ஆளுமை:லூரிஸ்மேரி, உத்தரியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லூரிஸ்மேரி
தந்தை உத்தரியம்
தாய் பாக்கியமேரி
பிறப்பு 1983.08.02
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லூரிஸ்மேரி, உத்தரியம் (1983.08.02) கிளிநொச்சியில் பிறந்த கலைஞர். இவரது தந்தை உத்தரியம்; தாய் பாக்கியமேரி. ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி மகாவித்தியாலயம், இடைநிலைக் கல்வியை கிளி/புனித பற்றிமா றோ.க.த.க பாடசாலை உயர் கல்வியை கிளி/இந்துக் கல்லூரியில் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைமாணி (கிறிஸ்தவ நாகரிகம் சிறப்புக்கலை) பட்டதாரியாவார். தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தராக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி வருகிறார். லூரிஸ்மேரி. எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், ஓர்கன் வாத்தியக்கருவி வாசித்தல், நடிப்பு என இவர் பன்முகத்திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் பாதுகாவலன், சுடரொளி போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. புல்லணைச்சுடர் எனும் இறுவட்டை தயாரித்து அதில் உள்ள அனைத்துப்பாடல்களையும் லூரிஸ்மேரி அவர்களே எழுதியுள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது எழுதப்பட்ட கிறிஸ்மஸ் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவ் இறுவட்டு போரினால் ஏற்பட்ட வடுக்களையும் வலிகளையும் தாங்கிய காலத்தின் பதிவாக வெளிவந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் இரு பாடல்களை இவரே பாடியுள்ளார். இவரின் இப் பதிவு தொடர்பாக திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு.யோ.யோன்சன் ராஜ்குமார் அவர்கள் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இது ஒரு காலத்தின் பதிவு என குறிப்பிட்டுள்ளார். திருமறைக்கலாமன்றத்தினாலேயே இவரின் இறுவட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து வருடம் தோறும் நடாத்துகின்ற கே.பிரான்ஸிஸ் ஞாபகார்த்த கிறிஸ்மஸ் கரோல் போட்டியில் 2014ஆம் ஆண்டு பங்குபற்றி தேசிய ரீதியில் முதலாமிடத்தை இவரின் குழு பெற்றுக்கொண்டுள்ளது. இப்போட்டிகுரிய பாடல்கள் லூட்ஸ்மேரியினால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். இலங்கையில் சக்தி, நேத்ரா போன்ற தொலைக்காட்சிகளிலும் இவரின் கரோல் குழு பங்கு பற்றி வருகிறது. இக்கரோல் குழுவிற்கான பாடல்களையும் இவரே எழுதி இசையமைத்துள்ளார். திருமறைக்கலாமன்றத்தினால் வருடம்தோறும் மேடையேற்றப்படுகின்ற பாடுகளின் நாடகங்களில் பாடகியாகவும் நடிகையாகவும் பங்குபற்றி வருகிறார். திரு.யோ.ஜோன்சன் ராஜ்குமார் அவர்களால் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்ட அற்றைத்திங்கள் கூத்துருவ நாடகத்திலும் பின்னணிப் பாடகியாகவும் சிறிய கதாபாரத்திரங்களிலும் நடித்துள்ளார். திருமறைக்கலாமன்றத்தின் கவியரங்கம், பட்டிமன்றம், போன்ற நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார். இவரின் படைப்புக்கள் கிறிஸ்தவ மதம் சார்ந்ததாக அமைந்துள்ளது. பாதுகாவலன் பத்திரிகையில் இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் வெளிவந்துள்ளதுடன் இவரின் முகநூல் பக்கத்திலும் ஆக்கங்களை வெளியிட்டு வருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு லூரிஸ்மேரி, உத்தரியம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்