ஈழத்தின் வரலாற்றில் மிக முக்கியமானதும் சிக்கலானதுமான காலப்பகுதி 1990 முதல் 2008 வரையிலானதாகும். இவ் இடர்காலத்தில் நிலவிய ஆயுத மோதல்கள், இடம்பெயர்வுகள், வளக் குறைபாடுகள் மற்றும் நிர்வாகத் தடைகள் ஆகியவை சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளை ஆழமாக பாதித்தன. அந்தச் சூழலில் உருவான பொருளாதார மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த ஆவணங்கள், அக்காலத்தின் வாழ்வியல், நிர்வாக நடைமுறைகள், வள மேலாண்மை, மீளுருவாக்க முயற்சிகள் போன்ற நடைமுறைகள் அடங்கும்.இந்தச் செயற்திட்டத்தின் நோக்கம், 1990–2008 இடர்காலத்தில் உருவான அரசாங்க மற்றும் அரசு சாரா நிர்வாக ஆவணங்கள், பொருளாதார அறிக்கைகள், திட்ட முன்மொழிவுகள், இடர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை சேகரிப்பதுடன் ஈழத்து சமூகத்தின் இடர்கால அனுபவங்களை வாய்மொழி மூலமாக பெற்று ஆவணப்படுத்தி, எண்ணிம வடிவில் பாதுகாப்பதாகும். இவ்வாவணங்கள் காலப்போக்கில் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுவதோடு, ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் அணுகக்கூடியதாக மாற்றப்படுவது இத்திட்டத்தின் மைய நோக்கமாகும்.