ஆளுமை:சித்திரலேகா, மௌனகுரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்திரலேகா, மௌனகுரு
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் மகேஸ்வரி
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
ChiththiraMonakuru.jpg

சித்திரலேகா, மௌனகுரு மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் மகேஸ்வரி. தமது இளமைக் கல்வியை மட்டக்களப்பு அரசடிப் பாடசாலை, வின்சன்ற் கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக கல்வியில் சிறந்து விளங்கிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்தில் உள்ள ஙேக் சமூக கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களையும் பெற்றார். “பெண்களும் அபிவிருத்தியும்” தொடர்பான ஆய்வுக் கட்டுரை சமர்பித்து முதுமாணி பட்டத்தை பெற்றார்.

இளமையிலேயே இலக்கியம், பேச்சு, நாடகத்துறையில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டு வளர்த்தவர்கள் இவரின் தந்தையாரும், ஆசிரியர்களும், பாடசாலை நாட்களில் சாரனியத்திலும் பங்கு பெற்றிருந்தார். இவரின் மேடைப்பேச்சு, இலக்கியத்துறையில் பல்கலைக்கழகக் காலத்தில் மேலும் பிரகாசிக்க வைப்பதில் பெரும் ஊக்கமளித்தவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள்.

எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், கல்வியியலாளர், பெண்கள் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழு உறுப்பினர், நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பெண்கள் அமைப்புகளின் நிறுவுனர், தலைவி, சோசலிசப் பெண்ணிலைவாதி, சமூக சேவகி எனப் பன்முக பணிகளிலீடுபட்டு, அவற்றில் தனது ஆளுமை வீச்சையும், அறிவுப் பரப்பையும் வெளிப்படுத்தியுள்ள சித்ரா, இத்துறைகளில் பலரை ஈடுபடுத்தி வளர்ச்சி பெறச் செய்துள்ளமை, பெண்ணினத்துக்கு பெருமை தரும் செயல்.

எழுத்துத்துறையில், இலக்கியம், விமர்சனம், பெண்ணிலைவாதம், பண்பாட்டு ஆய்வுகள், நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆழ்ந்த கருத்துள்ள பல கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். Pravada, Options, Nivethini சஞ்சிகைகளை இவரின் கட்டுரைகள் அலங்கரித்துள்ளன. சித்ரா, சங்கரி, ரோகிணி, பர்வதகுமாரி, மும்தாஜ், காஞ்சனா, சியாமளா, மல்லிகா, மௌ,உதயலக்ஷ்மி, வஜ்ரா ஆகிய புனைபெயர்களில் சமுதாய அழிவுகளையும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளையும் எதிர்த்து பல கவிதைகளின் ஊடாக தர்மாவேசத்துடன் குரல் எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறியதும் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அக்காலத்தில் பெண்கள், சிறுவர்களுக்கான பல முற்போக்கு கருத்துக்கள் காற்றுடன் கலந்து வந்து நேயர்களின் எண்ணக்கருத்துக்களைத் தூண்டிவிட்டன. இலக்கிய நிகழ்ச்சிகளான ‘படையல்’ ‘கலைக்கோலம்’ காத்திரமாக விளங்கின.

சென்ற இரு தசாப்த காலமாக, பெண்நிலைவாதம், பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாவாலும், பேனாவாலும் இவர் புரிந்து வருகின்ற பணிகளினால் புதிய இளம் பெண் சமுதாயம் துணிவையும் எழுச்சியையும் பெற்றிருப்பது கண்கூடு. இவ்விடயங்கள் பற்றி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிய கட்டுரைகளின் வாயிலாக மிகத் துணிகரமாக விவாதத்துக்குரிய கருத்துக்களை முன்வைத்து வருபவர் சித்ரா. குறிப்பாக தேசியமும் பெண்னிலைவாதமும், இனத்துவமும் பெண்களும் தொடர்பாக வெளியிட்டு வரும் ஆணித்தரமான கருத்துக்கள் பெண்ணினத்தை நிமிர்ந்து நிற்கச் செய்வன. பாடசாலைக் காலத்திலிருந்தே மாக்சிச இடதுசாரிய கருத்துக்களில் தொடர்புற்றிருந்த சித்ரா அக்கருத்துக்களின் பார்வையைக் கொண்ட ஒரு சோசலிச பெண்ணிலைவாதியாக பரிணாமித்துள்ளார். செயற்பாடுகள் மூலம் பரவலான பயனைச் சமுதாயம் பெற வேண்டும் என்பதற்காக பெண்களின் முன்னேற்றத்தை முன்வைத்துப் பெண்கள் இயக்கங்களின் மூலமாக எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேனி, சித்ரா.

1976 லிருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய சித்ரா, அப்பல்கலைக்கழகத்தில் பெண்கள் முற்போக்கு சங்கம், பெண்கள் சங்கம், பெண்கள் ஆய்வு கூடம் என்பவற்றை உருவாக்கினார். யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி, பூரணி பெண்கள் நிலையம் என்பவற்றை ஆரம்பித்த முன்னோடிகளில் சித்ராவும் பிரதானமானவர். தற்பொழுது மட்டக்களப்புக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1993 ல் இருந்து பேராசிரியர் பணியிலிருக்கும் சித்ரா, சூரியா பெண்கள் நிலைய இணைப்புக் குழு உறுப்பினராகவும், கொழும்பில் இயங்கிவரும் Women and media collective அமைப்பின் ஆலோசகர் சபை உறுப்பினராகவும், Sri Lanka women N.G.O forum என்னும் பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்து பெண்கள் மேம்பாட்டு பணிகள் பல முன்னெடுக்க படுவதற்கு காரணமாக விளங்குகின்றார். ரொக்பெல்லர் புலமைப்பரிசில் பெற்று ஒருவருட காலம். அமெரிக்காவிலுள்ள City University of new york hunter college ல் ஆராய்ச்சியாளராக பணியை கொண்டிருந்த காலத்தில் கூட தமிழ்ப் பெண்களின் சிறப்புக்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொண்டு வருவதிலேயே அவரின் சிந்தனை பதிந்து போயிருந்தது. பெண்களால் ஆக்கப்பட்ட தமிழ் நூல்களையும், பிரசுரங்களையும் பெருமுயற்சியின் விளைவாகக் கண்டுபிடித்தார்;. இதன் விளைவாக அவர் வெளியிட்ட நீண்ட ஆய்வுக்கட்டுரையே Tradition of resistance: women's writing in tamil (எதிர்ப்பின் பாரம்பரியத்தில் தமிழில் பெண்கள் இலக்கியம்). காலத்தின் கடமையை நிறைவேற்றிய சாதனை.

அக்காலத்திலே கல்வி அறிவு இல்லாத மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தோட்டம் தோட்டமாக சென்று கூட்டங்கள் போட்டு அவர்களின் உரிமைகளை பற்றி அவர்கள் விளங்கக்கூடிய மொழியில் விளக்கிக் கூறியதுடன் அவர்களைத் தட்டி எழுப்பும் இவர்களின் பணிகளைப் பற்றிய விவரங்களையும் அக்காலத்தில் பெண்கள் கல்வி வாக்குரிமை குறித்து நிகழ்ந்த வாதங்கள் அவற்றுக்குப் பெண்களின் எதிர்வினை குறித்த மேலதிக விபரங்கள் முதலியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பணியில் சித்ராவின் பங்களிப்பு பிரதானமானது.

யாழ்ப்பாணத்திலிருந்து ‘தமிழ் மகள்’ மங்களாம்மாள் பழமை வாதிகளுக்கு எதிராக எழுப்பிய குரல். மலையக மக்களை விழிப்படையச் செய்வதில் தேசபக்தன்’ மீனாட்சியம்மாள் நடேசையா உரிமைக்காக ஓய்வொழிச்சலின்றி ஓங்கியெழும்பிய கீதங்கள், பாடல்கள், கொழும்பில் அடிமைத்தனத்துக்கு எதிராக அயராது பணிபுரிந்த நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயரின் எழுச்சிப் பணிகள், பின்னர் ஏற்பட்ட சமுதாய மாற்றத்துக்கு முன்னோடிகளாய் இருந்தன என்பதை ஆழமாக ஆராயும் பொருட்டு அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறான பெண்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீளக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழிற் பெண்கள் 'இலக்கியம்’ என்ற பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் இங்கு மாத்திரமே இப்பாடநெறி உண்டு. இதற்குக் காரணமாக இருந்தவர் சித்ரா! இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் வாசகர் சங்கம் (1979) (எம்.ஏ.நுஃமான், சி.மௌனகுருவுடன் இணைந்து எழுதியது) பெண்நிலைச் சிந்தனைகள் (1993). பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், கொழும்பு. இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் (1995), சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு, மிரிஹான. பாரதியும் பெண்களும் காலம் கருத்து இலக்கியம் (1996) விபுலம் வெளியீடு,ஆகிய நூல்கள் ஆய்வுத்துறையில் இவரின் அறுவடைகள்.

தமிழில் வெளிவந்த முதல் பெண்கள் கவிதைத் தொகுதியான ‘சொல்லாத செய்திகள்’ (1986), சிவரமணி கவிதைகள் (1993) பெண்களின் காதல் கவிதைகள் உயிர்வெளி (1999) முதலிய நூல்களை பெண்களது கவிதை மரபை நிறுவும் நோக்கில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ‘இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்’ (1986) எனும் மொழி பெயர்ப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ‘சிந்தனை’ கொழும்பு சமூக விஞ்ஞான சங்கத்தின் ‘பிரவாதம்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுபவர். ‘பெண்ணின் குரல்’ மற்றும் சூர்யாவின் ‘பெண்’ சஞ்சிகையின் ஆரம்பகால ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.

குமாரி ஜயவர்த்தனாவின் Ethnic and class conflict in Sri Lanka இலங்கையில் இனவர்க்க முரண்பாடுகள் (1986), டாக்டர் மேரி ரட்ணத்தின் Women’s rights human rights: towards a redefinition of human rights(பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாக மனித உரிமைகள் பற்றிய மீள் பார்வையை நோக்கி ஆகிய கருத்தாழமிக்க நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்.

பேராசிரியை சித்ரா, இலக்கியம், நாட்டாரியல், பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான பல மாநாடுகள் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தமது பங்களிப்புக்களைச் செய்துள்ளார். அவற்றில் சில: 20ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை மதிப்பிட்டு எதிர்காலத் திட்டங்களை அமைப்பதற்காக சென்னையில் கூட்டப்பட்ட 'தமிழ் இனி' சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மையம் நடத்திய மாநாடுகள் பெண்கள் உரிமை, மனித உரிமை தொடர்பான மாநாடுகள் குறிப்பாக நான்காவது உலகப் பெண்கள் மாநாடு (1995) அதன் முன்னேற்றம் குறித்து ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடைபெற்ற மதிப்பீட்டு ஆலோசனை மகாநாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பீஜிங் பெண்கள் மாநாடு தொடர்பான மதிப்பீட்டு மாநாடு பெண்களும் ஆயுதப்பிணக்கும தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் விசேட கூட்டம் பெண்கள், வன்முறை, சமாதானம் குறித்து தென்னாசிய ஆசிய பசுபிக் பிராந்திய மட்டத்தில் நடந்த மகாநாடுகள். பெண்களுக்கு எதிரான சகல பாரபட்சங்களையும் நீக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் தொடர்பான மாநாடுகள். இலங்கையில் சமாதானம், பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பான மாநாடுகள், கருத்தரங்குகள். வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டம் இயற்றுதல் தொடர்பான இலங்கைப் பெண்கள் நிறுவனங்கள் எடுத்த முயற்சிகளில் நடத்திய கருத்தரங்குகள்.

சகல பகுதிகளிலும் காணப்படும் பெண் அடக்குமுறை பற்றிய கூர்மையான விழிப்புணர்வும் விட்டுக் கொடுக்காத போராட்டங்களும் எத்தகைய சமூக, பொருளாதார அமைப்பிலும் தொடர்ந்தாலன்றி பெண்கள் விடுதலையின் முழுப்பரிமானத்தையும் நாம் எட்டி விடுதல் முடியாது என்பது சித்ராவின் ஆணித்தரமான கருத்து.


வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 57-63


வெளி இணைப்புக்கள்

சித்திரலேகா மௌனகுரு பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்