ஆளுமை:கோபாலசிங்கம், சீனித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலசிங்கம்
தந்தை சீனித்தம்பி
தாய் கெங்கம்மா
பிறப்பு 1947
ஊர் வெல்லாவெளி, மட்டக்களப்பு
வகை கவிஞர், ஆய்வாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலசிங்கம், சீனித்தம்பி (1947) மட்டக்களப்புத் வெல்லாவெளியில் பிறந்த பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சீனித்தம்பி; தாய் கெங்கம்மா. நாடறிந்த படைப்பிலக்கியவாதிகளில் சிறந்த கவிஞராகவும் ஆய்வாளராகவும் பன்னூல் ஆசிரியராகவும் பேச்சாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்கள். கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கும் முற்பட்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்புத் தேசத்தின் பழந்தமிழ்க் கிராமமான வெல்லாவெளியில் 1947ல் பிறந்த இவர் சீனித்தம்பி – கெங்கம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்ராவார். கோவில்போரதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட யோகேஸ்வரி அவர்களை திருமணம் செய்த இவருக்கு இரு புதல்வர்களும் இரு புதல்வியருமுளர். கல்வித் துறையில் சிறந்து விளங்கும் இவரது பிள்ளைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி தாக்ஷாயினி பரமதேவனும் பிரான்ஸில் நோக்கியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளராகவும் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றும் பொறியில் கலாநிதி அரவிந்தனும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கோபாலசிங்கம் தனது ஆரம்பக் கல்வியை வெல்லாவெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மேற்கொண்டார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றதைத் தொடர்ந்து வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரியில் இணைந்துகொண்டார். தொடர்ந்து மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் உயர்தர வகுப்பைத் தொடர்ந்தார். உயர்தர வகுப்பில் சித்திபெற்றும் பல்கலைக்கழக அனுமதி கிட்டாத நிலையில் தனது 19வது வயதில் மலையக கல்விச் சபையின் ஆசிரிய போட்டிப் பரீட்சையில் தெரிவாகி கலகாவில் சில மாதங்கள் பணியாற்றியபின்னர் உள்ளுராட்சி செயலாளர் சேவையில் சித்திபெற்று அதில் இணைந்துகொண்டார். 1971 – 1972 காலப் பகுதியில் கொழும்பு கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் வெளிவாரி மாணவனாக இணைந்து கணக்கீட்டுப் பயிற்சிநெறிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். உள்ளுராட்சித் துறையில் பணியாற்றிய காலத்தில் 1973 – 1974 காலப் பகுதியில் கொழும்பு உள்ளுராட்சிப் பயிற்சி நிலையத்தில் உள்ளுராட்சிக் கணக்கீட்டுப் பயிற்சியினையும் 1981ல் மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டபோது அதுதொடர்பான நிருவாகப் பயிற்சியினையும் பெற்றுக்கொண்டார்.

1970ல் தனது 23வது வயதில் மட்டக்களப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இவர் தனது பணியைத் தொடங்கியதைத் தொடர்ந்து 1971ல் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர பௌர்ணமிக் கலைநிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும் மாநகர வானொலிச் செய்தியாளராகவும் 1973வரை பணிபுரியலானார். இக்காலப் பகுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடாத்தியதன்மூலம் பல கலைஞர்களின் உருவாக்கத்திற்கு களமமைத்துக்கொடுத்தார். 1979ல் சர்வதேச சிறுவர்கள் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டபோது அதன் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக உள்ளுராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்டு அதனைத் திறம்பட நடாத்திய தன்மையில் அமைச்சினால் பாராட்டப்பட்டார். உள்ளுராட்சித் துறையில் 1990வரை பணியாற்றிய காலத்தில் காத்தான்குடி பட்டின சபையின் குறித்துரைக்கப்பட்ட உத்தியோகத்தராகவும் (Specified Officer) நவகிரிநகர் உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலராகவும் (Authorised Officer) போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் 1991 முதல் 1998வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைநெறி விஞ்ஞானப் பிரிவின் இணைப்பு அலுவலராகவும் பல்கலைக்கழக அறிக்கைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளராவும் பணியாற்றினார். 1998 தொடக்கம் 2005வரை குடும்பத்துடன் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த இவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து மனுவேதா வெளியீட்டகத்தின்மூலம் நூல்களை வெளியிட்டுவருகின்றார். கலை இலக்கியப் பண்பாட்டு அம்சங்களில் தன்னை இறுக்கமாக்கிக் கொண்ட கிராமம் வெல்லாவெளி. அங்கு தொடக்கக் கல்வியை மேற்கொண்டபோதே அக்கிராமத்தில் பாடப்படுகின்ற கூத்து, கும்மி, வசந்தன், சிந்து, தாலாட்டு, அகவல் எனப் பலதரப்பட்ட பாடல்களையும் தனது தாயாரூடாகக் கேட்டும் படித்தும் பாடி மகிழ்ந்தவர். இவற்றின் ஆழ்மனப் பதிவுகளின் வெளிப்பாடே இவரது கலை இலக்கியப் பணிகளுக்கு உந்துசக்தியாக அமைந்தது. வெளியுலகால் அறியப்பட்ட இவரது எழுத்துலகப் பிரவேசம் இவரது பதினான்காவது வயதில் ‘எனது கிராமம்’ எனும் தலைப்பில் வீரகேசரி மாணவ மஞ்சரிக்கு எழுதியதிலிருந்து ஆரம்பிக்கின்றது. 1960 காலப் பகுதியில் அவரது மாணவப் பருவத்தே கோபால் வீரகேசரி, தினகரன்,சுதந்திரன், தமிழ்முரசு, புதினம்போன்ற பத்திரிகைகளில் கவிதைகளை தொடராக எழுதத் தொடங்கினார். 1964ல் கொழும்பு விவேகானந்த சபை நடாத்திய மாணவருக்கான அகில இலங்கைப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற இவர் அதே ஆண்டில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் விழாவையொட்டி மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். முத்தமிழ் விழாவின் இறுதிநாள் விழாவில் மட்டக்களப்பின் தலைசிறந்த அறிஞர்களான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா, பண்டிதர் வி.சி.கந்தையா மற்றும் வித்துவான் சா.இ.கமலநாதன் போன்றவர்கள் பங்குகொண்ட உரையரங்கில் மாணவனான இவருக்கும் உரைநிகழ்த்தும் வாய்ப்பினை முத்தமிழ் மன்றம் வழங்கியது. அவ்விழாவில் பதக்கம் சூட்டிக் கௌரவிக்கப்பட்டார். அத்தோடு அதே ஆண்டில் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய பேச்சுப் போட்டியிலும் இவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அவ்வாண்டிலேயே இவரது கவிதைத் தொகுப்பான ‘கன்னிமலர்’ இவரது தமிழாசான் எஸ்.பொ (எஸ்.பொன்னுத்துரை) அவர்களின் ஆலோசனைப் பிரகாரம் மட்டக்களப்பின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரியில் வெளியிடப்பட்டதோடு அதன் அறிமுகவிழா உயர்தர வகுப்பு படித்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் இடம்பெற்றது. 1965ல் இலங்கை சாகித்திய மண்டலம் இந்நூலுக்கு சிறப்பு விருதளித்துக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதுடன் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தியுள்ளார். சிறப்புச்சொற்பொழிவுகள், மேடைக்கவிரங்குகள், மேடை நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றில் பங்குபற்றியுள்ளார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்ட கழகங்களிலும் இவர் அங்கம் வகிக்கின்றார்.

எழுதி வெளியிட்ட நூல்கள்: 01. கன்னிமலர் (கவிதைகள்) 1964 – சாகித்திய மண்டல சிறப்பு விருது 1965 02. முல்லை (குறுங்காவியம்) 1968 03. ஒரு கண்ணீர்க் காவியம் 1972 04. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் 1992 – கலாசார அமைச்சின் அருள்நெறி விருது 05. முற்றுப்பெறாத காவியம் 1995 – கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருது – மாகாண இலக்கிய விருது 06. இதய சங்கமம் (கவிதைகள்) – 1998 இந்தியா 07. நெஞ்சக் கனல் (காவியம்) – 2002 இந்தியா 08. தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் (ஆய்வு) – 2003 09. சுனாமி ஒரு மீள்பார்வை (அறிவியல்) – 2005 10. மட்டக்ளப்பு வரலாறு ஒரு அறிமுகம் (ஆய்வு) – 2005 ஆய்வு இலக்கியத்திற்கான சாகித்திய விருது – மாகாண இலக்கிய விருது 11. மலையாள நாடும் மட்டக்களப்பும் (ஆய்வு) – 2007 12. வெல்லவூர்க் கோபால் கவிதைகள் – 2009 13. முழுமைபற்றிய சிந்தனைகள் (தத்துவம்) -2009 14. கண்ணீரால் எழுதுகின்றேன் (இரங்கல்) – 2010 15. கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள் – 2011 16. வெல்லாவெளி வரலாறும் பண்பாடும் – 2012 17. கல்விச் செல்வம் – பேராசிரியர் மா.செல்வராசா மணிவிழா மலர் 18. வாழும் மனிதம் – அமரர் நல்லையா நினைவு மலர் 19. மட்டக்களப்புத் தேசம் – வரலாறும் வழக்காறும் – 2016 தேசிய விருது – மாகாண இலக்கிய விருது 20. பிரபஞ்சமும் வாழ்வியலும் – 2017 21. கண்ணகி வழிபாடு – பார்வையும் பதிவும் – 2018 மாகாண இலக்கிய விருது 22. வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் தல வரலாறும் – 2019 23. சங்கம் – மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க வெளியீடு – 2002


விருதுகளும் பாராட்டுகளும்: 01. இலங்கை அரசின் கலாபூஷணம் 2010 02. கிழக்கு மாகாண முதல்வர் விருது 2010 03. இலங்கை அரசின் தேசியக் கலைஞர் 2013 04. கவிக்கோ விருது – கொங்குநாடு கலாசார ஒன்றியம் தமிழ்நாடு 2000 05. சிறந்த கலைஞர் கௌரவம் – திருச்சி நுண்கலைக் கல்லூரி தமிழ்நாடு 2002 06. அருள்நெறி விருது – இந்து கலாசார அமைச்சு 1995 07. சாகித்தியமண்டல சிறப்பு விருது (மாணவர்பிரிவு) 1965 08. சிறந்த ஆய்வாளர் விருது – மட்டக்களப்பு கலாசார பேரவை 2006 09. மட்டக்களப்பு மாநகர பௌர்ணமிக் கலைநிகழ்ச்சி அமைப்பாளர் சேவையின் பாராட்டு விழா (மட்டக்களப்பு இலக்கிய அமைப்புகள்) 1973 10. கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருது – 1996 11. ஆய்வு இலக்கியத்திற்கான சாகித்திய விருதும் மாகாண விருதும் – 2006 12. தேனகக் கலைச்சுடர் விருது – மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை – 2010 13. சிறந்த ஆய்வு நூலுக்கான விருது – கிழக்கு மாகாண அரசு 2017 14. சிறந்த ஆய்வுசார் படைப்புமு இலங்கை அரசின் தேசியச் சான்றிதழ் 2017 15. கிழக்கிலங்கையின் சிறந்த வரலாற்று ஆசிரியருக்கான பாராட்டுவிழா –கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை 2017 16. கலை இலக்கியத் துறையில் அளப்பெரிய சாதனை புரிந்தமைக்கான கௌரவம் – சாதனையாளர் பாராட்டுவிழா 2017 – வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு 23.10.2018 17. கலைமாமணி விருது – வெல்லாவெளி ஆலய பரிபாலன சபையும் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் 29.05.2019 18. ஆய்வு இலக்கியத்திற்கான மாகாண விருது – 2019 19. ‘புதிய மழை’ – பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கான எழுத்தாளர் கௌரவம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் 2018 20. வாழ்நாள் சாதனையாளர் கௌரவம் – போரதீவுப்பற்று பிரதேச இலக்கியவிழா 27.12.2019

குறிப்பு : மேற்படி பதிவு கோபாலசிங்கம், சீனித்தம்பி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 435-436


வெளி இணைப்புக்கள்