ஆளுமை:பத்மினி, குணசீலன்

From நூலகம்
Name பத்மினி
Birth
Place யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மினி, குணசீலன் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் பிறந்த பெண் கலைஞர். நடனம், சங்கீதம் இரண்டையும் வெவ்வேறு ஆசியர்களிடம் கற்றார். சங்கீதத்தை சங்கீதபூசணம் இராஜலிங்கம் அவர்களிடமும் திருமதி ஞானமணி செல்லையா அவர்களிடம் பரதநாட்டியத்தையும் கற்றார். இராமநாதன் கல்லூரியில் படிக்கும் போது கலாசார விழாக்களில் நடனத்திலும் நாட்டிய நாடகத்திலும் பங்குகேற்று நடித்துள்ளார்.

இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் வாய்ப்பாட்டும், வீணையும் கற்றார். தொடர்ந்து இந்தியா சென்று தமிழ்நாடு அடையாறு இசைக்கல்லூரியில் கற்று வாய்ப்பாட்டிலும் வீணையிலும் சங்கீத வித்துவான் பட்டமும் பெற்றார். அடையாறு பரதசூடாமணி நடனப் பள்ளியில் பத்மஸ்ரீ அடையாறு கே.லக்ஷ்மன் அவர்களிடம் பரதநாட்டியத்திலும் நட்டுவாங்கத்திலும் டிப்ளோமா பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை வந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடன விரிவுரையாளராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து பண்டதரிப்பு மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் போது அகில இலங்கை நாட்டிய நாடகப் போட்டியில் இவரது நாட்டியநாடகமான அல்லி அர்ஜுனன் நாடகம் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் இரண்டு வருடங்கள் நடனத்தில் பிரேத்தியேக ஆசிரியர் பயிற்சி பெற்று நீர்கொழும்பு கடற்கரைத்தெரு மகளிர் பாடசாலை, விஜயரட்ணம் மகாவித்தியாலயம் ஆகிய கல்லூரிகளிலும் பணியாற்றி 1985ஆம் ஆண்டு இலண்டனுக்கு புலம்பெயர்ந்தார்.

நர்த்தன கலாலயம் என்னும் கலைப்பள்ளியை உருவாக்கி வாய்ப்பாட்டு, நடனம் ஆகிய கலைகளை கற்றுத்கொடுத்து வருகிறார். பல மாணவர்களை உருவாக்கியுள்ளதுடன் 43 மாணவர்களுக்கு அரங்கேற்றம் செய்துள்ளார். 1986ஆம் ஆண்டிலிருந்து வோல்தம்ஸ்ரோ தமிழ் பாடசாலை, இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலயம், ESSEX தமிழ்க் கழகம், வட இங்கிலாந்து Scunthorpe Indian Dance and Music கழகத்திலும் ஆகியபற்றில் கலைச்சேவையை செய்து வருகிறார். சொக்கன், வீரமணிஐயர், வித்துவான் குமாரசாமி சோமசுந்தரம் ஆகியோர் எழுதிய பல நாட்டிய நாடகங்களை மேடையேற்றியுள்ளார். லண்டனில் 25க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

புலவர் சிவநாதன் எழுதிய பிரபஞ்ச லீலை என்ற நாட்டிய நாடகம் மார்கழி இசைவிழாவில் சென்னையிலும் மதுரையிலும் அரங்கேற்றப்பட்டது. இதன்போது உலகத் தமிழ் மையம், உலக தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் 2014ஆம் ஆண்டு அந்த நேர தமிழ்நாடு கல்வி அமைச்சர் வீரமணி அவர்கள் நாட்டிய கலா வித்தகி என்ற பட்டததை வழங்கிக் கௌரவித்தார். இலண்டனில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் Academy of fine arts என்ற பரீட்சை நிறுவனத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் பரதநாட்டிய பரீட்சையின் பொறுப்பாளராகவும் பிரதம பரீட்சையாளராகவும் கடந்த 30 வருடமாக கடமையாற்றுகிறார்.

விருதுகள்

2013ஆம் ஆண்டு நர்த்தன வித்தகி

2016ஆம் ஆண்டு அகில உலக நாட்டியப் போட்டியில் நாட்டிய சம்பூரணி

2017ஆம் ஆண்டு வோல்தம் பொரஸ்ட் தமிழ் அமைப்புகளால் புலர்ஒளி

2018ஆம் ஆண்டு Hidden Idel London இல் நடத்திய வெள்ளி விழா நிகழ்ச்சியில் Extra ordinary service award

2019 Global achievement award