ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்

From நூலகம்
Name தர்ஜினி
Pages சிவலிங்கம்
Birth 1979.12.30
Pages -
Place யாழ்ப்பாணம்
Category விளையாட்டு வீராங்கனை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
TharjiniSivajilingam.jpg

தர்ஜினி, சிவலிங்கம் (1979.12.30) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்துள்ளார். இவரது தந்தை சிவலிங்கம்; ஆரம்ப கல்வியை ஈவினை தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர் கல்வியை வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.

தர்ஜினி கிழக்கு பல்கலைக்கழத்தில் கலைமானி பட்டதாரியாவார்.வலைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தமது விளையாட்டை பாடசாலை நாட்களிலேயே ஆரம்பிப்பது அனைவரும் அறிந்த நிலையில், தர்ஜினி சிவலிங்கம் தனது 23ஆவது வயதிலேயே வலைப்பந்தாட்ட விளையாட்டுக்கான பிரவேசத்தை பெற்றுள்ளார். தர்ஜினி சிவலிங்கத்தின் உயரம் 6 அடி 10 அங்குலம். அது வலைப்பந்தாட்ட போட்டிகளில் அவரை மேலோங்கி செல்ல உதவியது.

தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்ட அணிக்குள் பிரவேசித்த விதம் 2004ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தர்ஜினி சிவலிங்கம் விளையாடியுள்ளார். அன்றைய தினம் தர்ஜினியின் திறமைகளை நேரில் கண்ட அனைவரும், அவரின் திறமையை கண்டு வியப்படைந்துள்ளனர். அன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச, தர்ஜினி சிவலிங்கத்தை தேசிய அணியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார். இந்த நிலையிலேயே தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய அணிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி சரியாக பிரகாசிக்காத போதிலும், தர்ஜினி சிவலிங்கம் மாத்திரம் தொடரில் 290 கோல்களை போட்டு உலக வலைப்பந்தாட்ட ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். இலங்கை வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக தர்ஜினி சிவலிங்கம், 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னரான காலப் பகுதியில் தான் பணியாற்றிய வங்கி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி சிவலிங்கம், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியா லீக் போட்டிகளில் தொழில்சார் வலைப்பந்தாட்ட வீராங்கனையாக இணைந்துக் கொண்டுள்ளார். இலங்கை தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட ஆரம்பித்தார். தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முதலாவது இலங்கையர் என்ற பெருமை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இந்த போட்டிகளின் ஊடாக கிடைத்தது. தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்திரேலியாவில் மிக சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்பின்னர் தர்ஜினி சிவலிங்கம் இலங்கை தேசிய அணிக்குள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய வலைப்பந்தாட்ட அணியின் துணைத் தலைவியாகவும் இருந்துள்ளார் தர்ஜினி. இதன்பின்னர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை பெற தர்ஜினி சிவலிங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நான்கு தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட அணியின் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். உலகிலேயே மிக உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையாகவும், கோல் போடும் (சூட்டர்) வீராங்கனையாகவும் தர்ஜினி சிவலிங்கம் விளங்குகிறார். அவுஸ்திரேலிய கழகங்களுக்கு இடையில் விளையாடிய ஒரே இலங்கைப் பெண் என்ற பெருமையையும் கொண்டவர் தர்ஜினி.

தொடர்ந்து 12 வருடங்களாக இலங்கை அணியில் விளையாடி வருவதாக தெரிவிக்கிறார். மாணவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல ஒழுக்க சீலர்களாக வளரவும் விளையாட்டு மிக முக்கியமானதென குறிப்பிடும் இவர் எதிர்காலச் சந்ததியினருக்கு என வட மாகாணத்தில் ஒரு அக்கடமி ஒன்றை கட்ட வேண்டுமென வேண்டுகோளையும் முன் வைக்கிறார். விளையாட்டின் மூலமான நல்லதொரு எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கலாம் என்பது தர்ஜினி சிவலிங்கத்தின் கருத்தாகும். இவர் 2011ஆம் ஆண்டு உலகின் சிறந்த வலைபந்தாட்ட Shooter 2009, 2012 ஆம் ஆண்டு உலகின் சிறந்த வலைபந்தாட்ட Shooter போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்