தக்கது. எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் ரூபா 11000/= பெறுமதி கொண்ட நுழைவாயில் வளைவினை அமைப்பதற்கு உதவியமைக்கு நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.2019 ஆம் ஆண்டு 50 ஆவது அகவை காணும் இந்த நன்னாளிலே பழைய மாணவர்களாக இருந்து புதுமை படைத்த அவர்களது நல்லுள்ளங்கள் புதிய திருப்பமாக நிரூபணமாகி காட்சியளிக்கும் இப் புதிய படைப்புகள் வித்தியாலயத் தாய்க்கு அணி செய்து திறப்பு விழா கண்டு அரங்கேறும் இந்நிகழ்ச்சிகளையும் இப்பாடசாலையின் வரலாற்றுத் தடங்கலாக அமைவதையிட்டு பெருமை அடைகின்றோம்.

கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் பழைய மாணவர்கள் அரச,அரச சார்பற்ற அமைப்புகளினாலும் வழங்கப்பட்டிருக்கும் உதவித் திட்டங்கள்,மாணவர்களின் கற்றலுக்கும், சகல அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே, இவ் உதவி ஒத்தாசைகள் மென்மேலும் பெருகி இப் பாடசாலையை ஒரு முன்னணிப் பாடசாலையாக வளர்ச்சி பெற்று வளமடையும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று பாடசாலையின் நிலையான வளர்ச்சிப் பாதையில் 50 ஆவது அகவை கண்டு" பொன்விழா " மலரினைப் பிரசவித்து மகிழ்ந்திருக்கும் எமது கல்விக்கூடமும், நாமும் உங்கள் அனைவரதும் ஒவ்வொரு துளி வியர்வையும் இப் பாடசாலைத் தாய்க்கு உரமாக்கியிருப்பதைக் கண்டு உவகையடைந்து உயிர் பெற்று உச்சாணிக் கொப்பைத் தொடுவதற்கு உதவிகள் பல புரிந்து பொன் விழாக் காணும் இந்நாளில் தங்களின் பொற்கரங்களைப் பற்றுவதற்காக பீனிக்ஸ் பறவைகளாக எழுந்து நிற்கின்றோம்.

உசாத்துணை :- பாடசாலையின் வெள்ளி விழா மலர் 1994 பாடசாலையின் சம்பவத் திரட்டுப் புத்தகம் கிராமப் பெரியோர்