ஆளுமை:கோமதிதேவி, செல்வநாதன்

From நூலகம்
Name கோமதிதேவி, செல்வநாதன்
Birth 1946.07.07
Place நல்லூர்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோமதிதேவி, செல்வநாதன் (1946.07.07 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவர் யாழ்ப்பாணம் தொழில்னுட்பக் கல்லூரியிலும் பலாலி ஆசிரிய கலாசாலையிலும் முதுநிலைக் கல்வி பயின்றதோடு ஓவியர் சிற்பத்தேர்வில் ஆசிரியர் தேர்வுச் சான்றிதழையும் பெற்றுள்ளார். வர்ணப் படவாக்கம், அமைப்பும் அலங்கரிப்பும், உயிரோவியம், நிலைப்பொருட்கூட்டம், சிற்ப ஆக்கம், கலைமதிப்பீடு ஆகியவற்றில் ஆற்றல் கொண்டு விளங்கினார்.

காரைநகர் சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்மன் ஆலய ஓவியங்கள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நடனப் பயிலகம், தொல்புரம் ஜெகஜோதி அம்பாள் ஆலய ஓவியங்கள், சுன்னாகம் வித்துவான் மு. சிவபாதசுந்தரநாதரின் தமிழ் நிலைக் கண்காட்சி, மானிப்பாய் ஈஸ்வரம்மா ஶ்ரீ சத்தியசாயி சேவா நிலையம், நவாலி முருகன் கோவில், விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாற்றுப் புத்தக முன்பக்க ஓவியம், பாப்பாமலர் புத்தகம் ஆகியவற்றின் மூலம் தன் ஓவிய ஆற்றுகையை வெளிப்படுத்தியிருக்கின்றார். மேலும் இக்கலைஞர் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கொழும்பு கலாபவனம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தட்டச்சுக்கூடம், வர்த்தக நிலையங்கள் பலவற்றின் விளம்பரப் பதாதைகள் மூலமும் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியுள்ளார்.

1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பலாலி ஆசிரியர் கலாசாலை நடத்திய ஓவியப் போட்டியில் சான்றிதழும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கான ஓவியப் போட்டியில் முதலாம் இடத்துக்கான சான்றிதழையும் இவர் பெற்றதோடு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இவரது ஓவிய வெளிப்பாட்டிற்காக 2006 ஆம் ஆண்டில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அத்தோடு இவர் 1988 ஆம் ஆண்டு அகில இலங்கை வெடியரசன் கலாமன்றத்தினரால் கௌரவிக்கப்பட்டபோது க. குணராசா (செங்கை ஆழியான்) அவர்களால் பாராட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 192