ஆளுமை:டானியல், கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டானியல்
பிறப்பு 1927.03.25
இறப்பு 1986.03.23
ஊர் ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Daniya k.jpg

டானியல், கே (1927.03.25 - 1986.03.23) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாகும் முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதால் தலித் இலக்கியத்தின் முன்னோடி எனப்பட்டார்.

பஞ்சமரியப் படைப்பிலக்கிய முன்னோடி, மக்கள் தலைவர், மக்கள் விடுதலைப் போராளி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க அமைப்பாளர், மக்கள் கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் என்று குறிப்பிடப்படும் இவர், சிறுவயதில் வறுமையால் பீடிக்கப்பட்டமையால் 5 ஆம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை முடித்துப் பல தொழில்களில் ஈடுபட்டார். இவர் 16 வயதிலிருந்து பொதுக் காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை யாழ்ப்பாணத்தில் 1945 இல் ஆரம்பித்தார். இவர் வீரகேசரி, சுதந்திரன் உள்ளிட்ட பல இலங்கைப் பத்திரிகைகளிலும் ஜனசக்தி, தாமரை போன்ற பல தமிழக இதழ்களிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது 'அமரகாவியம்' சிறுகதை சுதந்திரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.

இவரது 'உப்பிட்டவரை' சிறுகதை சிற்பியின் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியிலும் 'வள்ளி' சிறுகதை இலங்கைக் கலைக்கழக வெளியீடான சுதந்திர இலங்கையில் தமிழ்ச் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் இடம்பெறுகின்றது. இவரது சிறுகதைகள் பல ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய, சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், சமூக அரசியற் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது 'டானியல் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைத் தொடர்ந்து பஞ்சமர் நாவல் (முதல் பாகம்) 1972 இல் வெளிவந்தது. இவரது 'போராளிகள் காத்திருக்கின்றனர்' என்ற நாவல் 1975 இல் வீரகேசரி பதிப்பாகவும் தமிழக வெளியீடாக 1982 இல் பஞ்சமர் நாவலின் 2 பாகங்களும் 'கோவிந்தன்', 'அடிமைகள்' நாவலும் வெளிவந்தது. 'இலங்கையிலிருந்து ஒரு இலக்கியக் குரல்' என்ற தலைப்பில் டானியலின் பேட்டியும் தமிழகத்தில் நூலுருப் பெற்றது. இவர் 'பூமரங்கள் குறுநாவல்' 'உலகங்கள் வெல்லப்படுகின்றன' நாவல் எழுதியுள்ளார்.

இவரது மறைவின் பின்னர் இவரது கானல், தண்ணீர், பஞ்சகோணங்கள் (நாவல்கள்), நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக்கஞ்சி (குறுநாவல்) அடங்கிய தொகுதியும் 'சாநிழல்' குறுநாவலும் வெளிவந்தது. இவர் தன் எழுத்துப்பணி குறித்து எழுதிய கட்டுரை 'என் கதை' என்ற பெயரில் வெளியாகியது. அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகின்றார்கள். பஞ்சமர் நாவலுக்கு 1973 இல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 20-28
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 66
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 118-120
  • நூலக எண்: 10139 பக்கங்கள் 1-16
  • நூலக எண்: 10148 பக்கங்கள் 1-70
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்,_கே.&oldid=493000" இருந்து மீள்விக்கப்பட்டது