ஆளுமை:சண்முகலிங்கம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கம்
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் சிவகாமி
பிறப்பு 1936.11.22
இறப்பு -
ஊர் தம்பலகாமம், திருக்கோணமலை
வகை கலைஞர், பாடகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம் கணபதிப்பிள்ளை (1936.11.22) கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கும், அவரது மனைவி சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். மூவர் பெண்கள், இருவர் ஆண்கள்.நமது புகழ்பூத்த கலைஞர், பாடகர், கலாபூசணம் கலைமணி, கந்தாவகான இசைமணி திரு. க. சண்முகலிங்கம் அவர்கள். புகழ்பூத்த கலைஞர்களில் ஒருவர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார். இராக, தாள நுட்பங்களை நன்கு அறிந்த இவர் ஒரு தலைசிறந்த ஆர்மோனிய வித்துவானுமாவார். திருகோணமலை மாவட்டத்தில் இரு கரங்களாலும் சரளமாக ஆர்மோனியம் வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு எவருமில்லை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். நாடகங்களை நெறிப்படுத்தி, தம்பலகாமம் கள்ளிமேட்டிலுள்ள ஆலையடிப்பிள்ளையார் கோயில் முற்றலில் அரங்கேற்றி தம்பலகாமம் வாழ் மக்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியவர். இவரது நாடகங்களைக் காண திருமலையிலிருந்தும், மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தம்பலகாமத்திற்கு வந்து சென்றது நாடறிந்த உண்மை. கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தனது மூத்த மகனான சண்முகலிங்கத்தை இளம் வயதிலிருந்தே தாவி நெறிப்படுத்திய நாடக ஒத்திகைகளுக்கு அழைத்துச் சென்று கேட்போரைப் பரவசப்படுத்தும் வகையில் இராக, தாள நுட்பங்களைக் கற்றுத்தந்து பாடுவதற்கான இசை ஆற்றலையும் உருவாக்கினார்.

1946ஆம் ஆண்டு திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆரம்பித்த இவரது கல்வி, 1952இல் முடிவடைந்தது. இக்காலப் பகுதியில் இவரது இசையாற்றலுக்கும் இலக்கிய ஈடுபாட்டிற்கும் சைவப்புலவர் பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற விழாக்களில் கலந்து கொண்டு தேவாரப் பண்ணிசை பாடவும், பேசவும் ஆற்றல் பெற்றார். சிறு வயதிலிருந்தே நல்ல நூல்களைத் தேடிவாசிக்கும் பழக்கத்தை திரு. செந்தில்வேல் அவர்கள் (காந்தி ஐயா) ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நல்ல பழக்கம் வீட்டில் ஒரு நூலகத்தை அமைக்க உதவியது. திருகோணமலை சிவயோக சமாஜம் இவரது இசையாற்றல் வளர்ச்சிக்குப் பல வழிகளிலும் பெரிதும் உதவியது.

இக்காலப்பகுதிகளில் கலாபூசணம், கலாவிநோதன் சித்தி அமரசிங்கம், முத்தமிழரசு சாம்பசிவம், வயலின் வித்துவான் பத்மபூசணம் திரு. சங்கரலிங்கம் ஆகியோர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. இதன் பயனாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ஆற்றலும் திறனும் பெற்றார். இலக்கியத் திறனும் இராகங்களை இனங்காணும் ஆற்றலும் மிக்க இவர் பாடல்களை அமைத்து அவற்றுக்கு மெட்டும் அமைத்தார். இவர் இயற்றி மெட்டமைத்த பாடல்கள் இரசிகப் பெருமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை தவிர பாடசாலைகளின் அழைப்பின் பேரில் மாணவர்களின் தமிழ்த்தினப் போட்டி பாடல்களுக்கும் நாடக அரங்கேற்றங்களுக்கும் இசையமைத்து வழங்கி அனைவரதும் பாராட்டுதலுக்கும் உரியவரானார்.

இவரது இளைய சகோதரர் திரு. க. மகாலிங்கம் குரல்வளமும் சங்கீத ஞானமும் மிக்கவர். தனது தமையனுடன் இணைந்து மேடைகளில் பாடியுள்ளார். இதன் காரணமாக இவர்களைத் "தம்பலகாமத்து இரட்டையர்கள் என இரசிகப் பெருமக்கள் குறிப்பிடுவது வழக்கம்.

இக்காலப்பகுதியில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியையாகக் கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. சீதாலெட்சுமி ஆசிரியை இவரிடம் காணப்பட்ட இசை தொடர்பான அபரிதமான ஆற்றலை இனங்கண்டு வியந்து "உங்களைப் போன்ற கலைஞர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்" என அங்கலாய்த்ததையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். திருகோணமலை சிவயோக சமாசத்தில் திரு. க. சண்முக லிங்கம் அவர்கள் இணைந்திருந்த காலப்பகுதியில் 'ராக மாலிகா' என்ற இசைக்குழு மூலமாக பல கச்சேரிகளை யாழ்ப்பாணம், வவுனியா, சம்பூர் போன்ற பல இடங்களிலும் நடத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த 'இராகமாலிகா' நிகழ்ச்சிக்கு வித்திட்ட வர்களில் முக்கியமானவர் கலைஞர் திரு. ப. ஆனந்தபிரசாத் அவர்களாவார். தற்பொழுது வெளிநாட்டிலுள்ள இவர் வாய்பாட்டிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். கலைஞர் சண்முகலிங்கம் அவர்களும் இவரும் இணைந்தே மேடையில் பாடுவார்கள். மிருதங்கம் வாசிப்பதில் ஆனந்தபிரசாத் அபாரதிறமை பெற்றிருந்தார். எனினும் வாய்பாட்டையே பெரிதும் விரும்பினார். இவருடைய முயற்சியினால் இவர்களுடன் இணைந்து கலைஞர் திரு. சிவராசா மிருதங்கம் தபேலா வாசிக்க, கலைஞர் திரு. யேசுதாசன் புல்லாங்குழல் இசைக்க, அமரர் கலாபூசணம் திரு. வே. சங்கரலிங்கம் அவர்கள் வயலின் வாசிப்பார். இவ்வாறு ஆரம்பித்ததே 'இராகமாலிகா' நிகழ்ச்சியாகும்.

கலைஞர் சண்முகலிங்கம் வாய்பாட்டில் சிறந்து விளங்க அவரது தந்தையாகிய கணபதிப்பிள்ளை அண்ணாவியார் எடுத்த முயற்சிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் ஒரு 'கிராமப்போன்' இருந்தது. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத வித்துவான்களின் பாடல்களை இக்கிராமப்போனில் இசைக்கச் செய்து இராகங்களை இசைப்பதிலுள்ள நுட்பங்களை மிக நுணுக்கமாக எடுத்துச்சொல்லி கலைஞர் சண்முகலிங்கத்தை ஒரு சிறந்த பாடகராக ஆக்குவதில் அவர் அரும்பாடுபட்டார். எம். எஸ். சுப்புலட்சுமி, எம். எம். தண்டபாணிதேசிகர், யு. ஆர். ஜீவரத்தினம், ரி. ஆர். மகாலிங்கம் போன்றோர்களின் பாடல்களை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பாகச் சொல்லப்போனால் அக்காலக் கலைஞர்கள் தங்கள் தொழில்நேரம் போக மிகுதிநேரமெல்லாம் கலை வளர்ச்சிக்காகவே தங்கள் காலம் முழுவதையும் தியாகம் செய்தனர் எனக் கூறின் அது மிகையாகாது. இத்தகைய சிறப்புமிக்க கலைஞரை 1973ஆம் ஆண்டு தம்பலகாமம் வடக்கு இந்து வாலிபர் சங்கம் தமது முதலாவது ஆண்டு நிறைவு விழாவின்போது பண்ணிசைகளில். 'இசைமணி' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது. திருக்கோணமலை சிவயோக சமாசத்தில் பஜனை பலகாலங்கள் ஈடுபட்டமைக்காக 'பண்ணிசை மணி' என்ற பட்டம் 1980களில் வழங்கப்பட்டது. திருகோணமலை முத்தமிழ் வளர்களை மன்றம் 2004இல் இவருக்கு 'கந்தர்வகான இசைமணி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 10.06.2005 இல் தம்பலகாமம் பிரதேச செயலகம் நடாத்திய தேசிய கலை இலக்கியப் பெருவிழாவின் போது இவரும் பாராட்டப்பட்ட கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தம்பலகாமம் ஆதிகோண நாயகர் கோவில் அறங்காவல் சபை, தம்பலகாமம் சாயி சேவா சங்கம் என்பன இவரது செயலாற்றலை பெரிதும் பாராட்டி கௌரவித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக 2007ஆம் ஆண்டு அரசு கலாபூசணம் விருதை வழங்கி இவரது கலைச் சேவைக்கு மகுடம் சூட்டியது.

மேலும், இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவரது மகன் முருகதாஸ் ஆசிரியர் 'சண் இசைக் குழு' ஒன்றை நிறுவி இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் வகையில் இளஞ் சிறார்களை பங்குகொள்ளச் செய்து பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து நடாத்தி வருகின்றார்.