ஆளுமை:வலன்ரீனா, இளங்கோவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வலன்ரீனா
தந்தை ஏ.எஸ்.நடராசா
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1971.01.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வலன்ரீனா, இளங்கோவன் (1971.01.08) யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏ.எஸ்.நடராசா; தாய் பரமேஸ்வரி. ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி, வயாவிளான் மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் உயர்நிலைக் கல்வியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியாவார். தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி டிப்ளோவையும் யாழ் பல்கலைக்கழத்தில் சைவசித்தாந்தத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் யாழ் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தையும் முடித்துள்ளார். அத்தோடு வட இலங்கை சங்கீதசபை பரதநாட்டியம், வீணை, வாய்ப்பாட்டு ஆகிய பரீட்சைகளில் தரம் 4, 3 தரச் சித்தி. பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் யுத்தம் காரணமாக பல வருடங்களின் பின்னர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள இவரின் சொந்த இடமான குரும்பசிட்டிக்கு தனது சொந்த விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற்று ஆரம்ப வகுப்புக்களை மட்டும் கொண்ட யா/குரும்பசிட்டி பொன்பரமானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கிறார். எழுத்துத்துறை சார்ந்து கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ள வலன்ரீனா யா/வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை, கொக்குவில் இந்துக்கல்லூரி, மண்டைதீவு மகாவித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, யா/பொன் பரமானந்தர் மகாவித்தியாலயம், அன்பொளி கல்விநிலையம், ஏ.எஸ்.என் கல்வி நிலையம் ஆகியவற்றின் கொடிக்கீதம், வரலாற்றுக் கீதங்களை இயற்றி வழங்கியுள்ளார்.

இவரின் ஆக்கங்கள் வெற்றிமணி, வலம்புரி, உதயன், தினக்குரல் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. அபிநயா கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் வெற்றிமணி இலங்கை நாளிதழின் பிரதம ஆசிரியராகவும் சிவத்தமிழ் சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் உள்ளார். ஐயை உலகத்தமிழ் மகளிர் குழுமம் இலங்கைக்குழுமம் ஒருங்கிணைப்பாளர், தமிழர் மரபு அறக்கட்டளை இலங்கை பொறுப்பாளர்களில் ஒருவர், குரும்பசிட்டி நலிவுற்றோர் நலநோம்பு நிலையச் செயலாளர், ஏ.எஸ்.என் கல்வி நிலைய இயக்குனர், ஏ.எஸ்.என் கல்விநிலைய மாணவர் சமூகசேவைக்கழகம் தோற்றுனர், பொறுப்பாசிரியர், ஏ.எஸ்.என் நுண்கலைத்துறைப் பொறுப்பாசிரியர், ஆ.சி.நடராஜா நுண்கலைமன்ற தோற்றுனர், திருமறைக்கலாமன்றம், கலைத்தூது அழகியற் கல்லூரியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என பல சமூக அமைப்புக்களில் இணைந்து சமூக சேவைகளை மேற்கொண்டு வருகிறார் வலன்ரீனா. யாழ்ப்பாண நாட்டிய மரபுகள், இந்துநாகரீகம், பரமானந்தம், கலைமகன், ஆனந்தச்சுடர் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மதுரை அரசாளும் மீனாட்சி, கலைச்சங்கமம், சங்கமம் ஆகிய இறுவெட்டுக்களையும் வெளியிட்டுள்ளதோடு, சைவசித்தாந்த நோக்கில் சிவநடனம், யாழ்ப்பாணத்து இந்துக்கோயிற்கலைகளில் சின்னமேள ஆடற்கலை, யாழ்ப்பாணத்து பெண் ஆடற்கலைஞர்கள் ஆகிய தலைப்பிலான நூல்கள் வெளிவரவுள்ளன. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா? என்ற தலைப்பில் 2012ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு ஆய்வுக்கட்டுரை, சமர்ப்பிக்கப்பட்டது. ஐயை உலகத் தமிழ் பெண்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்றபோது ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு ஓர் பெண்ணிய நோக்கு, உலகத் தமிழ் பெண்கள் மாநாடு 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது ஈழப்போரில் பாதிக்கப்பட் பெண்களும், கருணைப்பால உதவித்திட்டமும் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.


விருதுகள்

ஜனாதிபதி விருது – 1998 தேசிய மட்ட புதிய நிர்மாணிப்பு நடனத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம். குரு பிரதீபா பிரபா நல்லாசிரியர் விருது 2017 வடமாகாண கல்வி அமைச்சு. புலமையாளர் விருது யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம் குரும்பசிட்டி 2017 கல்வி, கலை, கலாசார, சமய, சமூக ஊடகப் பணிகளுக்காக ஜேர்மன் ஹம் நகர மேயர் தோமஸ் அவர்களால் வெற்றிமணி விருது 2008. வளர்கலை விருது ஜேர்மனி 2012 வெற்றிமணி ஐயை சக்தி விருது உலக ஐயைகள் மாநாடு 2018ஆம் ஆண்ட மலேஷியாவில் வைத்து வழங்கப்பட்டது. உலக ஐயை பெண்கள் பண்நாட்டு கருததரங்கில் ஐயை சுடர்ஒளி விருது வழங்கப்பட்டது. நந்தவனம் பவுண்டேசன் லிம்ரா பேக்ஸ் விரைவேட் லிமிடெட் இணைந்து வழங்கிய சர்வதேச சாதனைப் பெண் விருது.

இந்தியாவில் சென்னையில் நடைபெற்ற ஐயை உலகத்தமிழ் மகளிர் குழுமத்தின் 2ஆவது மாநாட்டில் ஐயை சுடரொளி விருது.

2019ஆம் ஆண்டு சென்னை எதிராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் ஈழத்தில் குறிப்பாக வட மாகணத்தில் போருக்குப் பின் பெண்களின் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றி நினைவு பரிசையும் கௌரவிப்பையும் பெற்றுக்கொண்டார்.

2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நந்தவனம் பப்பிளிகேசன் நிறுவனம் மற்றும் லிம்ராபேர்க்ஸ் நிறுவனம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வில் சர்வதேச சாதனைப் பெண் விருதினை நக்கீரன் பத்திரிகை ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற சிலப்பதிகார மாநாட்டிற்கு சிலம்பு கண்ணகி வழிபாடு இலங்கையில் கண்ணகித் தெய்வ வழிபாடு ஒரு நோக்கு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சான்றிதழ் பெற்றார்.

இந்தியா திருச்சியில் இனிய நந்தவனம் பப்பிளிக்கேசன் நிறுவனத்தின் நடைபெற்ற சாதனை மாணவர் விருது வழங்கும் விழாவில் ASN Institute ஊடாகவும் மாணவர்களுக்கு வலன்ரீனா வழங்கும் சேவையை பாராட்டி கல்விச் செம்மல் விருது.

வலன்ரீனாவின் சமூக சேவைகள் மற்றும் கல்விப் பணிகளைக் கௌரவித்து 27.02.2020 சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் மதுரை கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு.

தினக்குரல் பத்திரிகையின் கல்விக்குரல் நடாத்தும் கௌரவிப்பு விழாவில் சிறந்த ஆசிரியர் என்ற விருது - 2019.


சென்னை எதிராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில ஈழத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் போருக்குப் பின் பெண்களின் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றிய நினைவு பரிசையும் கௌரவிப்பையும் பெற்றுக்கொண்டார் - 2019.

2020ஆம் ஆண்டு ஜேர்மனி வெற்றிமணி பத்திரிகையினால் வெற்றிமணி விருது.


குறிப்பு : மேற்படி பதிவு வலன்ரீனா, இளங்கோவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 16545 பக்கங்கள் 6


வெளி இணைப்புக்கள்