ஆளுமை:மனோன்மணி, சண்முகதாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோன்மணி, சண்முகதாஸ்
தந்தை முருகேசு
தாய் பாக்கியம்
பிறப்பு 1943.10.14
ஊர் பருத்தித்துறை, தும்பளை
வகை கல்வியியலாளர், ஆய்வாளர், பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோன்மணி, சண்முகதாஸ் (1943.10.14 - ) யாழ்ப்பாணம், வடமராட்சியைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆய்வாளர், பேராசிரியர். இவர் தற்போது கோண்டாவில் கிழக்கில் வசிக்கின்றார். இவரது தந்தை முருகேசு; தாய் பாக்கியம். இவர் தும்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றுப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, கலாநிதிப் பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

இவர் தம் ஆசிரியப் பணியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் 1965-68 காலப்பகுதியில் தமிழ் பயிற்றுவிப்பதில் ஆரம்பித்துத் தொடர்ந்து திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவர் 1983 தொடக்கம் 2003 வரை யப்பான் ரோக்கியோ கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பேராசிரியராகக் கடமையாற்றினார். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள், சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க, தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், ஜப்பானியக் காதற் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள் எனப்பல ஆய்வியல் நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றுடன் சுதந்திரன், ஈழநாடு வலம்புரி, வீரகேசரி முதலான பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.

இவர் சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் இல்லத்திட்டப் பணிப்பாளராக 14 ஆண்டுகள் கடமையாற்றியதுடன் புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியாளராகவும் பாடநூல் ஆக்கப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவரது இலக்கியப் பணிக்காக 2008 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதும் 1988 இல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய இத்திமரத்தாள் நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசும் நல்லூர் கலாச்சாரப் பேரவையின் 2008 ஆம் ஆண்டுக்கான கலைஞானச்சுடர் விருதும் கிடைத்துள்ளன.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 70
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 42-43


வெளி இணைப்புக்கள்