ஆளுமை:இராஜேஸ்வரி, சின்னக்குட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி
தந்தை சின்னக்குட்டி
தாய் இலட்சுமி
பிறப்பு 1960.04.22
ஊர் கண்டாவளை
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி இராஜேஸ்வரி பண்டிசுட்டான் , கண்டாவளையில் பிறந்தார். (1960.04.22) இவருடைய பெற்றோர் பலாலியிலிருந்து விவசாயம் செய்வதற்காக 1954 ஆம் ஆண்டு முரசுமோட்டை புதிய குடியேற்றத்திட்டத்தில் குடியேறினர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளி/முரசுமோட்டை முருகானந்தா இந்து வித்தியாசாலையில் கற்றதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கினார். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதனால் இவர்களுடைய அதிபரான திரு.எஸ். வேலாயுதம் அவர்கள் மகிழ்வுற்று யா/இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் இணைத்திருந்தார். அதனடிப்படையில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் விரல் விட்டு எண்ணத்தக்கவர்களில் ஒருவராக 1982 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்னர் சிறிது காலம் தன்னை வளர்த்தெடுத்த பாடசாலையான கிளி/முரசுமோட்டை முருகானந்த மகா வித்தியாலயத்தில் தொண்டராசிரியராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் அரசியலி சிறப்புக்கலை மாணவியாகக் கற்றுக் கொண்டிருக்கும் போதே 1984.01.01 ஆம் ஆண்டில் கம்பஹா/ உடுகொட அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டார். பட்டப்படிப்பையும் தொடர்ந்து கொண்டே ஆசிரியப்பணியையும் சிறப்பாகச் செய்தார். அங்கு கற்பித்த காலத்திலேயே சமூகக்கல்விப் பாடத்தில் க.பொ.த.சாதாரண தரத்தில் 32 மாணவர்கள் அதிவிஷேட சித்தியினைப் பெற்றனர். அதனால் அப்பாடசாலைக்கு உயர்தரத்தில் கலைப்பிரிவிற்கு அனுமதி கிடைத்தது. இந்தப் பேருமை இவரையே சார்ந்தது என்பதால் மிகுந்த பாராட்டைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த இவர் க.பொ.த. உயர்தரத்தில் அரசியலைக் கற்பித்து மபணவர்களைச் சிறப்பாகச் சித்தியடையச் செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டில் கண்டாவளையைச் சேர்ந்த சண்முகம் பாலேந்திரா அவர்களைத் திருமணம் செய்தார். 1990 ஆம் ஆண்டில் இடமாற்றம் பெற்று கிளி/கண்டாவளை அ.த.க.பாடசாலையில் சமூகக்கல்வி ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடைய மாணவர்கள் சமூகக்கல்விப் பாடத்தில் 100% பெறுபேற்றினைப் பெற்றனர். இப்பெறுபேற்றின் காரணமாக கண்டாவளைப் பாடசாலை கிளி/கண்டாவளை வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் க.பொ.த. உயர்தரத்தில் அரச அறிவியல் ,இந்து நாகரீகம் ஆகிய இரு பாடங்களையும் கற்பித்து 100% பெறுபேற்றுடன் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டினார். இவ்வாறு 17 வருடங்கள் கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக கற்பித்தலை நிகழ்த்தியதுடன் தனது குடும்பத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்து பொறுப்பாக வளர்த்து வந்தார். மற்றவர்களுக்கு இவருடைய வாழ்க்கை ”துலாக்கோல் ” போல் இல்லக்கடமைகளையும் பாடசாலைக் கடமைகளையும் செவ்வனே ஆற்றினார். இதன் பின்னர் 2009.01.01 ஆம் திகதியில் கிளி/முருகானந்தா மகா வித்தியாலயத்தில் சமூகக்கல்வி ஆசிரியராகக் கடமையேற்றுக் கொண்டார். நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் தனது கல்விப் பணியினைத் தளராது ஆற்றி வந்துள்ளார். பின் இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்திலும் இவர் பணி தொடர்ந்தது. மீள்குடியேற்றம் வந்த பின்னர் அதிபர் தரம் ( ii ) இரண்டில் சித்தியடைந்து இப்பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்தார். இதன் பின்னர் பாடசாலை மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் ஆரம்பப் பாடசாலை வேறாகவும், இடைநிலைப் பாடசாலை வேறாகவும் ஆக்கப்பட்ட போது 2011.01.01 ஆம் திகதிகளில் கிளி/ முருகானந்தா பாடசாலையில் அதிபராகக் கடமையேற்றார். இந்த வகையில் இவருடைய சேவைக்காலத்தில் உன்னத செயற்பாடுகள் காரணமாக கிளி/ முருகானந்தா ஆரம்பப் பாடசாலை சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. அதாவது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ச்சியாக சித்தி வீதமானது அதிகரித்து வந்ததுடன் (2011-2019 வரை) இணைப்பாடவிதான செயற்பாடுகளான சிறுவர் நாடகம் தமிழ்த்தினப் போட்டி,ஆங்கில தினப்போட்டி , சித்திரப் போட்டி, செயற்பட்டு மகிழ்வோம் போட்டி போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளில் கோட்ட ,வலய, மாகாண,தேசிய மட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க விடயங்களாகும். பாடசாலை இவ்வாறு பற்பல சாதனைகளை நிலைநாட்டி வளர்ச்சிப் பாதைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளை பாடசாலையின் பௌதீக வளச்செயற்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்வியின் தூண்களாக விளங்கும் கல்விமான்களின் உதவிகளைப் பெற்று திறன் வகுப்பறை, சிறுவர் பூங்கா , சுற்றுமதில் , புதிய கட்டடங்கள் போன்றவற்றினை மிளிரச் செய்தமை சிறப்பாகும். பாடசாலை இவ்வாறு சாதனை படைத்த வேளையிலும் தனது மூத்த மகனை மென்பொறியியலாளராகவும், இரண்டாவது மகனை ஆடைவடிவமைப்புத்துறைப் பொறியியலாளராகவும் உருவாக்கியதுடன் தனது ஒரே மகளை பேராதனைப்பல்கலைக்கழக இயன்மருத்துவ மாணவியாகவும் உருவாக்கியுள்ளார். இவ்வேளை 2019.1121 ஆம் திகதியில் அதிபர் தரம் (i) ஒன்றிற்குப் பதவியுயர்வு பெற்ற இவர் தன்னுடைய 38 வருட சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்து கொண்டு 2020.04.22 ஆம் திகதியில் தகது 60 ஆவது வயதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,பழைய மாணவர்கள் , நலன்விரும்பிகள், கல்வித்துறை சார்ந்த கல்வி மான்கள் ஆகிவர்களின் வாழ்த்துக்களுடனும், இறைஆசியுடனும் தனது மணிவிழாக்காலத்தில் தடம் பதிக்கின்றார்.