நிறுவனம்:அம்/ உகந்தை மலை ஶ்ரீ முருகன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உகந்தைமலை ஶ்ரீ முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் பாணம
முகவரி உகந்தை மலை ஶ்ரீ முருகன் கோயில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


உகந்தை மலை ஶ்ரீ முருகன் கோயில் அம்பாறை மாவட்டம் பாணம எனும் ஊரின் எல்லையில் அமைந்துள்ள குமண வனவிலங்கு சரணாலயத்தின் தொடக்க எல்லையில் அடர்ந்த வனத்திற்குள் அமைந்துள்ளது. இத்தலம் மிகப் பழங்காலத்தில் உண்டானதாக ஐதீகம் உண்டு.

குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியதென்றும் மீண்டும் வந்த அத்தகைய வேற்படைக்கதிர்களுள் முதன்மையானது இங்கே தங்கிற்றென்றும் ஐதீகம் உண்டு. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் உகந்தைமலை எனப் பெயர்பெற்றது எனலாம்.

அதுமட்டுமல்லாது இராணவன் எனும் அரசன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவனுக்கு ஆற்றானாச் சென்ற யமதர்மன் நீ ஒரு பெரும் பாவி என்று தோற்று ஓடி தன் இருப்பிடம் செல்ல இராவணனும் தன் பாவம் நீக்கும் பொருட்டாய் தட்ஷணாகிரி (திருகோணமலை), உகந்தகிரி (உகந்தை மலை) எனும் இரு மலைகளில் பூகாரம்பம் செய்தான். சீதையின் சாபத்தால் இராவண வம்சம் வேரற்றுப் போனதால் ஒரு யுகம் வரையும் பாழற்றுப் போனது. அதன் பின் சிங்ககுமாரனது தந்தை தட்ஷணாகிரி ஆலயத்தை செப்பமிட்டு குளம் கட்டுவித்து ஆறு கால பூசையும் நடக்கவைத்து உகந்தகிரி கோவிலையும் செப்பமிடுமாறு சொல்லி சிவபதமடைந்தார்.

அதன் பின் சிங்ககுமாரன் உகந்தைகிரி மலையின் உச்சியில் சிவாலயம், விஷ்ணுவாலயம், பிரம்மவாலயம் அமைத்து மலையடிவாரத்தின் 8 திக்குகளிலும் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எண்மருக்கும் ஆலயம் உருவாக்கி செப்பு கொடித்தம்பம் ஒவ்வொன்றுக்கும் நிறுத்தி மலையுச்சியில் மூன்று ஆலயத்திற்கும் நடுவில் ஒரு தங்கக் கொடித்தம்பம் நிறுத்தி அந்தணர் கொண்டு அபிசேக ஆராதனைகள், பூசைகள் செய்தான். பின்னர் மட்டக்களப்பை அரசாண்ட பிரசேதுவிடம் முகமன் கொண்டாடி ஆடித்திங்கள் அமாவாசை இரண்டு தினங்கள் இராவணன் பேரில் ஒரு பெரிய தீபம் தொடர்ந்து ஏற்ற கேட்டுக்கொண்டான் என்று மட்டக்களப்பு மான்மிய செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீண்டகாலம் இப்படி இருந்து வந்த பின்னர் மட்டக்களப்பை சேர்ந்த யாழ்ப்பாணத்தவரான மார்க்கண்டு என்பவரால் 1885 இல் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு முதல் பூசாரியாக கோளாவிலைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் பூசை செய்தார். பூசகர், வண்ணக்கர் போன்ற நிர்வாக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கோயில் கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கோவில் முன்மண்டபம், புதிய மடங்கள் போன்றன உருவாக்கப்பட்டது. இவ்வாலயத்திற்கு கிழக்கு திசையில் கடல் அமைந்துள்ளது. வடதிசையில் இரு பெரும் மலைக்குன்றுகள் காணப்படுகின்றது. இங்கு வள்ளி, தெய்வானை கோயில் உள்ளது. இதனால் இம்மலைகளை வள்ளி மலை, தெய்வானை மலை என அழைக்கப்படுகிறது.

இம்மலைகளுக்கு நடுவில் காணப்படும் சிறு ஓடையில் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன் பிரமாண்டமான வெள்ளை நாவல் மரம் அமைந்துள்ளது. இதுவே உகந்தைமலை முருகனின் தலவிருட்சமாக உள்ளது. மூலஸ்தானத்தின் தென்கிழக்கு திசையில் இன்னுமொரு படர்ந்த மலைத்தொடர் காணப்பட்டது. 20 அடி உயரமான இம் மலைத்தொடரினை வள்ளிமலை என அழைக்கின்றனர். ஆலயத்தை சுற்றி சுமார் 30 கிணறுகளும் 10 யாத்திரை மடங்களும் காணப்படுகின்றன.

மலைகளில் இரண்டு பெரிய நீர்ச்சுனைகள் உண்டு. இக்கோயிலின் முதலாவது கும்பாபிஷேகம் 1908 ஆம் ஆண்டு நடைபெற்றது. இக்கோயில் முக்கியமானதாக இருக்க இன்னுமொரு காரணம் இலங்கையின் வடதிசையிலிருந்தும் ஏனைய திசைகளிலிருந்தும் வருடந்தோறும் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான ஒரு கேந்திரநிலையமாக இருப்பதாகும். பக்தர்கள் தமது காட்டுவழி பயணத்தை தொடங்கும் இடமாகவும் இது உள்ளது. உகந்தை, கதிர்காமம் என்பவற்றில் ஓரே காலகட்டத்தில் உற்சவம் நடைபெறுவதால் அநேகமானோர் உகந்தை முருகன் ஆலயத்தை தரிசித்துவிட்டு கதிர்காமம் நோக்கிச் செல்வது வழமையாகும்.

காட்டுப்பாதை திறத்தல், மூடுதல் என்பவற்றில் உகந்தை ஆலய நிர்வாகம் அதிகாரம் செலுத்துகிறது. உகந்தை முருகன் ஆலயத்திற்கு வடதிசையில் சந்நியாசி மலையில் விநாயகர் ஆலயமும், தெற்குத் திசையில் குமுண கபிலத்து அம்மன் ஆலயமும் காவல் தெய்வங்கள் போன்று அமைந்துள்ளன. இங்கு நித்திய பூசை, வருடாந்த உற்சவம், கந்தசஷ்டி விரதம், கார்த்திகை தீப நாள், திருவெம்பாவை நாள், தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, சித்திரை, வைகாசிப் பூரணை என்பனவற்றை மட்டக்களப்பிலிருந்து பாணமை வரையான மக்கள் பொறுப்பேற்று நடத்துகின்றனர்.