ஆளுமை:கருணாகரன், கந்தவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரன்
தந்தை கந்தவனம்
பிறப்பு 1945.12.05
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், கந்தவனம் (1945.12.05 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தவனம். இவர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் 6 ஆம் வகுப்பில் கற்கும் போதே கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். 1961 இல் யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கல்லூரியில் பயின்று சங்கீதரத்தினம் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கற்றுச் சங்கீத வித்துவான், இசை கற்பிப்பதில் டிப்ளோமாப் பட்டமும் பெற்றார். இராமநாதன் இசைக்கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டபோது, 1979 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் போதனாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த இசை- நடனக் கல்லூரியில் இசை விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணி புரிந்து மீண்டும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

1969 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் சிறிது காலத்தின் பின் இலங்கை வானொலியில் தமிழ்ச் சேவையின் வாத்தியக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். இவர் கர்நாடக இசையில் இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக 'ஆலாபனா' என்னும் சங்கீத சபாவைக் கொழும்பில் நடாத்தி வருகின்றார். இவர் எழுதிய "சங்கீதானுபவம்" நூல் 2011 ஜூன் மாதம் கொழும்பில் வெளியிடப்பட்டது.

இவரது கலைச்சேவையினைக் கெளரவித்து 2014 இல் தேசநேத்ரு விருது, வடமாகாண முதலமைச்சர் விருது ஆகியன வழங்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 174-177
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 56-57
  • நூலக எண்: 5973 பக்கங்கள் 150