நிறுவனம்:அம்/ நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம்

From நூலகம்
Name அம்/ நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place நற்பிட்டிமுனை
Address நற்பிட்டிமுனை, அம்பாறை
Telephone
Email
Website

நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை பிரிவிற்குட்பட்ட எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்தில் இவ்வாலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்தின் அடியில் சிறுகல்லொன்றைப் பிரதிட்சைப்படுத்தி மக்கள் வழிபடத் தொடங்கினர்.

ஓலைக் கிடுகுகளால் அமைக்கப்பட்ட ஒருசிறு பந்தலிலே அம்பலத்தடிப் பெருமான் முதலில் இருத்தப்பட்டார். காரையடிக்குளம் என அழைக்கப்பட்ட வண்டல்மண் கொண்ட தாழ்நிலப்பகுதியை அண்டியதாகக் காணப்பட்ட சற்று உயரமான இடம் இக்கோயில் காணப்படும் பகுதியாகும். வாகை, வம்மி, இத்தி என சுற்றிவர பெருவிருச்சங்கள் வளர்ந்து நிற்கின்றன. நடைவழியில் தங்கிநிற்போர் நினைந்துருகி தம்துன்பம் சொல்லும் இறைவனாகவும் அம்பலத்தடிப் பிள்ளையார் வணங்கப்பட்டார்.

1930-35 காலப்பகுதியில் 'தாஸ்' என அழைக்கப்பட்ட அன்பரொருவர் வழக்கு ஒன்றில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என அம்பலத்தடியானை வேண்டி நேர்த்தி செய்தார். வழக்கில் வெற்றி கிடைத்தது. அம்பலத்தடியானுக்கு கல்லினால் சிறு கட்டிடம் அமைத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். இதுவே எம்பெருமானுக்கு அமைக்கப்பட்ட ஆரம்பக் கட்டிடமாகும்

1980களின் பிற்பகுதியில் அம்பலத்தடிப் பிள்ளையாரின் அருளினால் ஆலயத்திற்கு முறைப்படியான ஒரு நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. இதிலிருந்து ஆலய நிர்மானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கும் திருப்பணிச் செயற்பாடுகள் செவ்வனே செய்யப்படுவதற்கும் திருவருள் கைகூடியது. ஆரம்பத்தில் ஆகம முறையிலான பூசைகளற்ற வழிபாட்டுமுறைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆகம முறையிலமைந்த ஒரு முழுமையான ஆலயத்தை அமைக்கும் கட்டடத் திருப்பணிவேலைகள் 1999களில் ஆரம்பமானது. ஆலயத்தின் மூலஸ்தானம் அமையவேண்டிய இடத்தில் ஆலயமூல விருட்சமான ஆலமரம் நின்றது. அதன் அடியில் நாகங்கள் இருப்பிடம் கொண்டுவாழ்ந்து வந்தன. இதனால் ஆலய கட்டடத் திருப்பணிக்காக இவ்விருட்சத்தினை எவ்வாறு அகற்றுவது என்ற கேள்வி விடைகாண முடியாதவொன்றாயிருந்தது. இவ்வேளையில் ஒருநாள் திடீரென வானம் கறுத்து மழை தூறத் தொடங்கியது. கூடவே சூறைக் காற்றும் வீசியது. கிராமத்தின் வேறெந்தப்பகுதியிலும் இக்காற்று ஒரு கிளையைத்தானும் உடைக்கவில்லை. ஆனால் ஆலயவிருட்சத்தின் கிளைகள் முறித்தெறியப் பட்டிருந்தன. இச்செய்திகேட்டு பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டனர். ஆலய கட்டடத் திருப்பணிகளை உடனே ஆரம்பிப்பதற்கான இறைவனின் ஆணையாகவும், இறைவனே இயற்கையின் வடிவில் இப்பணியினை ஆரம்பித்து வைத்ததாகவும் பக்தர்கள் நெஞ்சுருகிக் கொண்டாடினர்.

ஆகம விதிமுறைப் படியான எம்பெருமானின் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2008ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.ஆனி உத்தரத்துடன் முடிவடையும் பத்து நாட்கள் திருவிழாக்காலமாகும்.

வெளி இணைப்பு