ஆளுமை:நிர்மலா, யேசுதாசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிர்மலா
தந்தை தம்பிராஜு
தாய் மல்லிகேஸ்வரி
பிறப்பு 1966.09.09
ஊர் கண்டி
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிர்மலா, யேசுதாசன் (1966.09.09) கண்டியில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை தம்பிராஜு; தாய் மல்லிகேஸ்வரி. கண்டி, சாந்த அந்தோனியார் மகளிர் கல்லூரியில் கற்றார். முன்பள்ளி ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த நிர்மலா மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா முடித்துள்ளார். அத்தோடு உளவியல் டிப்ளோமாவும் முரண்பாட்டு நிலைமாற்றம் தொடர்பான பயிற்சியும் பெற்றுள்ளார். முன்பள்ளி ஆசிரியராக இருக்கும் போதே முன்பள்ளிக்கு வரும் சிறு குழந்தைகளை அவதானித்து அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி அவர்களின் பெற்றோருடன் நேரடியாக சென்று கதைத்து குழந்தைகளை உளவியல் ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். நிர்மலாவின் சமூக சேவையை அவதானித்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு இவரை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது. தனது 30ஆவது வயதில் கட்டுரைகளை பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். அவை குழந்தைகளின் உளவியல் தொடர்பான கட்டுரைகளாக இருந்தமை விசேட அம்சமாகும். பால்நிலை தொடர்பான பயிற்சியை இந்தியாவிற்குச் சென்று பெற்றுள்ளார். முரண்பாட்டு நிலைமாற்றம் தொடர்பான மன்னார் மாவட்டத்தின் இணைப்பாளராகவும் மன்னார் மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தராக ஆறு வருடம் சேவை செய்துள்ளார். மன்னார் மாவட்ட பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு ஓர் காரணமாக இருந்து வருகிறார். மன்னார் Search for common ground என்ற நிறுவனத்தின் மன்னார், யாழ்ப்பாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும் நிர்மலா, இந்த நீண்ட பயணத்தில் துணையின் எந்த உதவியும் இல்லாமல் தனது வாழ்க்கையின் இலக்கை அடைந்துள்ளதுடன் தனது இரு குழந்தைகளையும் கல்வியிலும் தொழில் ரீதியிலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளமையை பெருமையாகக் கருதுகிறார்.

விருது மன்னார் மாவட்டத்தின் சிறந்த சமூகப்பணியாளருக்கான தேசசக்தி விருது 2015ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு நிர்மலா, யேசுதாசன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.