ஆளுமை:தனிநாயகம் அடிகளார், நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனிநாயகம் அடிகளார்
தந்தை நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு
தாய் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை
பிறப்பு 1913.08.02
இறப்பு 1980.09.01
ஊர் ஊர்காவற்துறை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனிநாயகம் அடிகளார், நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு (1913.08.02 - 1980.09.01) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு; இவரது தாய் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை. இவரது இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். இவர் ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில மொழியில் பயின்றார்.

இவர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றதுடன் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானியம், போத்துக்கீயம், ரஷ்சியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவரானார். இவர் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமிலுள்ள வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதித் தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார். இவ்வாய்வுக் கட்டுரை 1960 இல் நூல் வடிவில் வெளியானது.

இவர் 1945 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவரது தமிழறிவினைக் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்கி இளமாணிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொண்டு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் தூத்துக்குடியில் பணியாற்றிய போது தமிழ் இலக்கியக் கழகத்தையும் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தையும்" (Academy of Tamil Culture) தோற்றுவித்துச் சிறிது காலம் அதன் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இவர் தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தினார். இவரால் The Carthaginian Clergy, Nature in the ancient poetry, Aspects of Tamil Humanism, Indian thought and Roman Stoicism, தமிழ்த்தூது, உலக ஒழுக்கவியலில் திருக்குறள் போன்ற பல நூல்கள் வெளியிடப்பட்டது. அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அவரது சிலை தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகத்தால் திறந்து வைக்கப்பட்டது. நெடுந்தீவு மக்கள் இவருக்கு ஆளுயச் சிலை அமைத்துள்ளனர். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரின் தமிழ்ச் சேவையை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயகம் அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 116-124
  • நூலக எண்: 4413 பக்கங்கள் 15-21
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 18-20
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 40-45
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 216-226
  • நூலக எண்: 955 பக்கங்கள் 30-38
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 23-27
  • நூலக எண்: 13171 பக்கங்கள் 02-03