நிறுவனம்:நிலாவெளி கிராமம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிலாவெளி கிராமம்
வகை கிராமம்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் நிலாவெளி
முகவரி நிலாவெளி, திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம்


நிலாவெளிக் கிராமம் ஆனது திருக்கோணமலையின் வடக்கு திசையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமம் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோனேச்சர ஆலயம் குளக்கோட்டு மன்னனால் அமைக்கப்பட்ட காலத்தில் இருந்ததாக திருக்கோனேசல புராணம், கோனேசர் கல்வெட்டு என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தின் தொன்மையை பறைசாற்றும் வண்ணம் நாதனார் கோயில் கல்வெட்டு, நிலாவெளி பிள்ளையார் கோயில் கல்வெட்டு என்பன காணப்படுகின்றது. நாதனார் கோயில் கல்வெட்டில் இராஜராஜ சோழன் காலத்தில் நிலாவெளி கிராமத்தில் இருந்து பல பசு மாடுகள் தானமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே நிலாவெளி பிள்ளையார் கோயில் கல்வெட்டில் கோனேஸ்வரம் பற்றியும், திருக்கோனேஸ்வரத்துக்கு அளிக்கப்பட்ட நில தானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நிலாவெளியில் கண்டெடுக்கப்பட்ட நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பெண் தெய்வ விக்கிரகம் இந்து வெளி நாகரீக காலத்தை ஒத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விக்கிரகம் தற்போது இந்தியாவின் புது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட தொன்மையான வரலாற்றைக் கொண்ட விவசாய கிராமமாக இந்தக் கிராமம் இருந்த போதிலும் தற்காலத்தில் மீன்பிடி, சுற்றுலாத்துறை என்பவற்றிற்கு பெயர்போன ஒரு கிராமமாக காணப்படுகிறது. இன்றைய அரச கட்டமைப்புகளுக்கு அப்பால், நிலாவெளி எனும் பகுதி திருக்கோணமலையிலிருந்து ஆறாவது மைல் கல்லில் காணப்படும் "மண்கிண்டி மலை" தொடக்கம் வடக்கே இறக்கக்கண்டி ஆற்றை எல்லையாக கொண்ட 7 கிலோமீட்டர் கடற்கரையோர பகுதியாக இருந்துள்ளது. இந்தப் பகுதியில் தெய்வநாயக குளம், கங்காணி குளம், பொக்க்கங் குளம், கொடிகாமக் குளம், பெரியகுளம் போன்ற குளங்கள் அமைந்துள்ளது.

நிலாவெளி கிராமத்தின் பழங்கால சின்னங்களில் ஒன்றாக காணப்படுவது, ஒல்லாந்தர் காலத்து மெத்தை வீடு ஆகும். ஒல்லாந்தர் வரியாகப் பெற்றுக் கொண்ட பொருட்களை சேமிக்க கட்டப்பட்ட இடமே இதுவாகும். இந்தப் பகுதியில் கத்தரி, மிளகாய், வெங்காயம், வெண்டி போன்ற மரக்கறி பயிர்களும், தென்னந் தோட்டம் போன்றனவும் காணப்படுகின்றது.