நிறுவனம்:திரு/ பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருக்கோணமலை நகரம்
முகவரி பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், இல 52, பிரதான வீதி, திருக்கோணமலை
தொலைபேசி 0262221000
மின்னஞ்சல்
வலைத்தளம்


திருக்கோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் 1823 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மெதடிஸ்த மிஷன் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆகும். இது திருக்கோணமலை வரலாற்றைப் பொறுத்தவரை நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுவதுடன், இப்பாடசாலை ஆரம்பிக்கப்படும் பொழுது "பெருந்தெரு மெதடிஸ்த மிஷன் பாடசாலை" எனும் பெயரில் அறியப்பட்டது. ஐரோப்பிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் இந்த பாடசாலை இயங்கி வந்த போதிலும் 1885 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த "மயில்வாகனம் முருகுப்பிள்ளை" எனும் உபாத்தியார் பாடசாலையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவரின் காலத்தில் குறித்த பாடசாலை பாரிய வளர்ச்சிகளை கண்டதுடன், இவரைத் தொடர்ந்து பண்டித சபாபதி மற்றும் இரத்னசிங்கம், சிபாரத்தினம் ஆகியோர் பாடசாலை அதிபராக கடமை ஆற்றினர்.

1952 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர வகுப்புகள் குறித்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தப் பாடசாலையில் திருகோணமலையின் பல இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி கற்று வந்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு அளவில் அரசாங்கம் சகல தனியார் பாடசாலைகளின் பொறுப்பேற்ற பொழுது குறித்த பாடசாலையும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. பின்னைய காலத்தில் இந்த பாடசாலை திருக்கோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டதுடன், பின்னர் 1979 ஆம் ஆண்டளவில் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பாடசாலையின் புதிய லட்சணையில் கோபுரத்தை உள்ளமைவாக கொண்ட யானையின் தலையும், ஏடுகளையும், தும்பிக்கையில் தீச்சுடரையும் கொண்ட சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் காணப்படும் யானையின் தலையில் அமைந்துள்ள கோயில் கோபுரம், திருக்கோனேச்சரத்தை யும், யானை விநாயகரையும் குறித்து நிற்கின்றது. இந்த பாடசாலையின் மகுட வாசகமாக, "அன்பும் அறனும் பண்பும் பெருக" உள்ளது.

குறித்த பாடசாலையில் 1996 ஆம் ஆண்டளவில் 18 ஆவது திருமலை சாரண அணியாக சாரண இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இன்றைய காலகட்டத்தில் குறித்த பாடசாலையில் உயர்தரம் வரை கற்கக் கூடிய வசதிகள் காணப்படுவதுடன், பாடசாலை அதிபராக திருமதி. வக்ஷாலா கிருபாகரன் அவர்கள் பணியாற்றி வருகின்றார். இவ்வாண்டு குறித்த பாடசாலையின் 200-வது ஆண்டாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பழைய மாணவர் சங்கத்திலிருந்து மதிப்பார்ந்த பொதுச் செயலாளரும், ஒரு உறுப்பினரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்குள் பதவி அடிப்படையில் உள்வாங்கப்படுவதுடன், பழைய மாணவர் சங்கத்திற்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைப்பாளர்களாக காணப்படுவார்கள்.

பழைய மாணவர் சங்கத்திற்கென்று விசேடமான வங்கி கணக்கு ஒன்று காணப்படுவதுடன், நிதி கையாளுகை தொடர்பு பாடசாலை அதிபர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புடையவர்களாக காணப்படுவார்கள். பழைய மாணவர் சங்கத்திற்கான நிதிப் புலன்களாக பழைய மாணவர்கள் ஊடாக வழங்கப்பட நேரடியான நிதிகளும், நன்கொடைகளும், மேலும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளின் ஊடாக சேர்க்கப்படும் நிதியும் காணப்படுகின்றது.