ஆளுமை:முருகதாஸ், விபுலானந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வி. முருகதாஸ்
தந்தை விபுலானந்தன்
தாய் சுசுந்திமாலா
பிறப்பு 1977.03.16
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை யோக ஆச்சாரியா, சித்தாயுர்வேத பண்டிதர், சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யோக ஆச்சாரியா, சித்தாயுர்வேத பண்டித், பிரம்மஸ்ரீ வி. முருகதாஸ் சித்தர் பரம்பரையின் நான்காவது வாரிசே முருக சித்தர் என்றழைக்கப்படுகின்ற யோக ஆச்சாரியா பிரம்மஸ்ரீ வி. முருகதாஸ் அவர்களாவார்.

திருக்கோணமலையில் விபுலானந்தன், சுசுந்திமாலா தம்பதியினருக்கு 1977.03.16 ஆந் திகதி மகனாகப் பிறந்தார். கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது கல்வியை இடையிலேயே நிறுத்தி விட்டு, வெதுப்பகம் ஒன்றிலே வேலை செய்து வந்தார்.

ஆனாலும் விளையாட்டுத்துறை, தற்காப்புக் கலையான கராத்தே, யோகக் கலை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். கராத்தேயில் கறுப்புப் பட்டியாளராக சிறப்புப் பெற்றதோடு திருக்கோணமலையில் பல கராத்தே மாணவர்களையும் உருவாக்கியுள்ளார். மரதன் ஓட்டம், வேகநடை போட்டிகளில் மாவட்ட தேசிய ரீதியில் பங்குபற்றி பல பதக்கங்களையும் தனதாக்கியுள்ளார். இவரை 2001.06.24 ஆந் திகதி வெளிவந்த தினக்குரல், திவயின பத்திரிகைகள் பாராட்டி "பதக்கங்கள் வென்ற திருமலை வீரர் முருகதாஸ்" எனப் புகழாரம் சூட்டியுள்ளன.

திருக்கோணமலை இந்து கலாசார மண்டபத்தில் சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி என்பவர் பலகாலமாக யோகாசனப் பயிற்சியை நடாத்தி வந்தார். சுவாமியுடனான சந்திப்பு 1992 ஆம் ஆண்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து முருகதாஸ் அவர்களின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. ஆத்மீகத்தில் நாட்டமும் தேடலும் அதிகரித்தது. சுவாமியைக் குருவாகக் கொண்டு யோகக் கலையைக் கற்று அவரின் சிரேஸ்ட சீடராக உயர்வு பெற்றார். பின்னரான காலங்களில் தான் பயின்ற கலையை சில காலங்கள் மக்களுக்கு பயிற்றுவித்து வந்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று யோகக் கலை தொடர்பான அறிவு, தேடல், ஆத்மீகத் தெளிவு போன்றவற்றைப் பெற்றார். இந்நிலையில் யோகக்கலை தொடர்பான மேற்படிப்பை இந்தியாவில் மேற்கொண்டு அதில் முதுமானிப் பட்டமும் பெற்றார். சித்தர்களின் அருள் மூலமாக சித்த வர்மக்கலையும் கைகூடியது. இந்தியாவின் மதுரையில் சித்த மருத்துவத் துறையில் 2008 ஆம் ஆண்டு "வர்மக்கலை மருத்துவர்" பட்டமும் பெற்றுக் கொண்டார்.

இலங்கை முதல் இமயம் வரையும், இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கும் சென்று அங்கு யோகக் கலையை பயின்றும், பயிற்றுவித்தும் வருகின்ற முருகசித்தர் அவர்கள் 8 மொழிகளில் உரையாடும் திறமை கொண்டவராகவும் விளங்குகின்றார். தனது பிறந்த மண்ணான திருக்கோணமலையிலும் மக்களின் உய்வுக்காக கன்னியா மாங்காயூற்று கிராமத்தில் யோகசித்தி ஆச்சிரமம் ஒன்றையும் அமைத்துள்ளார்.

கடம்பை ஸ்ரீ பரமஹம்ச சச்சிதானந்த யோகேஸ்வரர் மகாசுவாமிகள், ஸ்ரீ பசுபதிலிங்க சுவாமிகள், ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி என்று செல்லும் சித்தர் பரம்பரையைச் சேர்ந்த யோக ஆச்சாரியா, சித்தாயுர்வேத பண்டித், அகத்திய மைந்தன், பிரம்மஸ்ரீ வி. முருகதாஸ் அவர்கள் "இல்லறத்தில் இருந்தவாறே தவம் இயற்றி பயனடையலாம்" இதன் பொருட்டு அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதே யோகசித்தி ஆச்சிரமம் ஆகும். அப்பா அகத்தியர் பெருமானுடன் பதினெட்டு சித்தர்களின் அருளாசியுடன் இங்கு யோகக் கலை, வர்மக்கலை, வர்ம சிகிச்சை என்பவற்றோடு மண்ணின் தமிழ் பாரம்பரிய கலைகளையும் பயிற்றுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அகத்திய மலையின் நிலப்பரப்புக்கு நேர்கோட்டில் அமைந்துள்ள இவ் யோகசித்தி ஆச்சிரமத்தில் பதினெண் சித்தர்களினால் குறிப்புணர்த்தப்பட்டு தானாக பூமிக்கு அடியில் இருந்து வரும் ஆற்றுக்கு நடுவே உலகிலேயே இதுவரை எங்கும் அமையப் பெறாத பன்னிரண்டு அடி உயர ஒரே கல்லிலான லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமையப் பெற்ற சகஸ்ரலிங்கமான பாவநாசநாதர் பெருமான் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

யோகசித்தி ஆச்சிரமத்தின் அகலாங்கு 8.594715 நெட்டாங்கு 81.175683 அகத்திய மலையின் 8.594715 நெட்டாங்கு அகலாங்கு 77.2471, பாவநாசநாதர் ஆலயம் 8.4248 நெட்டாங்கு -77.2421 அகலாங்கு. அகத்தியர் பெருமான் தனது தேவியான ஸ்ரீ லோபமுத்ரா சமேதரராக இங்கு எழுந்தருளியுள்ளார். பாவதாசதாதரைச் சூழ நீர்த்தடாகமும் அதனைச் சுற்றிவர பதினெட்டு சித்தர்களின் தனி ஆலயமும், பெரிய நந்தியும் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ்வாறே உலகத்தின் உச்சியிலும் அதாவது ரஷ்ய நாட்டிலும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து யோகசித்தி ஆச்சிரமம் ஒன்றையும் அமைத்துள்ளார். அங்குள்ளவர்களுக்கும் யோகம், வர்மம், சிவலிங்கபூசை என்பவற்றை தனது குருமார்களின் அருளாசியுடன் வழங்கிவரும் இவர் யோகக் கலை பற்றிய நூல் ஒன்றையும் ரஷ்ய மொழியில் வெளியிட்டுள்ளார்.

இன்று வரையும் தனது ஆத்மீகப் பணியை இலங்கை, ரஷ்யா, இந்தியாவில் மேற்கொண்டு வருகின்ற முருகசித்தர் அவர்கள் யோக ஆச்சாரியா, பிரம்மஸ்ரீ போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.